Ilayaraaja - கையில் வெறும் பத்து ரூபாய்தான்.. இளையராஜா சென்னைக்கு வந்த கதை தெரியுமா?
சென்னை: Ilayaraaja (இளையராஜா) இசைஞானி இளையராஜா சென்னைக்கு வெறும் பத்து ரூபாயுடன் வந்திருக்கிறார். அதுகுறித்து காணலாம்.
தமிழ் சினிமாவின் இசையின் முகத்தை மாற்றி அமைத்தவர் இளையராஜா. அவர் இசையமைக்க வந்த பிறகுதான் வைரமுத்து சிந்து பைரவியில் எழுதியதுபோல் சேரிக்கும் சேர வேண்டும் அதற்கும் பாட்டு படி என்ற வரி உண்மையானது. ஆம் அவரால்தான் வரப்பில் நின்றவரும் வாய் திறந்து பாட ஆரம்பித்தார். தனது முதல் படமான அன்னக்கிளியிலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் இளையராஜா.

பாவலர் க்ரூப்ஸ்: இளையராஜாவின் இசை இன்று உலகம் முழுக்க பயணித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் அவரது இசை பயணம் முதலில் ஆரம்பித்தது கம்யூனிஸ்ட் மேடைகளில். தனது மூத்த சகோதரரான பாவலர் வரதராஜன் நடத்திய பாவலர் க்ரூப்ஸ் என்ற இசை குழுவை நடத்திக்கொண்டிருந்தார். அந்தக் குழுவில் வாசிப்பாளராக இருந்தவர் இளையராஜா.
நாடகங்களிலும்: மேடையில் வாசிப்பாளராக மட்டுமின்றி பல நாடகங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார் இளையராஜா. அதுமட்டுமின்றி வாத்தியங்கள் ஏதும் வாங்க பணம் இல்லாததால் வெறும் பூட்டுக்களை வைத்துக்கொண்டு மட்டுமே இசையமைத்த வரலாறு எல்லாம் ராஜாவுக்கு உண்டு. அவர் இசையை வாத்தியங்களிலிருந்து எடுக்காமல் தனது வாழ்க்கையிலிருந்து எடுத்தார் என்பதுதான் உண்மை. அதனால்தான் அவர் ஜன கான ராஜாவாக திகழ்ந்துகொண்டிருக்கிறார்.
பெரும் போராட்டம்: சினிமாவுக்குள் நுழைந்து முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் திரும்பி பார்க்க வைத்தாலும் கடுமையான போராட்டங்களை சந்தித்தவர் இளையராஜா. குறிப்பாக யாருக்கும் நடக்கக்கூடாத தாக்குதல் எல்லாம் இளையராஜாவுக்கு நடந்தது. ஏன் இன்னமும் ஒரு சிலர் அவர் மீது அந்தத் தாக்குதலை நடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்னர்கூட கதையாசிரியர் ரத்னவேலு அளித்த பேட்டியில் இளையராஜா மீது பெரும் வன்மத்தை கக்கினார் என்பதை தமிழ் கூறும் நல்லுலகம் அறியும்.
கோட்டையில்ல கொடியுமில்ல அப்பவும் ராஜா: தனிப்பட்ட தாக்குதல்கள் மட்டுமின்றி அவரை சினிமாவிலிருந்து எப்படியாவது ஒழித்துக்கட்டிவிட வேண்டும் என பெரும் கூட்டமே வேலை செய்தது. ஆனால் திறமை இருக்கும் ஒருவரை சினிமா ஒதுக்கி தள்ளிவிடுமா என்ன?. அதுபோல்தான் சினிமா இளையராஜாவை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறது. அவரிடம் கோட்டையும் இல்லை; கொடியும் இல்லை; இருந்தாலும் இன்னும் பல தலைமுறைகளுக்கு அவர்தான் இசை உலகின் ராஜாவாக இருப்பார். இந்தச் சூழலில் அவர் சென்னைக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்த தருணத்தை நினைவுகூரலாம் வாங்க..
முதலில் பாரதிராஜா: இயக்குநர் இமயம் பாரதிராஜா ஆரம்பத்திலிருந்தே பாவலர் க்ரூப்ஸுடன் பழக்கத்தில் இருந்தவர். அனைவரும் இணைந்து நாடகங்களும் போட்டிருக்கின்றனர். ஒருகட்டத்தில் பாரதிராஜா தைரியமாக சினிமா வாய்ப்பு தேடி கையில் 300 ரூபாயுடன் சென்னைக்கு வந்துவிட்டார். ஆனால் பாவலர் க்ரூப்ஸுக்கோ சென்னைக்கு வர பயம். சென்னைக்கு வந்த பாரதிராஜா தியாகராய நகரில் அறை எடுத்து நான்கு பேருடன் தங்கியிருக்கிறார்.
மேலும் வருமானத்துக்காக பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்துக்கொண்டே சினிமா வாய்ப்பை தேடியிருக்கிறார். சினிமா வாய்ப்பு இல்லையென்றாலும் நாடகம் போட்டுவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்திருக்கிறார் பாரதிராஜா.

பத்து ரூபாயுடன் வந்த இளையராஜா: அப்போது 60 ரூபாய் இருந்தால் நாடகம் போட்டுவிடலாம் என்ற சூழல் இருந்தது. ஒருவழியாக பாரதிராஜா 60 ரூபாயை சேர்த்துக்கொண்டு நாடகத்தை அரங்கேற்ற தியேட்டர் ஒன்று பிடிப்பதற்காக நடந்து சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது எதிரே ஒரு சைக்கிள் ரிக்ஷா வந்து நின்றிருக்கிறது. அதிலிருந்து இளையராஜா, கங்கை அமரன், பாஸ்கர் ஆகிய மூன்று பேரும் இறங்கியிருக்கிறார்கள்.
ரிக்ஷாவிலிருந்து இறங்கிய இளையராஜா பாரதிராஜாவை பார்த்து நாங்களும் சென்னை வந்துவிட்டோம். ஆனால் பத்து ரூபாய்தான் இருக்கிறது என கூறியிருக்கிறார். அதையெல்லாம் கண்டுகொள்ளாத பாரதிராஜா அவர்களை அழைத்துக்கொண்டு தனது அறைக்கு சென்றிருக்கிறார். ஆனால் அதிகம் பேர் இருந்ததால் சில நாட்களிலேயே வீட்டு ஓனர் வீட்டை காலி செய்ய சொல்லியிருக்கிறார்.
அதன் பிறகு பாரதிராஜா, இளையராஜா, கங்கை அமரன், பாஸ்கர் ஆகிய நான்கு பேரும் எங்கும் பிரியாமல் தொடர்ந்து வாய்ப்பு தேடியிருக்கின்றனர். ஒருவழியாக அனைவருக்கும் வாய்ப்பு கிடைத்து பாரதிராஜா, இளையராஜா, கங்கை அமரன் ஆகிய மூன்று பேரும் தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறினார்கள். இந்தத் தகவலை பாரதிராஜா ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











