HBD Director bala - முதல் படத்திலிருந்தே சிக்கல்.. பார்க்காத சோதனை இல்லை - பிறந்தநாள் வாழ்த்துகள் பாலா
சென்னை: Happy Birthday Bala (பிறந்தநாள் வாழ்த்துகள் பாலா) இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான பாலாவுக்கு இன்று 57ஆவது பிறந்தநாள்.
இயக்குநர் பாலா இந்திய அளவில் பிரபலமான இயக்குநர். பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கிய கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர் படத்தின் டைட்டில் கார்டில் பாலாவுக்கும் க்ரெடிட் கொடுத்திருப்பார். பிதாமகன், நான் கடவுள் உள்ளிட்ட படங்களுக்கு தேசிய விருது பெற்ற இயக்குநர் பாலா இப்போது சியானாக வலம் வரும் விக்ரமும் சேது படத்தின் மூலம் ஹிட் கொடுத்து கோலிவுட்டில் நிலைக்க வைத்தவர்,

விளிம்பு நிலை மனிதர்களுக்கானவர்: முதல் படம் சேது மெகா ஹிட்டானாலும் பாலா அடுத்தடுத்து தொட்ட கதைக்களங்கள் வித்தியாசமானவை. தனது இரண்டாவது படமாக நந்தாவை இயக்கினார். அதுவரை ஈழத்து அகதிகளை பற்றி தமிழ் சினிமாவில் எந்த படைப்பாளியும் தொடாத சூழலில் பாலா அந்த விவகாரத்தை தொட்ட்டார். தொடர்ந்து, பிதாமகன் படத்தில் இடுகாட்டில் பிறந்து வளர்ந்த ஒருவர் இந்த சமூகத்துக்குள் வந்தால் என்ன நடக்கும் என்று காட்சிப்படுத்தியிருந்தார். அந்தப் படம் அவருக்கு தேசிய விருதை பெற்றுக்கொடுத்தது.
நான் கடவுள் பாலா: பிதாமகனுக்கு அடுத்ததாக அவர் இயக்கிய நான் கடவுள் படம் வசூல் ரீதியாக அடிவாங்கினாலும் இன்றுவரை பலராலும் கொண்டாடப்படும் படமாக இருக்கிறது. ஜெயமோகனின் ஏழாம் உலகத்தை தழுவி எடுத்தாலும் அந்தக் கதையில் பாலா தனது மேக்கிங் ஸ்டைலையே வைத்திருப்பார். குறிப்பாக, மரணம் என்பது வேண்டாம் என்று பலரும் யோசித்த சூழலில் மரணம் என்பது விடுதலை என்ற கருத்தை தைரியமாக, ஆழமாக பதித்திருந்தார் பாலா.
சரிவை சந்தித்த பாலா: அதன் பிறகு அவர் இயக்கிய அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார் உள்ளிட்ட படங்கள் தோல்வியை மட்டுமின்றி விமர்சனத்தை சந்தித்தன. அதேபோல் அர்ஜுன் ரெட்டியை விக்ரம் மகன் துருவ்வை வைத்து வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்தார். ஆனால் பாலாவின் வெர்ஷன் கிடப்பில் போடப்பட்டது. இந்த சம்பவம் அடங்குவதற்குள்ளாகவே அவருக்கு விவாகரத்தும் நடந்தது.
பிரச்னையான வணங்கான்: திரை வாழ்க்கையில் வர்மா மூலம் விழுந்த அடி, தனிப்பட்ட வாழ்க்கையில் விவாகரத்து மூலம் விழுந்த அடி என இருந்த பாலாவுக்கு சூர்யாவை வைத்து வணங்கான் படத்தை இயக்கும் சூழல் உருவானது. ஆனால் சூர்யா அதிலிருந்து வெளியேறினார். எல்லா விஷயங்களுக்கும் அமைதியாக இருக்கும் பாலா இதிலும் அமைதி காத்து அருண் விஜய்யை வைத்து வணங்கான் படத்தின் ஷூட்டிங்கை நடத்திக்கொண்டிருக்கிறார்.
சோதனைகளை கடந்த சாதனை: இயக்குநர் பாலா தனது வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே பல சோதனைகளை கண்டவர் அவர். எனவே எந்த சோதனையையும் தைரியத்தோடு கையாளும் குணம் அவருக்கு இயல்பிலேயே இருந்தது. சினிமாவில் சேர வேண்டும் என வந்த பாலா நேராக சென்றது அறிவுமதியிடம். அறிவுமதி அப்போது பாலுமகேந்திராவிடம் வீடு படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார்.
