எம்.எஸ்.விஸ்வநாதனுக்காக 6 மாதங்கள் கஷ்டப்பட்ட அஜித் பட இயக்குநர்.. குட்டி ப்ளாஷ்பேக்
சென்னை: காதல் மன்னன் படத்தில் இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதனை நடிக்க வைப்பதற்கு ஆறு மாதங்கள் கஷ்டப்பட்டதாக இயக்குநர் சரண் கூறியுள்ளார்.
கோலிவுட்டின் டாப் 5 நடிகர்களில் அஜித்தும் ஒருவர். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான துணிவு படம் வெற்றி பெற்றது. இந்தப் படத்தை அடுத்து அவர் தனது 62ஆவது படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தக் கதையும் ஆக்ஷன் கதையாக உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது. இப்போது ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்தாலும் அஜித்குமார் தனது ஆரம்பகாலத்தில் காதல் கதைகளில் நடித்து பிரபலமானவர்.

காதல் மன்னன் அஜித்குமார்
அஜித் நடித்த காதல் படங்களில் காதல் மன்னன் படத்துக்கு தனியிடம் உண்டு. இயக்குநர் கே.பாலசந்தரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சரணின் முதல் படம் காதல் மன்னன். இப்படத்தில் விவேக், கரண், மானு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். நிச்சயதார்த்தம் ஆன பெண்ணை காதலிக்கும் ஹீரோ என்ற லைனோடு உருவான படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் ஆரம்பித்த அஜித் - சரண் கூட்டணி அமர்க்களம், அட்டகாசம், அசல் என நீண்டது. மேலும் இந்தப் படத்துக்கு பிறகு அஜித்திற்கு ஏராளமான பெண் ரசிகைகளும் உருவாக ஆரம்பித்தனர்.

காதல் மன்னனில் எம்.எஸ்.விஸ்வநாதன்
காதல் மன்னன் படத்தில் ஏகப்பட்ட சிறப்புகள் இருந்தாலும் அதில் முதல் சிறப்பு மெல்லிசை மன்னர் என அழைக்கப்படும் எம்.எஸ்.விஸ்வநாதன் நடித்தது. அதுவரை இசையின் மூலம் தமிழர்களை கட்டிப்போட்டிருந்த எம்.எஸ்.வி இந்தப் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். படம் குறித்த அறிவிப்பு வெளியானபோது, எம்.எஸ்.விஸ்வநாதன் படத்தில் நடிப்பதை பலரும் ஆச்சரியமாகவே பார்த்தார்கள்.

நடிப்பதற்கு ஒத்துக்கொள்ள மறுத்த எம்.எஸ்.விஸ்வநாதன்
மெஸ் விஸ்வநாதன் என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருப்பார் எம்.எஸ்.வி. பொதிகை சேனலுக்கு அவர் அளித்த பேட்டியை பார்த்த இயக்குநர் சரண் இவ்வளவு முகபாவனைகளோடு பேட்டி கொடுக்கிறாரே இவர் நடித்தால் நன்றாக இருக்கும் என முடிவெடுத்திருக்கிறார். இதை விவேக்கிடமும் சொல்ல இருவரும் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் சென்று படத்தில் நடிக்க வேண்டும் என கேட்டிருக்கிறார்கள். ஆனால் அதற்கு பிடிவாதமாக மறுத்துவிட்டாராம் விஸ்வநாதன். ஆனால் எப்படியாவது இவரை நடிக்க வைத்துவிட வேண்டும் என்பதில் சரணும், விவேக்கும் தீவிரமாக இருந்திருக்கிறார்கள்.

கண்டிஷனுடன் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்ட விஸ்வநாதன்
ஆறு மாதங்களாக விஸ்வநாதனிடம் பேசியும் அவர் ஒத்துக்கொள்ளவில்லையாம். நிலைமை இப்படி இருக்க ஒருநாள் காலை கையில் கடிதத்துடன் விஸ்வநாதன் வீட்டுக்கு சென்ற இருவரும்; அவரது தாயின் புகைப்படம் அருகே கடிதத்தை வைத்திருக்கிறார்கள். இதனைப் பார்த்த எம்.எஸ்.வி, எதனால் இப்படியெல்லாம் செய்கிறீர்கள் என கேட்டிருக்கிறார். அதற்கு சரணும், விவேக்கும் 'நாங்கள் நடிக்க சொன்னால் தான் மறுக்கிறீர்கள்.
உங்கள் தாய் சொன்னால் கேட்பீர்கள்தானே. அதனால் அவரிடம் வேண்டுகோள் வைக்கிறோம். இன்று இரவு உங்களது தாய் உங்கள் கனவில் வந்து படத்தில் நடிக்க சொல்வார் பாருங்கள்' என்று கூறிவிட்டு வந்துவிட்டார்களாம். மறுநாள் காலை சரணையும், விவேக்கையும் அழைத்து; 'நான் படத்தில் நடிக்கிறேன். ஆனால் ஒரு கண்டிஷன்; நான் நடிப்பதற்கு எனக்கு கொடுக்கும் சம்பளத்தில் பாதியை ராமமூர்த்திக்கும் வழங்க வேண்டும்' என விஸ்வநாதன் கூறியிருக்கிறார்.

நட்பின் இலக்கணம் விஸ்வநாதன்
இதனை கேட்ட சரண், அவர்தான் இந்தப் படத்தில் நடிக்கவில்லையே என்றிருக்கிறார். அதற்கு விஸ்வநாதன் 'அதெல்லாம் கிடையாது. விஸ்வநாதன் - ராமமூர்த்தி என்றுதான் இருந்திருக்கிறோம். இந்த கண்டிஷனுக்கு ஒத்துக்கொண்டால் நடிப்பதற்கு நான் தயார் என கூறியிருக்கிறார். ராமமூர்த்தி மேல் விஸ்வநாதனுக்கு இருக்கும் பாசத்தை புரிந்துகொண்ட தயாரிப்பு தரப்பும் அவர் சொன்னபடியே ராமமூர்த்திக்கு பாதி சம்பளத்தை கொடுத்திருக்கிறது. அதன் பிறகு காதல் மன்னன் படத்தில் விஸ்வநாதன் நடித்திருக்கிறார். இந்த சுவாரஸ்ய தகவலை இயக்குநர் சரண், பிலிமிபீட் தமிழுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறினார்.


Click it and Unblock the Notifications











