ஓ அப்படியா சேதி.. ரஜினி காமெடியனாக நடிக்கட்டும்.. நான் ஹீரோவாக நடிக்கிறேன்.. கவுண்டமணி கொடுத்த ஷாக்
சென்னை: கவுண்டமணி தற்போது சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கிறார். அதேசமயம் எந்த காமெடி சேனலை பார்த்தாலும், எந்த மீமை பார்த்தாலும் அதில் கவுண்டமணி இன்னும் சிரிக்க வைத்துக்கொண்டே இருக்கிறார். இதன் காரணமாக கவுண்டமணிக்கு எப்போதும் அழிவில்லை என்று அவரது ரசிகர்கள் கூறுவார்கள். இந்தச் சூழலில் ரஜினிகாந்த் காமெடியனாக நடிக்கட்டும் நான் ஹீரோவாக நடிக்கிறேன் என்று கவுண்டமணி பேசிய விஷயம் தற்போது தெரியவந்திருக்கிறது.
கோலிவுட்டில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் கவுண்டமணி. நகைச்சுவை காட்சிகளில் வெறும் சிரிக்க வைக்கும் வசனங்களை மட்டும் வைக்காமல் முற்போக்கு கருத்துக்களையும், டைமிங் கவுண்ட்டர்களையும் தனது நகைச்சுவை மூலம் பிரதிபலித்தவர் கவுண்டமணி. எந்த காமெடி நடிகர் வந்தாலும் அவரது சாயல் இல்லாமல் ஒரு காமெடியும் செய்ய முடியாது என்பதுதான் உண்மை. அந்த அளவுக்கு அவரது தாக்கம் பலரிடத்தில் இருக்கும். உதாரணமாக சந்தானத்தையே கவுண்டமணியின் அப்டேட் வெர்ஷன் என்றுதான் ஒருதரப்பினர் கூறினர்.

விமர்சனத்தை சந்தித்த கவுண்டமணி நகைச்சுவை: கவுண்டமணியின் நகைச்சுவை எந்த அளவுக்கு கொண்டாடப்பட்டதோ அதே அளவு விமர்சனத்தையும் சந்தித்தவை. அவர் எல்லோரையும் உருவ கேலி செய்கிறார்; எட்டி உதைக்கிறேன் என்ற பெயரில் வன்முறையை நிகழ்த்துகிறார் என்று சிலர் அவர் மீது விமர்சனத்தை வைப்பதுண்டு. ஆனால் அப்படி செய்தது தவறு என்றால் அவரது காமெடியை மக்கள் ரசித்திருக்கமாட்டார்கள். மக்களின் மனதில் என்ன இருக்கிறதோ அதைத்தான் அவர் திரையில் கொண்டு வந்தார் என அவரது ரசிகர்கள் கூறுவர்.

எவர்க்ரீன் கூட்டணி: எத்தனை விமர்சனங்களை சந்தித்தாலும் கவுண்டமணி & செந்தில் கூட்டணிதான் தமிழ் சினிமா நகைச்சுவையின் கொண்டாட்டமான காலம். ஒருபக்கம் கவுண்டமணி கவுண்ட்டர்கள் கொடுக்க, மறுபக்கம் செந்தில் வெகுளித்தனமான முகத்தையும், சிரிப்பு வரவைக்கக்கூடிய உடல் மொழி, வாய் மொழியையும் வைத்துக்கொள்ள இருவரையும் ஸ்க்ரீனில் பார்த்தாலே இப்போதும் வயிறு வலிக்க சிரிக்கிறார்கள் ரசிகர்கள்.
யாராக இருந்தாலும் கலாய்தான்: கவுண்டமணி திரையில் மட்டுமில்லை நேரிலுமே யார் என்னவென்று பார்க்காமல் தனது கவுண்ட்டர்களால் அதகளம் செய்துவிடுவார். 'ஏன் ப்பா எல்லோரும் நடிக்க வந்துட்டா யார்தான் படம் பார்க்குறது' என்று சந்தானத்திடம் ஒரு முறை கவுண்ட்டர் அடித்திருக்கிறார் கவுண்டமணி. அதேபோல், 'நாய்க்கு என்ன பெயர் வைப்பது அதுக்கு பேர் நாய்தான்', நடிகர் சங்க பெயர் பற்றிய ஒரு கேள்விக்கு 'நடிகர் சங்கம் என்று வையுங்கள்' என்றது என அவரது ஆஃப் கேமரா கவுண்ட்டர்களும் ரகளையாக இருப்பவை.
ஓபன் டாக்: அதேபோல் கவுண்டமணி எவ்வளவுக்கு எவ்வளவு நகைச்சுவையாக பேசுகிறாரோ அந்த அளவுக்கு ஓபனாகவும் பேசக்கூடியவர். யாருக்கும் எதற்கும் அஞ்சாமல் தனது கருத்தை ஷூட்டிங் ஸ்பாட்டில் வைக்கக்கூடியவர். நக்மாவுடன் நான் பாடலுக்கு நடனம் ஆடியே தீர வேண்டும் என்று முடிவு எடுத்து அதை சாதித்தும் காட்டியவர்.
ரஜினி காமெடியனாகட்டும்: இந்நிலையில் ரஜினிகாந்த் காமெடியனாக நடிக்கட்டும் நான் ஹீரோவாக நடிக்கிறேன் என்று சொல்லி ஏவிஎம்முக்கு கவுண்டமணி ஷாக் கொடுத்த விஷயம் தெரியவந்திருக்கிறது. அதாவது கவுண்டமணி பீக்கில் இருந்தபோது ஒரு நாளுக்கு இரண்டு லட்சம் ரூபாய் சம்பளமாக பெற்றாராம். அந்த சமயத்தில் ரஜினிகாந்த் நடித்த எஜமான் படத்தில் நடிக்கும்படி கவுண்டமணியிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது ஏவிஎம் நிறுவனம். ஒரு நாளுக்கு ஒரு லட்சம் என்கிற அடிப்படையில் 15 நாட்களுக்கு 15 லட்சம் ரூபாய் சம்பளமாக பேசப்பட்டதாம்.
அதற்கு கவுண்டமணியோ எனக்கு 50 லட்சம் ரூபாய் சம்பளமாக வேண்டும் என்று கேட்டாராம். ஆனால் ஏவிஎம்மோ என்ன 50 லட்சம் ரூபாய் கேட்கிறீர்களே என்று சொன்னதற்கு; கவுண்டமணியோ சரி அப்போ ரஜினிகாந்த்தை காமெடியனாக நடிக்க சொல்லுங்கள் நான் ஹீரோவாக நடிக்கிறேன் என்று ஒரே போடாக போட்டாராம். இதனை கேட்டு ஏவிஎம் பெரும் ஷாக்கானதாம். இத்தகவலை இயக்குநர் வீ.சேகர் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











