என்னடா ஓவரா ஆடுறீங்க.. வடிவேலுக்கு போனிலேயே பளார் விட்ட கேப்டன்.. விஜயகாந்தை தலை குனிய வைத்த வடிவேலு
சென்னை: மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் குறித்து திரைத்துறையில் உள்ள பலதரப்பட்ட நடிகர்கள் ஒவ்வொன்றாக சொல்லச் சொல்ல நாளுக்கு நாள் ஆச்சரியம் அதிகரித்துக் கொண்டுதான் உள்ளது. அதிலும், வடிவேலுவின் சில நடவடிக்கைகள் குறித்து தெரிந்த பின்னர், கேப்டன் விஜயகாந்த் எடுத்த முடிவுகள், பலருக்கும் திரைத்துறையில் உதவியுள்ளது. அப்படியான ஒரு சம்பவம் குறித்து நடிகர் ஜெயமணி பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார். அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
நடிகர் வடிவேலு, நடிகராக தமிழ் சினிமாவே தூக்கிக் கொண்டாடும் நடிகர்களில் ஒருவராக விளங்குகின்றார். ஆனால், ஒரு மனிதராக அவரிடத்தில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக நகைச்சுவை நடிகர்கள் தொடங்கி பல்வேறு நடிகர்கள் பல பேட்டிகளில் கூறியுள்ளனர். அதிலும் குறிப்பாக விவேக் உடன் அவருக்கு இருந்த தொழில் போட்டியில், தன்னுடன் நடிக்கும் யாரோ ஒரு நகைச்சுவை நடிகர் விவேக்குடன் நடித்துவிட்டால், அவர்களை அதன் பின்னர் தான் நடிக்கும் படங்களில் சேர்த்துக் கொள்ள மாட்டாராம். இது மட்டும் இல்லாமல், அந்த நடிகர்களுக்கு வாய்ப்பு வழங்கக்கூடாது என தயாரிப்பு நிறுவனங்களிடமும் கூறிவிடுவாராம் வடிவேலு. இது தொடர்பாக பல்வேறு நகைச்சுவை நடிகர்கள் தெரிவித்துள்ளனர்.

வடிவேலு: வடிவேலுவால் பட வாய்ப்புகளை இழந்த நடிகர்கள் அப்போது நடிகர் சங்கத் தலைவராக இருந்த விஜயகாந்த்திடம் முறையிட்டு தங்களது பிரச்னையை சரி செய்து கொண்டுள்ளனர். வடிவேலுவால் பல தயாரிப்பாளர்களும் கூட பிரச்னைகளை எதிர் கொண்டுள்ளனர் என கூறப்படுகின்றது. குறிப்பாக சுந்தரா டிராவல்ஸ் படத்தின் தயாரிப்பாளருக்கும் வடிவேலுக்கும் இடையில் பெரும் பிரச்னையே ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தெரிந்து கொண்ட விஜயகாந்த் வடிவேலுவை அழைத்து மிரட்டிவிட்ட பின்னர்தான் வடிவேலு படத்தில் முறையாக நடித்துக் கொடுத்துள்ளார்.
விஜயகாந்த் : இப்படியான நிலையில், நடிகர் ஜெயமணிக்கும் வடிவேலுவுக்கும் எதோ ஒரு சந்தர்ப்பத்தில் மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் ஜெயமணிக்கு தான் நடிக்கும் படங்களில் வாய்ப்பு கொடுக்காமல் இருந்தது மட்டும் இல்லாமல், அவரது குடும்பத்தினரையும் மிரட்டியுள்ளார். இப்படியான நிலையில், நடிகர் ஜெயமணி கேப்டன் விஜயகாந்தை படப்பிடிப்புத் தளத்தில் சந்தித்து நடந்ததைக் கூறியுள்ளார். உடனே வடிவேலுக்கு போன் போட்ட கேப்டன், வடிவேலுவின் உதவியாளரிடம், ”என்னடா ஓவரா ஆடுறீங்க? வடிவேலுவை ஒழுங்கா இருக்கச் சொல்லு.. தியாகராஜர் மாதிரி ஆகிடுவீங்க” என மிரட்டிவிட்டுள்ளார்.
மன்னிப்பு : அதன் பின்னர், ஜெயமணி அவர்களின் வீட்டுக்கு போன் செய்து, அவரது மனைவியிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, நடந்த விஷயங்களுக்காக வருத்தம் தெரிவித்துவிட்டு, வடிவேலுக்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றேன் என மன்னிப்பு கேட்டுள்ளார், இதனை நடிகர் ஜெயமணி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. இதனைப் பார்த்த ரசிகர்கள் வடிவேலுவின் மோசமான நடவடிக்கைகளால், கேப்டன் விஜயகாந்த் மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை எல்லாம் ஏற்பட்டுவிட்டதே எனத் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











