உங்களுக்கு பரவாயில்லையா?.. என்ன கண்ணா இதெல்லாம்.. தனுஷிடம் ஓபனாக பேசிய ரஜினிகாந்த்
சென்னை: ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை தனுஷ் காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தனுஷும், ஐஸ்வர்யாவும் சுமூகமாக தங்களது வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருந்த சூழலில் என்ன நடந்ததோ தெரியவில்லை சில வருடங்களுக்கு முன்பு தாங்கள் பிரிவதாக அறிவித்தார்கள். கடந்த வருடம் சட்டப்பூர்வமாக விவாகரத்தையும் பெற்றுக்கொண்டார்கள். அது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ரஜினிகாந்த்துக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என்று இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இவர்களில் மூத்த மகளான ஐஸ்வர்யா காதல் கொண்டேன் படத்தில் தனுஷின் நடிப்பை பார்த்து பிரமித்துவிட்டார். இதன் காரணமாக அவரை பாராட்டுவதற்காக நேரில் அழைத்தார். ஒரு காஃபி ஷாப்பில் வைத்து ஆரம்பித்த அவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்தக் காதலுக்கு ரஜினியின் வீட்டில் நீண்ட யோசனைக்கு பிறகு சம்மதம் கிடைத்தது. மேலும் ரஜினி வீட்டுக்கு தனுஷ் மருமகனா என்று பலரும் ஆச்சரியப்பட்டார்கள்.

திறமையாளன் தனுஷ்: ரஜினி வீட்டு மருமகனாக மாறினாலும் அவரால் வளர்ந்தோம் என்று மற்றவர்கள் நினைக்கக்கூடாது என்பதில் தனுஷ் தீவிரமாக இருந்தார். இதன் காரணமாக ஐஸ்வர்யாவை திருமணம் செய்த பிறகு முழுக்க முழுக்க வெறித்தனமாக உழைத்தார். திறமையை வளர்த்துக்கொண்டார். இதன் காரணமாக தனுஷுக்கென்று தனியான அடையாளம் கிடைத்தது. ஏகப்பட்ட ஹிட் படங்களை கொடுத்தார், தேசிய விருதுகளை வாங்கி குவித்தார். இப்படி ரஜினியின் நிழலிலிருந்து தன்னை எப்போதுமே விலக்கி வைத்துக்கொண்டே இருந்தார்.
சுமூக வாழ்க்கை: அதேபோல் ஐஸ்வர்யாவுடன் சுமூகமான வாழ்க்கையை வாழ்ந்துவந்தார். அவ்வப்போது அவரைப் பற்றி கிசுகிசுக்கள் வந்தாலும் அந்தத் தம்பதிக்குள் இருந்த உறவையும், வலுவையும் அசைத்து பார்க்க முடியவில்லை. ஐஸ்வர்யா இயக்குநராக அறிமுகமான 3 படத்தில் ஹீரோவாக நடித்தார். வை ராஜா வை படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துக்கொடுத்தார். இப்படி நிம்மதியாக போய்க்கொண்டிருந்த அவர்களது வாழ்க்கையில் முதல் புயல் வீச ஆர்மபித்தது. அதற்கு காரணங்களாக பல யூகங்கள் சொல்லப்படுகின்றன.
விவாகரத்து: இப்படிப்பட்ட சூழலில் தானும், ஐஸ்வர்யாவும் பிரிவதாக சில வருடங்களுக்கு முன்பு அறிவித்தார் தனுஷ். அதனை ஐஸ்வர்யாவும் உறுதிப்படுத்தினார். இருப்பினும் இரண்டு பேரும் விவாகரத்து மனு தாக்கல் செய்யாமல் இருந்தார்கள். ஆனால் திடீரென கடந்த வருடம் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்கள். அவர்களுக்குள் சமாதானம் செய்து வைக்க நீதிமன்றம் முயன்றது. ஆனால் டைவர்ஸ் வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்ததால் அவர்களுக்கு டைவர்ஸை வழங்கியது கோர்ட்.
தனுஷ் பேச்சு: ஐஸ்வர்யாவை பிரிந்தாலும் ரஜினிகாந்த் மீது தனுஷ் எப்போதுமே மரியாதை வைத்திருக்கிறார். இந்நிலையில் காலா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தனுஷ் பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது. அவர் பேசுகையில், "காலா படத்தை ரஜினியை வைத்து நான் தயாரித்தேன். அவரது கடைசி நாள் ஷூட்டிங்கிற்கு நான் சென்றிருந்தேன். 11.30 மணிக்கு முடிந்துவிடும் என்று சொன்னார்கள். ஆனால் ஷூட்டிங்கோ 2.30 மணிவரை தொடர்ந்துகொண்டே இருந்தது.
என்ன கண்ணா இதெல்லாம்?: அன்று நெருப்பு, புகை, தூசி என கஷ்டமான சூழல்தான் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தது. எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. அவரிடம் சென்று மணி 2.30 ஆகிவிட்டதே பரவாயில்லையா உங்களுக்கு என்று கேட்டேன். அதற்கு அவரோ, 'என்ன கண்ணா நல்ல கதையா இருக்கே.. எத்தனை பேர் இந்த வாய்ப்பு இல்லாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்' என்று சொன்னார். அதை பார்த்து ஆச்சரியப்பட்டுவிட்டேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











