Malaysia vasudevan - தயாரிப்பாளரிடம் அறிமுகம் டூ 16 வயதினிலே பாடல்கள்.. மலேசியா வாசுதேவன் நினைவுகள்
சென்னை: Malaysia vasudevan (மலேசியா வாசுதேவன்) மலேசியா வாசுதேவன் குறித்து இயக்குநர் பாரதிராஜா பகிர்ந்திருக்கும் விஷயங்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளன.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பாடகர்களில் ஒருவர் மலேசியா வாசுதேவன். பாரதிராஜா இயக்கத்தில் உருவான 16 வயதினிலே படத்தில் இடம்பெற்ற ஆட்டுக்குட்டி முட்டையிட்டு பாடலை பாடி வெகு பிரபலமடைந்தார். அந்தப் பாடலில் மலேசியா வாசுதேவனின் குரல் தனித்துவமாக இருந்ததால் அவர் இளையராஜாவின் இசையில் ஏகப்பட்ட பாடல்களை பாடி ராஜாவின் கோட்டையில் தவிர்க்க முடியாத தளபதியானார்.
ராஜா - மலேசியா கூட்டணி : 16 வயதினிலே படத்தில் ஆரம்பித்த இளையராஜா - மலேசியா வாசுதேவன் கூட்டணி அதன் பிறகு தொடர்ந்து ரசிகர்களின் காதுகளுக்கு விருந்து படைத்தது. மைக்கேல் மதன காமராஜன் படத்தில் பேர் வெச்சாலும் வைக்காம போனாலும் மல்லிவாசம், முரட்டுக்காளை படத்தில் பொதுவாக என் மனசு தங்கம், முதல் மரியாதை படத்தில் வெட்டி வேரு வாசம், பூங்காத்து திரும்புமா, பன்னீர் புஷ்பங்கள் படத்தில் கோடை கால காற்றே, புதிய வார்ப்புகள் படத்தில் இந்த மின்மினிக்கு என ஏகப்பட்ட பாடல்கள் க்ளாசிக்காக அமைந்தன.

ஏ.ஆர்.ரஹ்மானுடன் மலேசியா வாசுதேவன்: இளையராஜாவுடன் மட்டுமின்றி ஏ.ஆர்.ரஹ்மான் இசையிலும் ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார் மலேசியா வாசுதேவன். குறிப்பாக கிழக்கு சீமையிலே படத்தில் இடம்பெற்ற தென் கிழக்கு சீமையிலே பாடல் எப்போது மலேசியா வாசுதேவனின் ஸ்பெஷலில் ஒன்று. ஏனெனில், மலேசியா வாசுதேவனின் குரல் பெரும்பாலும் ஃபோக் மெட்டுகளுக்கு பயன்படுத்தப்பட்டுவந்த சூழலில், ஒரு மென்சோக பாடலுக்கு அவரது குரலை ரஹ்மான் பயன்படுத்தி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.
8000 பாடல்கள்: மொத்தம் 8000 பாடல்கள்வரை பாடியிருக்கும் மலேசியா வாசுதேவன் விஜய் நடித்த பூவே உனக்காக, பத்ரி உள்ளிட்ட படங்களிலும் நடித்து நடிகராகவும் முத்திரை பதித்தார். இவர் கடைசியாக 2010ஆம் ஆண்டு பலே பாண்டியா படத்தில் பாடல் பாடினார். பிறகு 2011ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவர் உயிரிழந்தாலும் அவரது பாடல்களை இன்றுவரை பலரும் கேட்டு சிலாகித்துக்கொண்டிருக்கின்றனர். இன்று அவருக்கு 79ஆவது பிறந்தநாள் ஆகும்.
பாரதிராஜா: இந்நிலையில் பாரதிராஜாவை முதல்முறையாக ஒரு தயாரிப்பாளரிடம் அறிமுகப்படுத்தியது மலேசியா வாசுதேவன்தானாம். அதாவது டெல்லி டூ மெட்ராஸ் என்ற படத்தில்தான் மலேசியா வாசுதேவன் முதல்முறையாக பாடினார். அப்போது அந்தப் பட தயாரிப்பாளர் ரத்னத்துடன் வாசுதேவனுக்கு நல்ல பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதேபோல் பாரதிராஜாவுடனும் பழக்கம் உருவாகியிருக்கிறது.
அறிமுகப்படுத்திய வாசுதேவன்: இருவரும் நெருக்கமாகிவிட ஒருமுறை ரத்னத்திடம் பாரதிராஜாவை அழைத்து சென்ற மலேசிய வாசுதேவன், பாரதிராஜாவை காண்பித்து இவர் மிகச்சிறந்த கதை ஆசிரியர் என்று கூறினாராம். அதனையடுத்து சரி ஒரு கதை சொல்லுங்கள் என ரத்னம் கேட்க இரண்டு, மூன்று கதைகளை கூறினாராம் பாரதிராஜா. ஆனால் அதில் திருப்திபடாத ரத்னம், எனக்கு ஒரு த்ரில்லர் ஜானரில் கதை சொல்லுங்கள் என்றாராம்.
சிகப்பு ரோஜாக்கள்: அதனையடுத்து மூன்று நாட்களில் ஒரு கதையை யோசித்து வாசுதேவனுடன் சென்று ரத்னத்திடம் சொன்னாராம் பாரதிராஜா. அந்தக் கதைதான் சிகப்பு ரோஜாக்கள் படமாம். அதில் முதலில் நடிக்க வேண்டியது முத்துராமனும், நடிகை லட்சுமியும்.ஆனால் ஏதோ காரணங்களால் படம் தொடங்கப்படவில்லை. காலம் கழிய ஒரு வழியாக பாரதிராஜா தனது முதல் படமான 16 வயதினிலே படத்தை ஆரம்பித்திருக்கிறார். அதில் இரண்டு பாடல்களை முதலில் எஸ்பி பாலசுப்ரமணியம் பாட வேண்டியிருந்ததாம்.
ஆனால் அவருக்கு அந்த சமயத்தில் அவருக்கு தொண்டை சரியில்லாமல் போக இளையராஜா உடனடியாக மலேசியா வாசுதேவை அழைத்து அந்த இரண்டு பாடல்களை பாட வைத்தாராம். அந்தப் பாடல்கள்தான் இன்றுவரை மலேசியா வாசுதேவனின் மாஸ்டர் பீஸ்களில் இருக்கும், 'ஆட்டுக்குட்டி முட்டையிட்டு', 'செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா' பாடல்கள். இந்தத் தகவலை இயக்குநர் பாரதிராஜா ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











