அந்த பொம்பள புள்ள இஷ்டத்துக்கு பேசுது.. அது பேசுறது யாருக்கு தெரியும்.. கடுப்பான விஜயகாந்த்
சென்னை: விஜயகாந்த் கடந்த 2023ஆம் ஆண்டு உடல்நல குறைவால் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது. பலரும் அவரது இறப்பை நினைத்து வருந்தி, கண்ணீர் சிந்தினார்கள். முக்கியமாக அவரால் உதவி பெற்ற அனைவருமே தங்களது வீட்டில் ஒருவர் உயிரிழந்துவிட்டதாகவே கருதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் வாழ்க்கையில் நடந்த சம்பவம் குறித்து பார்க்கலாம்.
விஜயகாந்த்தை அவரது ரசிகர்கள் கேப்டன், புரட்சி கலைஞர், கருப்பு எம்ஜிஆர் என அழைத்தார்கள். அதற்கேற்றபடிதான் அவரும் நடந்துகொண்டார். எந்த விஷயமாக இருந்தாலும் முன் நின்று நடத்தி கொடுத்தது, ஏகப்பட்ட பேருக்கு உதவி செய்தது என தமிழ்நாடு முழுவதும் அவர் நல்ல பெயரை வாங்கியிருந்தார். அதிலும் கிராமங்களில் ரஜினிகாந்த், கமல்ஹாசனைவிடவும் விஜயகாந்த்துக்கு ரசிகர்கள் அதிகம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
உதவி பெற்ற நடிகர்கள்: சாமானியர்கள் மட்டுமின்றி செலிபிரிட்டிகளும் விஜயகாந்த்தால் பயன் அடைந்திருக்கிறார்கள். விஜய் தனது கரியரின் ஆரம்பகாலத்தில் தடுமாறிக்கொண்டிருந்தபோது செந்தூரப்பாண்டி படத்தில் நடித்து பிரபல்யத்தை ஏற்படுத்திக்கொடுத்தார் விஜயகாந்த். அதேபோல் சூர்யாவுக்காகவும் பெரியண்ணா படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துக்கொடுத்தார். இவர்கள் மட்டுமின்றி இன்னும் பல நடிகர்களுக்கு தொழில்ரீதியாகவும், தனிப்பட்ட ரீதியிலும் பல உதவிகளை செய்திருக்கிறார்.

அரசியல் கட்சி தலைவர்: தமிழ்நாடெங்கும் தனக்கு இருந்த செல்வாக்கை புரிந்துகொண்ட அவர்; கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரண்டு பேரையும் எதிர்த்து தைரியமாக அரசியல் கட்சி தொடங்கி; சந்தித்த முதல் தேர்தலில் தனித்து நின்றார். அடுத்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றார். ஆனால் அந்த சமயத்தில்தான் அவரது கட்சியிலிருந்து அவருக்கு நம்பிக்கைக்குரிய எம்.எல்.ஏக்கள் வெளியேறிவிட்டார்கள்.
உயிரிழந்த விஜயகாந்த்: அவர்கள் வெளியேறியது விஜயகாந்த்தை ரொம்பவே பாதித்தது. அந்த சமயத்தில் உடல்நிலையும் சரியில்லாமல் போக அமெரிக்காவுக்கு சென்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார். உடல்நலம் தேறினாலும் முன்னர் போல் தீவிர அரசியலில் ஈடுபட முடியாமல் இருந்த விஜயகாந்த் முழு ஓய்வில் இருந்தார். சூழல் இப்படி இருக்க கடந்த 2023ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பெரிய சோகத்தை பலருக்கும் ஏற்படுத்தியது.
பிரபலத்தின் பேட்டி: இந்நிலையில் விஜயகாந்த் குறித்து டப்பிங் கலைஞர் ராஜேந்திரன் என்பவர் வாவ் தமிழா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "நானும் விஜயகாந்த்தும் ஒருமுறை பேசிக்கொண்டிருந்தோம். அப்போது ஒரு ஃபோன் வந்தது. நான் எடுத்தேன், ஒரு பெண் என்னிடம் நான் சேம்பரிலிருந்து பேசுகிறேன். விஜயகாந்த் இருக்கிறாரா என்று கேட்டார். நான் கேப்டனிடம் ஃபோனை கொடுத்தேன்.
என்ன இப்படி பேசுது?: அவர் ஹலோ என்று ஸ்டைலாக கூறினார். உடனே அந்த பெண்ணோ, ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்துவிட்டார். இதனை எதிர்பார்க்காத விஜயகாந்த்தோ, 'ராங் நம்பர்' என்று சொல்லி ஃபோனை வைத்துவிட்டார். நான் அங்கிருந்து வெளியே சென்றுவிட்டேன். அந்த சமயம் ராதாரவி வந்தார். நான் அவசரமாக வெளியேறியபோது அவர் மீது மோதிவிட்டேன். என்ன நடந்தது ஏன் இப்படி என அவர் என்னிடம் கேட்க; விஜயகாந்த்தோ அவரிடம், 'ஏதோ ஒரு பொம்பள புள்ளை இஷ்டத்துக்கு இங்கிலீஷில் பேசுது. இங்கிலீஷெல்லாம் யாருக்கு ப்பா தெரியும்' என கூறினார். அந்த அளவுக்கு அவர் வெள்ளந்தியான மனிதர்" என்றார்.


Click it and Unblock the Notifications











