Vivek : சிரிக்க வைக்கறவனுக்கு இவ்ளோ கஷ்டம் வரக்கூடாது.. மறைந்த விவேக் மனமுடைந்து பேச்சு
சென்னை: தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நகைச்சுவை நடிகர் விவேக். இவர் கடந்த 2021ஆம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தார். நடிப்பு மட்டும் இல்லாமல் பொதுத்தொண்டிலும் தீவிரமாக செயலாற்றி வந்த விவேக்கிற்கு இந்திய அரசு தேசிய பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. இந்த விருது இவரது கலையுலக வாழ்க்கையை பாராட்டி வழங்கப்பட்டது. கடந்த 2021ஆம் அண்டு மறைந்த விவேக் கொடுத்த பேட்டி ஒன்று இணையத்தில் உலா வருகின்றது. அது குறித்து இங்கு காணலாம்.
தமிழ் சினிமாவில் தற்போது பஞ்சம் எனக்கூறப்படுவது காமெடி நடிகர்களுக்குத்தான். இதற்கு முக்கிய காரணம் விவேக்கின் மறைவு மற்றும் வடிவேலு சினிமாவில் இருந்து ஒதுங்கியது எனக் கூறலாம். விவேக் மறைவதற்கு முன்னரே சினிமாவில் பெரிதும் கவனம் செலுத்தாமல் ஒதுங்கிவிட்டார். இதனால் தமிழ் சினிமாவில் புதுமுக நகைச்சுவை நடிகர்கள் வந்தாலும் அவர்களால் கவுண்டமணி, செந்தில், விவேக், வடிவேலு போல் நீடிக்க முடியவில்லை என்பதை விடவும் அவர்கள் ஏற்படுத்திய அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

விவேக் நடிப்பில் உருவாகும் காமெடிகளில் கட்டாயம் எதாவது ஒரு பகுத்தறிவுக் கருத்து இருக்கும் என்பதாலே, அவரது காமெடிகளுக்கு தனி வரவேற்பு மக்கள் மத்தியில் இருந்தது. இதன் காரணமாகவே விவேக்கினை சின்னக் கலைவாணர் என அழைத்து வந்தனர். பத்மஸ்ரீ விருது மட்டும் இல்லாமல் மாநில விருதுகளும், ஃபிலிம் ஃபேர் விருதுகளும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
வீடியோ: இந்நிலையில் விவேக் பேட்டி ஒன்றில் மிகவும் வருத்தப்பட்டு பேசிய வீடியோ இணையத்தில் உலா வருகின்றது. அந்த வீடியோவைப் பார்த்த விவேக் ரசிகர்கள் மனமுடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர். அந்த வீடியோவில் விவேக் தனது கலை உலக வாழ்க்கை குறித்தும், தனது சொந்த வாழ்க்கை குறித்தும் மிகவும் மனமுடைந்து பேசியுள்ளார்.
எவ்வளவு கஷ்டம்? அதாவது, " நான் எவ்வளவு பள்ளிக்கும் கல்லூரிக்கும் சென்று மரங்கள் நடுகின்றேன். இது தொடர்பாக நீங்கள் என்றைக்காவது பாராட்டி இருக்கின்றீர்களா? நான் எனது தொழில் சம்பந்தப்படாத இன்னொரு விஷயத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சார் சொன்னார் என்பதற்காக மரங்கள் நட்டு வருகின்றேன். எவ்வளவோ குளங்களை தூர் வாரியிருக்கின்றேன். பத்து ஆண்டுகளாக இதனைத் தொடர்ந்து செய்து வருகின்றேன். இதனால் படங்கள் நடிக்காமல் போனது உள்ளிட்ட எவ்வளவோ இழப்புகளைச் சந்தித்துள்ளேன்.
இழப்புகள்: எனது தனிப்பட்ட வாழ்க்கையில் எவ்வளவோ இழப்புகளைச் சந்தித்துள்ளேன். அதையும் தாண்டி சிரிக்க வைப்பவருக்கு இவ்வளவு கஷ்டம் வரவே கூடாது. என் மகன் இறந்துவிட்டார். எனது அம்மா இறந்து விட்டார். எனது அப்பா இறந்துவிட்டார். எனது வாழ்க்கையின் குருவாக இருந்த அப்துல் கலாம் சார் இறந்து விட்டார். எனக்கு சினிமா வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்த பாலசந்தர் சார் இறந்துவிட்டார். எனக்கென இப்போது யார் இருக்கின்றார்கள்?” என மிகவும் வேதனையுடன் பேசியுள்ளார்.
ரசிகர்கள் வேதனை: இந்த வீடியோ தற்போது இணையத்தில் உலா வருகின்றது. இந்த வீடியோவிற்கு விவேக்கின் ரசிகர்கள் சிரிக்க வைத்த முகத்தில் மனவேதனையைக் காணும்போது கஷ்டமாக உள்ளது எனவும், என் கண்கள் கண்ணீரில் நிறைந்தன. என்றும் எங்கள் இதயத்தில் விவேக் சார்” என கமெண்ட் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications