விஜய்யை விடுங்க.. ராமராஜன் சி.எம் ஆகனும்னு லட்சியம் வெச்சிருந்தது தெரியுமா?.. இது என்ன கூத்து?
சென்னை: நடிகர் ராமராஜன் 80களில் டாப் 10 ஹீரோக்களுக்குள் இருந்தார். அதற்கு கரகாட்டக்காரன் படம்தான் காரணம். கங்கை அமரன் இயக்கியிருந்த அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி வசூல் வேட்டை நடத்தியது. அப்படத்துக்கு பிறகு தொடர்ந்து நடித்தாலும் அந்த வெற்றி போல் இன்னொரு வெற்றி கிடைக்கவில்லை. ஒருகட்டத்தில் சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர் கடந்த வருடத்தில் சாமானியன் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.
ராமராஜன் சினிமாவில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து அறிமுகமானவர். மேலும் விநியோகஸ்தராகவும் இருந்த அவர் மண்ணுக்கேத்த பொண்ணு என்ற படத்தை இயக்கவும் செய்திருக்கிறார். அதுமட்டுமின்றி அதேகாலகட்டத்தில் ஹீரோவாகவும் நடிக்க ஆரம்பித்த அவருக்கு பெரிய வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. அப்படிப்பட்ட சமயத்தில்தான் கங்கை அமரன் இயக்கத்தில் கரகாட்டக்காரன் படத்தில் நடித்தார்.
ரெக்கார்டு படைத்த கரகாட்டக்காரன்: இந்தப் படத்தில்தான் கனகா ஹீரோயினாக அறிமுகமாகியிருந்தார். ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் நடித்திருந்த அந்தப் படம் கரகாட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டாலும்; தில்லானா மோகனாம்பாள் படத்தின் இன்ஸ்பிரேஷன்தான் என்பது அனைவருமே அறிந்தது. படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றாலே போதும் என்றுதான் படக்குழு நினைத்திருந்தது. ஆனால் எதிர்பார்த்ததைவிடவும் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி ரெக்கார்டு படைத்தது.

ராமராஜனுக்கு கொள்ளை லாபம்: இப்படத்துக்காக ராமராஜனுக்கு பேசப்பட்ட சம்பளத்துக்கு பதிலாக சென்னை, மதுரை ஆகிய இரண்டு பகுதிகளின் விநியோக உரிமையை (7 லட்சம் அப்போதைக்கு மதிப்பு) தயாரிப்பாளர் கொடுத்திருந்தார். ஓரளவுக்கு லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த ராமராஜனுக்கு, இரண்டு பகுதிகளிலும் படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி பத்து மடங்கு லாபத்தை சம்பாதித்து கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு பெரிய லாபத்தை அவரே எதிர்பார்த்திருக்கமாட்டார்.
அடுத்து பெரிய வெற்றி இல்லை: கரகாட்டக்காரன் கொடுத்த வெற்றி அவருக்கு பல வாய்ப்புகளையும் கொடுத்தது. அவரும் தொடர்ந்து நடித்தாலும் அந்த வெற்றியை போல் பெற முடியவில்லை. இதற்கிடையே நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்திருந்த அவர்; ஜோதிடத்தை காரணம் காட்டி அவரிடமிருந்து விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார். கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர் ஒருகட்டத்தில் ஆளே காணாமல் போயிருந்தார். கடந்த வருடம் சாமானியன் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.
ராமராஜனின் லட்சியம்: அவர் திரைத்துறையில் செல்வாக்கில் இருந்தபோது அரசியல் மீதும் ஆர்வம் கொண்டிருந்தார். அதிமுக அபிமானியாக இருந்த அவர் எம்ஜிஆர் மறைந்த பிறகு முதலமைச்சராகும் கனவிலும் இருந்திருக்கிறார். இதுகுறித்து மறைந்த இயக்குநர் வி.சேகர் கொடுத்திருந்த ஒரு பேட்டியில், "ஒருமுறை ராமராஜனின் உதவியாளர் அரசு என்பவர் என்னை பார்த்தார். அப்போது அவர், 'என்ன உங்க டைரக்டர் பாக்யராஜ் கட்சியெல்லாம் ஆரம்பிக்கிறாராம். அதெல்லாம் தேவையில்லாத வேலை. தப்பு செய்கிறார்' என்று கூறினார்.
அதை சொல்லிவிட்டு, அடுத்த முதலமைச்சர் ராமராஜன்தான். நாங்கள் அதற்காக தயாராகிவிட்டோம் என்றும் குண்டை போட்டார். அது எப்படி சினிமாவில் வந்தவுடன் சிவாஜி ஆக முடியாது அல்லவா. அதுபோல்தான் அரசியலும். அரசியலுக்கு வந்தவுடன் எப்படி முதலமைச்சராக முடியும்" என்று கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications











