யாருப்பா அது பாலுமகேந்திரா படத்தில் உடன்பாடு இல்லைனு சொன்னது.. பாரதிராஜாவை ஷாக்காக்கிய பாலா
சென்னை: சியான் விக்ரமுக்கு அவரது திரையுலக வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையை தந்த படம் என்றால் அது சேது. அப்படம் ரிலீஸாகும்வரை சினிமாவில் தனக்கான இடத்துக்காக கடுமையாக போராடிக்கொண்டிருந்தார். விக்ரமின் திரை வாழ்க்கை சேதுவுக்கு முன் சேதுவுக்கு பின் என்றுதான் பிரிக்கப்பட வேண்டும். பாலா இப்போது வணங்கான் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இதில் அருண் விஜய் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படம் விரைவில் வெளியாகவிருக்கும் சூழலில் இன்று பாலா தனது 57ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்து சேது படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாலா. விக்ரம், அபிதா, ஸ்ரீமன், சிவகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்த அந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. குறிப்பாக சியான் விக்ரமுக்கு சினிமாவில் நிலையான இடத்தை பெற்றுக்கொடுத்தது. அந்தப் படம்தான் பாலாவுக்கும் சரி விக்ரமுக்கும் நல்ல வாழ்க்கைக்கான கதவை திறந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நந்தா: சேது படத்தை குறிஞ்சி மலர் என்று ஏகத்துக்கும் கொண்டாடினார்கள் விமர்சகர்களும், ரசிகர்களும். ஒரே படத்தில் புகழின் உச்சிக்கு சென்ற அவருக்கு இரண்டாவது பட வாய்ப்பும் உடனடியாக கிடைத்தது. அதன்படி அபராஜித் பிலிம்ஸ் தயாரிப்பில் சூர்யாவை வைத்து நந்தா படத்தை இயக்கினார். அந்தப் படமும் நல்ல ஹிட்டாகி காலங்கடந்து பேசப்படும் படைப்பாக மாறி நிற்கிறது. சூர்யாவுக்கும் நல்ல பெயரை அந்தப் படம்தான் பெற்றுக்கொடுத்தது.
என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்: முதல் இரண்டு படங்களிலேயே முக்கியமான இயக்குநர் என்று பாலா பெயர் எடுத்தார். அடுத்தடுத்து அவர் இயக்கிய பிதாமகன், நான் கடவுள் உள்ளிட்ட படங்களும் மிகச்சிறந்த படைப்பாக இருக்கின்றனர். அதிலும் பாலா சொன்னால் நடிகர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்ற நிலைதான் சினிமாவில் இருந்தது. அவரது இயக்கத்தில் ஓரிரு காட்சிகளிலாவது தோன்றிட வேண்டும் என நடிகர்கள் தவம் இருந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். தற்போது அவர் வணங்கான் திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.
நொந்த பாலா: பாலாவின் திரை வாழ்க்கை இப்போது ஒரு ஹிட்டுக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறது. ஒருபக்கம் பெர்சனல் வாழ்க்கையும் பிரச்னையிலேயே இருக்கிறது. தனது மனைவி மலரை விவாகரத்து செய்த அவருக்கு; இன்னொரு இடியாக இறங்கியது என்றால் வர்மா திரைப்படம். அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் ரீமேக்கான அதில்தான் விக்ரமின் மகன் துருவ் அறிமுகமானார். தனக்கு எப்படி பாலாவின் சேது மூலம் அடையாளம் கிடைத்ததோ அதேபோல் தனது மகனுக்கும் அடையாளம் வேண்டும் என நினைத்தார்.
ஆனால் பாலா எடுத்த வர்மா பிடிக்காததால் அதை தூக்கிப்போட்டுவிட்டு வேறு ஒரு இயக்குநரை வைத்து எடுத்தார்கள். இதனையடுத்து வணங்கானிலிருந்து சூர்யா வெளியேற; அருண் விஜய்யை வைத்து படத்தை முடித்திருக்கிறார் பாலா. இந்தச் சூழலில் இன்று அவர் தனது 57ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனையொட்டி அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள்.
ஷாக்காக்கிய பாலா: இந்தச் சூழலில் பாரதிராஜாவை பாலா ஷாக்காக்கிய சம்பவத்தை பார்க்கலாம். அதாவது பாலுமகேந்திரா இயக்கிய மறுபடியும் படத்தின் வெற்றி விழா நடந்திருக்கிறது. அந்த சமயத்தில்தான் பாலுமகேந்திராவிடம் பாலா வெளியேறி தனியாக படம் எடுக்க முடிவு செய்துவிட்டார். அந்த விழாவின்போது பேசிய பாலுமகேந்திரா, 'பாலானு எனக்கு ஒரு அசிஸ்டெண்ட் டைரக்டர் இருக்கான். அவனுக்கு நான் எடுக்கும் படங்கள் மேல் பெரிதாக உடன்பாடு இல்லை. அவன் இப்போ தனியா படம் எடுக்கப்போறான். ஆனால் அவன் எனக்கு ஒரு மாரல் சப்போர்ட்டாக இருந்தான்' என்று கூறியிருக்கிறார்.
இதனைக் கேட்டுக்கொண்டிருந்த பாரதிராஜா உடனடியாக மைக்கை பிடித்து, 'யாருடா அவன் பாலா.. பாலுமகேந்திரா படத்து மேல் உடன்பாடு இல்லைனு சொல்றது. நானே பாலுட்ட சில படங்களில் உதவி இயக்குநரா இருக்கணும்னு ஆசைப்படுறேன். அவரிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன்' என்று ஷாக்காகி சொன்னாராம். இதனை பாலா தனது சுயசரிதையான இவன்தான் பாலா என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











