Bonda Mani - திருமணம் செய்ய முடியாமல் திணறிய போண்டா மணி.. விஜயகாந்த் செய்த தரமான செயல்..முழு விவரம் உள்ளே
சென்னை: வடிவேலு, விவேக் உள்ளிட்டோருடன் நடித்து பிரபலமான நடிகர் போண்டா மணி (Bonda Mani) சிறந்த நகைச்சுவை நடிகர். வயோதிகம் மற்றும் உடல்நிலை காரணமாக சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் நேற்று உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த திரையுலகையும் உச்சக்கட்ட சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட போண்டா மணி அங்கு இருந்த அசாதாரண சூழல் காரணமாக தமிழ்நாட்டுக்கு வந்தவர். ஆரம்பத்திலிருந்தே கலை மீது ஆர்வம் உடைய அவர் இங்கு நடிக்க வேண்டும் வாய்ப்பு தேட ஆரம்பித்தார். அதன்படி கடந்த 1991ஆம் ஆண்டு பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான பவுனு பவுனுதான் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதில் சிறிய ரோல் கிடைத்தாலும் அதனை சிறப்பாக செய்ததால் பலரது கவனத்தை ஈர்த்தார்.

அடுத்தடுத்த வாய்ப்புகள்: பவுனு பவுனுதான் படம் ஹிட்டடித்ததாலும் போண்டா மணியின் முகம் வெளியில் ஓரளவு தெரிய ஆரம்பித்தது. இதனையடுத்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அவருக்கு அமைந்தன. அதன்படி மணிக்குயில், நான் பெத்த மகனே, முத்து, முறை மாப்பிள்ளை, அவதார புருஷன், செல்வா, அருணாச்சலம், சுயம்வரம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார்.
வடிவேலுவுடன் கூட்டணி; சூழல் இப்படி இருக்க வடிவேலுவுடன் இணைந்து நடிக்க ஆரம்பித்தார் போண்டா மணி. வடிவேலு பீக்கில் இருந்தபோது அவரது பெரும்பாலான காமெடி காட்சிகளில் தோன்றிவிடுவார் மணி. மணியும் தனது வித்தியாசமான உடல் மொழி, டயலாக் டெலிவிரி என வடிவேலுவின் காமெடிக்கு ரொம்பவே பக்கபலமாக இருந்தார். குறிப்பாக அடித்து கேட்டாலும் சொல்லாதீங்க, வின்னர் பட காமெடி, எனக்கு வந்தா தக்காளி சட்னி உனக்கு வந்தா ரத்தமா காமெடி என இவர்கள் இருவரும் இணைந்து செய்த பல காமெடிகள் காலங்கடந்து நிற்பவை.
உடல்நலக்குறைவு: இப்படி மொத்தமாக 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் போண்டா மணிக்கு கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை எடுத்துவந்தார். அந்த சமயத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் உள்ளிட்டோர் போண்டா மணிக்கு பொருளாதார ரீதியாக உதவி செய்து நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
கண்டுகொள்ளாத வடிவேலு: போண்டா மணி உடல்நலக்குறைவில் இருந்தபோது வடிவேலு நேரிலும் சென்று சந்திக்கவில்லை ஃபோனில் தொடர்புகொண்டும் நலம் விசாரிக்கவில்லை. இது அவரை ரொம்பவே மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. அதனை அவரே ஒரு பேட்டியிலும் சொல்லியிருந்தார். சூழல் இப்படி இருக்க உடல்நலக்குறைவில் இருந்த போண்டா மணி நேற்று உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இரங்கல்: போண்டா மணியின் உயிரிழப்பு செய்தியை கேட்ட சிங்கமுத்து, பாவா லட்சுமணன் உள்ளிட்டோர் எல்லாம் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். ஆனால் வடிவேலுவோ செல்லவில்லை. மணியின் இழப்பை அவருடன் பணியாற்றியவர்களும், குடும்பத்தாரும் ஜீரணிக்க முடியாமல் தவித்துவருகின்றனர். விஜயகாந்த்கூட தனது ட்விட்டர் பக்கத்தில் போண்டா மணிக்கு இரங்கல் தெரிவித்திருந்தார்.
விஜயகாந்த் செய்த உதவி: இந்நிலையில் விஜயகாந்த் போண்டா மணிக்கு செய்த மிகப்பெரிய உதவி குறித்து தெரியவந்திருக்கிறது. அதாவது, போண்டா மணி திருமணத்தை நடிகர் சங்கத்தின் திருமண மண்டபத்தில் வைக்கலாம் என எண்ணி மண்டப நிர்வாகியை அணுகியிருக்கிறார். ஆனால், வேறு திருமணத்திற்காக அட்வான்ஸ் வாங்கிவிட்டதாக அவருக்கு பதில் கிடைத்திருக்கிறது. இதனால் வேறு எந்த இடத்தில் வைத்து திருமணத்தை செய்வது என தெரியாமல் திணறியிருக்கிறார் போண்டா மணி.
விஜயகாந்த் எடுத்த நடவடிக்கை: இந்தத் தகவலானது அப்போது நடிகர் சங்க தலைவராக இருந்த விஜயகாந்த்திற்குய் தெரியவந்தது. உடனடியாக மண்டப நிர்வாகியை தொடர்புகொண்ட விஜயகாந்த், நடிகர் சங்க திருமண மண்டபம் என்பது நடிகர்களுக்கானது. எனவே அவர்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அதனால் யாரிடம் அட்வான்ஸ் வாங்கினீர்களோ அவர்களிடம் அதை திருப்பி கொடுத்துவிட்டு போண்டா மணி திருமணத்தை நடத்துங்கள்" என கூறியிருக்கிறார். இப்படி உதவிய விஜயகாந்த் இப்போதுகூட போண்டா மணி இறப்பை அடுத்து அவரது குடும்பத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











