Vijay - விஜய் நடித்த சீனில் நடிக்கமாட்டேன்.. அடம்பிடித்த நாகார்ஜுனா.. என்ன நடந்தது தெரியுமா?
சென்னை: Vijay (விஜய்) விஜய் நடித்த ஒரு சீனில் நடிக்கமாட்டேன் என நாகார்ஜுனா அடம் பிடித்த விஷயம் தெரியவந்திருக்கிறது.
விஜய் இப்போது வெற்றிகரமான கமர்ஷியல் ஹீரோவாக வலம் வருகிறார். அவரது படங்கள் அசால்ட்டாக நூறு கோடி க்ளப்பில் இடம்பிடித்துவிடுகின்றனர். சமீபத்தில் நடித்த வாரிசு படம் 300 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் லியோ படத்தின் பட்ஜெட்டே 300 கோடி ரூபாயை தாண்டியிருப்பதாகவும் கோலிவுட்டில் ஒரு தகவல் பரவியது. அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க 175 கோடி ரூபாய் சம்பளம் என்றும் பேச்சு ஓடுகிறது.

கமர்ஷியல் கிங்: விஜய் இப்போது கமர்சியல் கிங்காக ராஜபாட்டை நடத்திவந்தாலும் ஆரம்பத்தில் குடும்பங்கள் கொண்டாடும் படங்கள், காதல் படங்களில் நடிப்பதற்கு அதீத கவனம் செலுத்தியவர். அந்த ஜானரில் அவர் நடித்த படங்களும் ஹிட்டாகி அவருக்கு கை கொடுத்தன. அப்போது போடப்பட்ட விதைதான் விஜய் கமர்ஷியல் ஹீரோவாக இருந்தாலும் இப்போதும் அவரது படங்களை குடும்பத்தோடு பார்ப்பதற்கும், பெண்கள் பார்ப்பதற்கும் ஒரு எதிர்பார்ப்பு இருந்துவருகிறது.
துள்ளாத மனமும் துள்ளும்: அப்படி அவர் நடித்த படங்களில் முக்கியமான படம் துள்ளாத மனமும் துள்ளும். இயக்குநர் எழில் அந்தப் படத்தின் மூலம்தான் இயக்குநராக அறிமுகமானார். விஜய், சிம்ரன் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் 1999ஆம் ஆண்டு வெளியாகி சக்கைப்போடு போட்டது. முக்கியமாக விஜய்யின் கேரியரில் தி பெஸ்ட் படங்கள் என்ற லிஸ்ட்டை எடுத்தால் அதில் துள்ளாத மனமும் துள்ளும் நிச்சயம் இடம்பெறும்.
குட்டியாக கலக்கிய விஜய்: துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் முதலில் வடிவேலுதான் ஹீரோவாக நடிக்க வேண்டியிருந்தது. ஆனால் சில காரணங்களால் அவர் விலகிவிட விஜய் உள்ளே வந்தார். குட்டி என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருந்த அவருக்கு அந்தப் படம் நன்றாகவே தீனி போட்டது. சாந்தமான நடிப்பு, அளவான அழகு, கேஷுவல் லுக் என விஜய் வேறு பரிணாமத்தில் தோன்றி அசத்தியிருந்தார்.
குறிப்பாக தனது தாய் இறந்ததை யாருக்கும் தெரியாமல் தன்னுள் புதைத்து அழுதது, க்ளைமேக்ஸில் காவல் துறையிடம் அடி வாங்கி கலங்கி நிற்பது என விஜய்யின் நடிப்பை இப்போது பார்த்தாலும் பலரது கண்கள் கலங்கும். படம் தமிழ்நாட்டில் மெகா ஹிட்டடித்தது.
நடிக்க மறுத்த நாகார்ஜுனா: தமிழில் அந்தப் படம் மெகா ஹிட்டானதும் தெலுங்கில் ரீமேக் ஆனது. அதில் நாகார்ஜுனா கதாநாயகனாக நடித்தார். ஷூட்டிங் சுமூகமாக போய்க்கொண்டிருந்தபோது ஒருநாள் சென்னையில் இருந்த தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரிக்கு ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து ஃபோன் வந்திருக்கிறது. அப்போது, படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் நாகார்ஜுனா நடிக்க மறுப்பதாக கூறியிருக்கிறார்கள்.

பெட் கட்டிய சௌத்ரி: உடனே விமானத்தை பிடித்து ஷூட்டிங் ஸ்பாட் சென்ற ஆர்.பி.சௌத்ரி என்ன விஷயம் என நாகார்ஜுனாவிடம் கேட்டிருக்கிறார். அதற்கு அவரோ, ஒரு கலெக்டர் சாலையில் ஓடிவருவதை தெலுங்கு மக்கள் விரும்பமாட்டார்கள். எனவே நான் இதில் நடிக்கமாட்டேன் என கூறியிருக்கிறார். ஆனால் ஆர்.பி.சௌத்ரியோ இல்லை இதில் நடி. அப்படி இந்த சீனுக்கு ரசிகர்கள் ரெஸ்பான்ஸ் கொடுக்கவில்லை என்றால் ஏற்கனவே பேசியதைவிட பத்து மடங்கு சம்பளம் தருகிறேன் என கூறியிருக்கிறார்.
இதனையடுத்து வேண்டா வெறுப்பாக நாகார்ஜுனா அந்த சீனில் நடித்து படமும் வெளியாகிவிட்டது. ரிலீஸுக்கு பிறகு நகரியில் இருக்கும் ஒரு திரையரங்கில் நாகார்ஜுனா படம் பார்த்திருக்கிறார். அப்போது சௌத்ரி சொன்னபடியே க்ளைமேக்ஸ் சீன் வரும்போது ரசிகர்கள் நல்ல ரெஸ்பான்ஸ் கொடுத்திருக்கின்றனர். அதுவும் எழுந்து நின்று கைதட்டியிருக்கின்றனர். இந்தத் தகவலை பத்திரிகையாளர் செய்யாறு பாலு பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











