கமலின் கால்ஷீட் இல்லை.. நாங்கள் சந்தித்த போராட்டம்.. நினைவுகூர்ந்த பாக்யராஜ்
சென்னை: அருள் அஜித் என்பவர் கயிலன் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இதில் ரம்யா பாண்டியன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஜூலை 25ஆம் தேதி இப்படமானது திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில் இயக்குநர் பாக்யராஜ் கலந்துகொண்டு 16 வயதினிலே படம் பற்றி பேசியது கவனத்தை ஈர்த்திருக்கிறது.
பாக்யராஜ் இந்திய திரைத்துறையில் அனைவராலும் மதிக்கப்படக்கூடியவர். ஏராளமான ஹிட் படங்களை கொடுத்த அவர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக தனது கலை பயணத்தை ஆரம்பித்தவர். பாரதிராஜாவின் படங்களுக்கு கதையும் எழுதியிருக்கிறார் பாக்யராஜ். தனது கலையுலக வாரிசு என்று எம்ஜிஆரால் புகழப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போது இயக்கத்திலிருந்து ஒதுங்கியிருக்கும் அவர் நடிப்பில் கவனம் செலுத்துகிறார். கடைசியாக குபேரா படத்தில் நடித்திருந்தார்.
பாக்யராஜ் பேச்சு: இந்நிலையில் அருள் அஜித் என்பவர் இயக்கியிருக்கும் கயிலன் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. அதில் பாக்யராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். விழாவில் பேசிய அவர், "படத்தில் பணியாற்றிய அனைவருக்குமே என்னுடைய வாழ்த்துகள். இந்த விழாவில் பேசிய ராஜன் தமிழில் பெயர் வைப்பதை பற்றி குறிப்பிட்டார். அதை கேட்டவுடன் என்னுடைய படங்கள் பற்றி யோசனை வந்தது.

மக்களுக்கு பிடித்தது: என்னுடைய படங்களில் ஒரு படத்துக்கு டார்லிங் டார்லிங் டார்லிங் என்று பெயர் வைத்தேன். ஒரு படத்தில் டாடி டாடி என்று பாடலும் வைத்திருக்கிறேன். ஆங்கிலம் மட்டுமின்றி பேட்டா பேட்டா மேரா பேட்டா என ஹிந்தியையும் வைத்திருந்தேன். இவையெல்லாம் ஏன் வைத்தேன் என்றால் சினிமா மக்களுக்கானது. அவர்களுக்கு பிடித்ததை செய்ய வேண்டும் என்ற நோக்கம்தாம். தமிழுக்கு எதிராக செயல்பட வேண்டும் என்ற நோக்கம் இல்லை. தமிழ்தான் சோறு போடுகிறது.
உதாரணம்: நல்ல படம் எடுத்தால் கண்டிப்பாக வெற்றி பெறும்; யாராலும் தடுத்துவிட முடியாது என்பதற்கு உதாரணம் டூரிஸ்ட் ஃபேமிலில் திரைப்படம்தான். கயிலன் படமும் வெற்றியடையும். படத்தின் இயக்குநரை நான் பாராட்டுகிறேன். படத்தின் பெயர் கயிலன் என்று சொன்னவுடன் அதற்கான பொருளையும் இயக்குநர் சொன்னார். அப்போதுதான் தமிழை மீண்டும் படிக்க வேண்டும் என எனக்கு தோன்றியது.
போராட்டம்தான் வாழ்க்கை: படத்தின் ட்ரெய்லரை எனக்கு காட்டினார்கள். அதை பார்க்கும்போது போராட்டம் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்பதுதான் சாராம்சம் என புரிந்தது. எனது குருநாதர் பாரதிராஜாவுடன் இணைந்து பணியாற்றிய முதல் படமான 16 வயதினிலே படத்தில் பெரும் போராட்டம் இருந்தது. அவர் மயிலு என்று கதையை எழுதி வைத்துக்கொண்டு ஏறி இறங்காத தயாரிப்பு நிறுவனங்களே இல்லை. ஷூட்டிங்கும் திட்டமிட்டபடி தொடங்கவில்லை.
கமல் கால்ஷீட் இல்லை: மேலும் கமல்ஹாசனின் கால்ஷீட்டும் இல்லை. அப்போது எங்களுக்கு தயாரிப்பாளர் பெரிய நம்பிக்கையை கொடுத்தார். ஒருவழியாக பெரிய போராட்டத்துக்கு பிறகு அந்தப் படம் ரிலீஸாகி பெரிய வெற்றியை பெற்றது. அடுத்த படமான கிழக்கே போகும் ரயில் படத்துக்கும் போராட்டம்தான். அதையெல்லாம் எதிர்கொண்டுதான் இன்று வெற்றி பெற்றிருக்கிறோம். இயக்குநர் பாலசந்தர் இரண்டு படங்களை இயக்கிய பிறகுதான் தனது அரசு வேலையை விட்டார். ஆனால் அருள் அஜித்தோ முதல் படத்தின்போதே வேலையை விட்டுவிட்டு இயக்குநராகியிருக்கிறார். கணவரின் விருப்பத்தை அறிந்து அவருக்கு ஆதரவு அளித்த அவரின் மனைவி, குடும்பத்தினருக்கு நன்றி" என்றார்.


Click it and Unblock the Notifications











