உன்னை யார் உள்ளே விட்டது.. மணிரத்னத்தை அசிங்கப்படுத்தினாரா இளையராஜா?.. பிரபலம் இப்படி சொல்றாரே
சென்னை: இசைஞானி இளையராஜா தமிழ் சினிமாவின் இசையை மாற்றி அமைத்தவர். அவர் வந்த பிறகுதான் கன்னியாகுமரி மீனவரிலிருந்து வரப்பில் இருக்கும் விவசாயிவரை அனைவரும் இசைக்காக வாய் திறந்தனர். எத்தனையோ இசையமைப்பாளர்கள் இனி வந்தாலும் அவர் போட்ட பாதையில்தான் பயணிக்க வேண்டும் என்ற நிலை இருக்கிறது. இந்தச் சூழலில் பத்திரிகையாளர் செய்யாறு பாலு இளையராஜா பற்றி பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் இசையை மாற்றியவர்களில் முதன்மையானவர் இளையராஜா. மேடை நாடகங்களுக்கு தனது சகோதரர்களுடன் இசையமைத்துக்கொண்டிருந்த இளையராஜா அன்னக்கிளி படம் இசையமைப்பாளராக அறிமுகமானார். 1975ஆம் ஆண்டு வெளியான அப்படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் மெகா ஹிட்டாகின. இன்னும் சொல்லப்போனால் அந்தப் படத்தின் இசையை கேட்டபிறகுதான் வரப்பில் இருப்பவரின் வாயும் பாடலுக்காக திறந்தது.

அன்னக்கிளி: அன்னக்கிளி பாடல்களின் மெகா ஹிட்டுக்கு பிறகு இளையராஜா தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக உருமாறினார். ஒரு நாளில் பத்து படங்களுக்கு இசையமைக்கும் அளவுக்கு படு பிஸியாக இருந்தார். அதில் ஆச்சரியம் என்னவென்றால் அந்த பத்து பட பாடல்களும் புதுமையாகவும், ரசிகர்களை கவரும்படியும் அமைந்ததுதான். அந்த அளவுக்கு இளையராஜா தனது உயிரை கொடுத்து உழைத்தார்.
இயக்குநர்களின் காத்திருப்பு: இளையராஜாவின் இசை இருந்தால்போதும் தங்களுடைய படம் நிச்சயம் ஹிட்டாகிவிடும் என்ற எண்ணமே அப்போதைய இயக்குநர்களுக்கு இருந்தது. இளையராஜாவுக்கு பிறகு எத்தனையோ இசையமைப்பாளர்கள் வந்தாலும் இதுவரை எந்த இயக்குநருக்கும் இளையராஜா இசை இருந்தால் ஹிட் என்ற நம்பிக்கை வேறு இசையமைப்பாளர் மீது இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இசைஞானி: இதுவரை 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கும் இளையராஜா கடைசியாக மாடர்ன் லவ் சென்னை என்ற ஆந்தாலாஜிக்கு மூன்று கதைகளுக்கும், வட்டார வழக்கு படத்துக்கு இசையமைத்தார். மாடர்ன் லவ் சென்னை ஆந்தாலாஜிக்கு அவர் அமைத்த இசை இப்போதைய 2K கிட்ஸுகளுக்கும் பிடித்துப்போயிருப்பதன் மூலம் தெரிந்துகொள்ளலாம் இளையராஜா எப்போதுமே வற்றாத இசை நதி என்பதை. அடுத்ததாக அவரது இசையமைப்பில் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிவருகிறது. அவரது பயோபிக்கும் உருவாகிறது.
செய்யாறு பாலு பேட்டி: இந்நிலையில் மணிரத்னத்தை இளையராஜா அசிங்கப்படுத்தியதாக பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்திருக்கிறார். அவர் அளித்த பேட்டி ஒன்றில், 'கவிதாலயா நிறுவனத்துக்காக மணிரத்னம் ஒரு படம் செய்வதாக இருந்தது. அதற்கு இளையராஜாதான் இசை. அவரிடம் கதை சொல்லிவிட்டு; ட்யூனை வாங்கி வருமாறு பாலசந்தர் அனுப்பினார். மணிரத்னமும் கதை சொல்வதற்காக சென்றிருந்தார்.
யார் உள்ளே விட்டது: அப்போது பிரசாத் ஸ்டூடியோவில் இளையராஜா ஸ்டூடியோ இருந்தது. மணிரத்னம் நேராக ஸ்டூடியோ உள்ளே சென்றார். உடனே இளையராஜாவோ, உன்னை யார் உடனே உள்ளே விட்டது. வெளியே போய் அந்த மரத்தடியில் நில்லு நான் கூப்பிடுகிறேன் என்று சொல்லிவிட்டார். மணிரத்னமும் மரத்தடியில் காத்திருந்தார். இது பாலசந்தருக்கு தெரிந்துவிட்டது. அவர் கோபத்துடன் அங்கு வந்து மணிரத்னத்தை காரில் ஏற்றிக்கொண்டு செல்லும்போது; இவர் வேண்டாம் புதிய ஆளை இறக்குவோம் என்று சொல்லித்தான் ஏ.ஆர்.ரஹ்மானை அறிமுகப்படுத்தினார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











