வெற்றிமாறன் இயக்கிய படம்.. 25 லட்சம் ரூபாய் கடன் வாங்கிய டிராகன் மிஷ்கின்.. இப்படி ஒரு மனதா?
சென்னை: மிஷ்கின் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநராக வலம் வருபவர். இயக்கம் மட்டுமின்றி நடிப்பிலும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கும் அவர் கடைசியாக டிராகன் திரைப்படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் அவரது நடிப்புக்கு பெரும் ஆதரவு கிடைத்திருக்கிறது. மேலும் அந்தக் கதாபாத்திரத்துக்கு அவரை தவிர்த்து வேறு யாரும் செட் ஆகவே மாட்டார்கள் என்ற கருத்தும் ரசிகர்களிடையே நிலவுகிறது. இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கிய படத்துக்காக 25 லட்சம் ரூபாய் மிஷ்கின் கடன் வாங்கிய சம்பவம் தெரியவந்திருக்கிறது.
சித்திரம் பேசுதடி படத்தில் இயக்குநராக அறிமுகமானவர் மிஷ்கின். அந்தப் படம் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. தொடர்ந்து அவர் இயக்கிய அஞ்சாதே மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அடுத்து அவர் இயக்கிய நந்தலாலா, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவை. அதேசமயம் மிஷ்கின் தன்னுடைய படங்களை வெளிநாட்டு படங்களிலிருந்து காப்பி அடிக்கிறார் என்ற கருத்து ஒருதரப்பினரிடம் எப்போதும் இருக்கிறது. ஆனால் அதனை அவரது ரசிகர்கள் திட்டவட்டமாக மறுப்பதும் உண்டு.

சர்ச்சைகளின் நாயகன்: மிஷ்கின் எவ்வளவுக்கு எவ்வளவு சிறந்த பெயரை பெற்றிருக்கிறாரோ அதே அளவுக்கு சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர். அவர் தனது மனதில் பட்டதை பட்டென்று பேசிவிடக்கூடியவர். ராம் இயக்கத்தில் மம்மூட்டி நடித்திருந்த பேரன்பு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில்கூட அவரது பேச்சு சர்ச்சையை சந்தித்தது. அதனைத் தொடர்ந்து தான் பங்கேற்கும் படங்களின் விழாக்களில் கலந்துகொண்டு பேசினால் கண்டிப்பாக பிரச்னைகள் வெடிக்கும் என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது.
பாட்டில் ராதா பிரச்னை: கொட்டுக்காளி படத்தின் விழாவில்கூட நிர்வாணமாக நிற்பேன் என்று கூறினார். அதனைத் தொடர்ந்து பாட்டில் ராதா படத்தின் விழாவில் கலந்துகொண்ட அவர்; தான் ஒரு குடிகாரர் என்றும்; மது அருந்துவதற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகவும் பேசியிருந்தார். அது பெரிய பிரச்னையை கிளப்பியது. குறிப்பாக திரைத்துறையில் இருப்பவர்களே அவருக்கு எதிராக வாள் சுழற்றினார்கள். அதனையடுத்து பேட் கேர்ள் பட விழாவில் பேசிய மிஷ்கின், 'நான் மன்னிப்பு கேட்டு உங்களை கடவுளாக்குகிறேன்' என்று சொல்லிவிட்டு சென்றார்.
டிராகன் மிஷ்கின்: அதேபோல் டிராகன் படத்தின் விழாவில், விரைவில் சினிமாவை விட்டு விலகிவிடுவேன் என்று கூறி அதிர்ச்சி கிளப்பியிருந்தார். இப்படிப்பட்ட சூழலில்தான் அவர் நடித்த டிராகன் திரைப்படம் சில நாட்களுக்கு வெளியானது. படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதிலும் மிஷ்கினின் நடிப்புக்கு ரசிகர்களிடம் செம அப்ளாஸ் கிடைத்திருக்கிறது. கண்டிப்பான முதல்வர், ஏமாற்றும் மாணவரிடம் நியாயமாக படித்து வேலையில்லாமல் சுற்றும் மாணவர்களுக்காக காட்டும் பரிவு என அட்டகாசமாக நடித்திருந்தார்.
கடன் வாங்கிய மிஷ்கின்: இந்நிலையில் மிஷ்கின் குறித்து ஒரு சம்பவம் தெரியவந்திருக்கிறது. அதாவது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிய விசாரணை படத்தை ரிலீஸுக்கு முன்னர் மிஷ்கின் பார்த்தாராம். அந்தப் படம் அவருக்கு பிடித்துப்போனதை அடுத்து உடனடியாக இயக்குநர்கள் ஷங்கர், மணிரத்னம் என பலரை அழைத்து; ஒரு ஹாலை பிடித்து அந்தப் படத்தை திரையிட்டு காண்பித்து இந்தப் படத்தை பற்றி நீங்கள் அதிகம் பேச வேண்டும். மிக அருமையான படம் என்று சொன்னாராம். அந்த நிகழ்வை அவர் நடத்தும்போது கையில் பணம் இல்லாததால் 25 லட்சம் ரூபாய்வரை விசாரணை படத்தை கொண்டு சேர்ப்பதற்காக கடன் வாங்கினாராம். இதனை இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











