சாப்பிடும்போது அவமானப்படுத்திய இளையராஜா.. கோபத்தில் ரஜினிக்கு கங்கை அமரன் எழுதிய பாடல்
சென்னை: கங்கை அமரன் தமிழ் சினிமாவில் பல வருடங்களாக இயங்கி வருபவர். பாடலாசிரியர், இசையமைப்பாளர், இயக்குநர், நடிகர் என பல முகங்களை கொண்டிருக்கிறார். தற்போது லெனின் பாண்டியன் என்ற படத்தில் நடித்துவருகிறார். அதில் ரோஜாவும் நடித்திருக்கிறார். சூழல் இப்படி இருக்க சமீபத்தில் பிரபுவின் அண்ணன் ராம்குமாருடனான உரையாடலின்போது இளையராஜா செய்த ஒரு விஷயத்தால் ரஜினிகாந்த்துக்கு எழுதிய பாடல் குறித்து ஓபனாக பேசியிருக்கிறார்.
இளையராஜாவின் சகோதரரான கங்கை அமரன் திறமை வாய்ந்தவர். ராஜாவின் இசைக்கு பாடல்கள் எழுதிய அவர்; கரகாட்டக்காரன் படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றியை பெற்றார். அந்தப் படம் இன்றுவரை பலரது ஃபேவரைட்டாக இருக்கிறது. அமரனின் இயக்கம், கவுண்டமணி - செந்திலின் காமெடி, இளையராஜாவின் இசை என அத்தனையும் சேர்ந்து அந்தப் படத்துக்கு மைலேஜை கூட்டின. தில்லானா மோகனாம்பாள் கதையின் தாக்கம் இதில் இருந்தாலும் படம் பட்டித்தொட்டியெங்கும் ஹிட்டடித்தது.

இசையமைப்பாளர் கங்கை அமரன்: அதேபோல் இசையமைப்பாளராகவும் பல படங்களில் ஜொலித்திருக்கிறார் அவர். சுவரில்லாத சித்திரங்கள், மௌன கீதங்கள், வாழ்வே மாயம், சட்டம், ஊர்க்குருவி, ருத்ரா உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தார். இளையராஜாவுடனான பிரச்னையால் பாக்யராஜ் இசையமைக்க வந்தார். ஆனாலும் தான் இசையமைப்பாளர் ஆவதற்கு முன்பு ராஜாவுக்கு பதில் தன்னுடைய படங்களில் கங்கை அமரனை அவர் பயன்படுத்தியிருந்தார். அந்தக் கூட்டணியும் சக்சஸ்ஃபுல் கூட்டணியாக வலம் வந்தது.
மிகச்சிறந்த பாடலாசிரியர்: கங்கை அமரன் இயக்குநராகவும், இசையமைப்பாளராகவும் கொண்டாடப்பட்டார். அதேசமயம் பாடலாசிரியராக அவரை குறைத்தே மதிப்பிட்டிருக்கிறார். ஏகப்பட்ட ஹிட் பாடல்களை அவர் எழுதியிருக்கிறார். மேலும் தன்னுடைய பாடல்களை இலக்கியத்தனமாகவும் அதேசமயம் எளிதாக எல்லோருக்கும் புரியும்படியும் எழுதக்கூடியவர் அவர். பல பாடல்களை வாலி எழுதியதாகவே நினைத்திருப்பார்கள். உண்மையில் அதை கங்கை அமரன் எழுதி ஆச்சரியப்படுத்தியிருந்தார்.
நடிகராக கங்கை: அதேபோல் நடிகராகவும் சில படங்களின் காட்சிகளில் தலை காட்டியிருக்கிறார். இப்போது லெனின் பாண்டியன் படத்தில் லீடு ரோலில் நடித்திருக்கிறார். அவருடன் நடிகை ரோஜாவும் நடித்திருக்கிறார். ரோஜாவுக்கு இது செகண்ட் இன்னிங்ஸ் ஆகும். இந்த வருடத்துக்குள் படம் ரிலீஸாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடிகர் பிரபுவின் அண்ணனும், நடிகர், தயாரிப்பாளருமான ராம்குமாருடன் சமீபத்தில் உரையாடினார் கங்கை அமரன். அப்போது அவர் சொன்ன ஒரு விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
கங்கை அமரன் சொன்னது: அவர் அந்தப் பேட்டியில் பேசுகையில், "ஒருநாள் நான், இளையராஜா, பாஸ்கர் மூன்று பேரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். அப்போது ராஜா அண்ணன், 'இனிமேல் என்னுடன் அமர்ந்து நீங்கள் சாப்பிட வேண்டாம். நீங்கள் தனியாக சாப்பிடுங்கள்' என கூறினார். உடனே நான், 'இதோ பாருங்கள் அண்ணா.. நாங்கள் ஒன்றும் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் இங்கே வரவில்லை. அண்ணன், தம்பிகளாகிய நாம் சாப்பிடும் மூன்று வேளைதான் சந்திக்கிறோம். அதனால்தான் வந்தேன். இனிமேல் வரமாட்டேன்' என சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன். பிறகு அதை மனதில் வைத்துதான், 'ஆண் என்ன பெண் என்ன' பாடலை எழுதினேன். நேராக ராஜாவிடம் சென்று, இதுதான் எனக்கு வந்த பாடல் என்று கூறி கொடுத்துவிட்டு வந்துவிட்டேன்" என்றார்.


Click it and Unblock the Notifications















