எவ்வளவுதான் இருந்தாலும் அவர் அந்த விஷயத்தில் வீக்தான்.. செந்தில் பற்றி சீக்ரெட் சொன்ன மனைவி
சென்னை: நடிகர் செந்தில் 80கள், 90களில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர். கவுண்டமணியுடன் அவர் சேர்ந்து செய்த காமெடிகள் அனைத்துமே மிகப்பெரிய அளவில் இன்றுவரை ரசிகர்களால் அதிமாக கொண்டாடப்படக்கூடியது. செந்திலின் உடல் மொழியும், அவரது டயலாக் டெலிவிரியும் பாமரத்தனமாக இருந்ததன் காரணத்தாலேயே அவர் பெரும்பாலானோரால் ஏற்றுக்கொள்ளப்பட்டார். இந்தச் சூழலில் அவர் குறித்து அவரது மனைவி பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
ஒரு கோயில் இரு தீபங்கள் என்ற படத்தின் மூலம் சினிமாவில் சிறிய ரோலில் தோன்றினார் செந்தில். அதனைத் தொடர்ந்து கிளிஞ்சல்கள், மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா, கோபுரங்கள் சாய்வதில்லை உள்ளிட்ட பட வாய்ப்புகள் கிடைத்தன. இருந்தாலும் அவர் எதிர்பார்த்தபடியான பெயர் செந்திலுக்கு கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட சூழலில் மலையூர் மம்பட்டியான படத்தில் நடித்ததன் மூலம் பெரும் வெளிச்சம் கிடைத்தது.

செமகாம்போ: அதனையடுத்து கவுண்டமணியுடன் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார் செந்தில். இரண்டு பேரின் காம்போவும் அதிரிபுதிரி ஹிட்டடித்தது. வைதேகி காத்திருந்தாள், கரகாட்டக்காரன், சின்னக்கவுண்டர் என அவர்கள் நடித்த ஏராளமான படங்கள் இன்றுவரை பலரது ஃபேவரைட். கவுண்டமணி ஒருபக்கம் செந்திலை கவுண்ட்டர் அடிப்பது, உடலில் அடிப்பதும் என இருந்தாலும் செந்தில் எந்த ஈகோவும் பார்க்காமல் நடித்து ஸ்கோர் செய்தார்.
வெகுளித்தனமான பேச்சு: செந்திலின் பலங்களில் ஒன்றே அவரது வெகுளித்தனமான பேச்சும், முகமும்தான். ஊர்க்காரர் ஒருவர் நடிப்பது போன்று இருக்கும் அவரது நடிப்பை பார்த்த ரசிகர்கள் அவரை தங்களில் ஒருவராகவே ஏற்றுக்கொண்டனர். முக்கியமாக கவுண்டமணியிடம் அவர் கேட்கும் சந்தேகங்கள், அவ்வப்போது கவுண்டமணியை காண்டாக்கும்படியான வசனங்கள் எல்லாம் சிரிப்பு சரவெடியை பற்ற வைப்பவை. அதேபோல் கவுண்டமணியும், செந்திலும் பிரிந்து சில படங்களில் நடித்தார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி காமெடிகள் ஹிட் ஆகவில்லை. எனவே மீண்டும் இரண்டு பேரும் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார்கள்.
ரீ எண்ட்ரி: ஒருகட்டத்தில் பட வாய்ப்புகள் குறைந்ததன் காரணமாக சினிமாவிலிருந்து ஒதுங்கினார். பிறகு பல வருடங்கள் கழித்து தானா சேர்ந்த கூட்டம் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். கடைசியாக லால் சலாம் படத்தில் நடித்திருந்தார் செந்தில். படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை. சூழல் இப்படி இருக்க செந்திலின் மனைவி தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பல விஷயங்களை பேசியிருக்கிறார்.
செந்தில் மனைவி பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "எங்கள் திருமணத்திலிருந்துதான் எங்கள் ஊரில் பெண் பார்க்கும் படலமே ஆரம்பித்தது. அதுவரை சொந்தத்துக்குள்ளேயேதான் பெண் கொடுத்து, எடுத்துக்கொள்வார்கள். எனது கணவர் கோடிக்கணக்கான ரூபாயில் சம்பாதித்திருந்தாலும் அவர் பணம் விஷயத்தில் கொஞ்சம் வீக்தான். சொல்லப்போனால் அவருக்கு பணத்தை எண்ணக்கூட தெரியாது.
மனைவியின் கவனிப்பு: அனைத்தையும் நான் தான் கவனிப்பேன். அதனால் திருமணம் முடிந்ததும் அவரது அப்பா என்னிடம், 'அவன் பண விஷயத்தில் ரொம்ப வீக். அதனால் நீதான் பார்த்துக்கொள்ள வேண்டும்' என்று கூறினார். அதிலிருந்து சம்பளம், மற்ற வருமானம் என அனைத்தையும் நானே கவனிக்க ஆரம்பித்தேன். ஆனால் யாருக்காவது உதவி செய்ய வேண்டும், நலிந்த கலைஞர்களுக்கு பொருள் உதவி செய்ய வேண்டும் என்றால் மட்டும் சம்பளத்தில் பாதியை வைத்துக்கொண்டு மீதியை என்னிடம் கொடுப்பார்" என்றார். செந்திலின் மனைவி பெயர் கலைச்செல்வி என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