பாலுமகேந்திராவுக்கே தெரியாத உதவியாளர் பாலா: ஒரு இயக்குநரிடம் ஒருவர் உதவி இயக்குநராக பணியாற்றுகிறார் என்றால் அந்த இயக்குநருக்கு தெரிந்திருக்கும் அல்லவா. ஆனால் பாலா விஷயத்தில் அப்படி இல்லை. இப்படி ஒரு உதவியாளர் தன்னிடம் இருக்கிறார் என்றே பாலு மகேந்திராவுக்கு தெரியாது.
ஏனெனில் சினிமாவில் எப்படியாவது வென்று விட வேண்டும் என்ற வேட்கை கொண்ட பாலாவை வீடு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் அறிவுமதி சின்ன சின்ன வேலைகளை செய்பவராக சேர்த்துவிட்டார். கதையில் தீவிரம் கொண்டிருந்த பாலுமகேந்திரா இதனை கவனிக்கவில்லை. அதனையடுத்து எப்படியோ பாலுமகேந்திராவுக்கு தெரிந்து உதவி இயக்குநரக அதிகாரப்பூர்வமாக சேர்த்துக்கொண்டார். அதன் பிறகு பாலுமகேந்திராவின் முதன்மையான சீடராக இல்லை மகனாகவே மாறினார் பாலா.
அகிலன்: சில படங்கள் பணியாற்றிவிட்டு அகிலன் என்ற கதையை எழுதி படம் இயக்க திட்டமிட்டார் பாலா. முதலில் முரளி ஹீரோவாக நடிக்க வேண்டியது. ஆனால் பிறகு விக்னேஷ் ஹீரோவாக உள்ளே வந்தார். படத்தின் பூஜை நாளை போடப்படுகிறது என்றால் முதல்நாள் இரவு பட தயாரிப்பாளருக்கு பிரச்னை ஏற்பட்டது.
இதனால் படம் டேக் ஆஃப் ஆக முடியாத சூழல். ஆனால் எல்லோரிடமும் சொல்லிவிட்டோமே என அடுத்த நாள் வழக்கம்போல் பூஜை நடந்திருக்கிறது. பூஜைக்கு பாலுமகேந்திராவும் அவரது மனைவி அகிலாவும் சிறப்பு விருந்தினர்கள். பாலுமகேந்திரா வ்யூ ஃபைண்டரை பாலாவிடம் பரிசாக வழங்கினார். இல்லாத படத்துக்கு பூஜை போடப்பட்டது என்றால் அது அகிலன் படத்துக்குத்தான்.
கிடைத்த தயாரிப்பாளர்: இதனையடுத்து விரக்தியில் ஊர் ஊராக சுற்றிவிட்டு தனது சொந்த ஊருக்கு பாலா செல்லும்போது அவரது தந்தை மூலம் கந்தசாமி என்பவரது அறிமுகம் கிடைத்து அவர் படத்தை தயாரிக்க ஒத்துக்கொண்டார். அப்போதுதான் அகிலன் என்ற படம் சேதுவாக மாறியது. தன்னைப்போலவே வெல்ல வெறிகொண்டு காத்திருக்கும் ஒருவரை ஹீரோவாக போட வேண்டும் என நினைத்து விக்ரமை ஹீரோவாக்கினார் பாலா. ஆனால் இதிலும் ஒரு சிக்கல் ஷூட்டிங் தொடங்க சில நாட்கள் இருக்கும் போது ஃபெப்சி அமைப்பினர் போராட்டம். ஒருவழியாக எல்லா சிக்கல்களும் தீர்ந்து படத்தின் ஷூட்டிங்கும் முடிந்துவிட்டது.
புதிய பிரச்னை: ஷூட்டிங்கை முடித்து விநியோகஸ்தர்களிடம் படம் போட்டு காண்பிக்கப்பட்டது. படம் பார்த்த அனைவருக்குமே திருப்தி இல்லை. தயாரிப்பாளரிடம் சென்று ஹீரோவும், இயக்குநரும் தப்பிச்சுடுவாங்க. ஆனா நீங்க சிக்கிடுவீங்க. போட்ட பணத்தை எடுக்க முடியாது என சொல்லிவிட்டு படத்தை வாங்க முன்வரவில்லை. இதனால் சினிமாவுக்கு புதிதான தயாரிப்பாளர் கந்தசாமிக்கு அச்சம் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து ஒரு பின்னரவில் பாலாவின் அறை கதவை தட்டிய கந்தசாமி எல்லோரும் என்னனமோ சொல்றாங்க. பயமா இருக்கு என புலம்பியிருக்கிறார்.

பாலா எடுத்த அதிரடி முடிவு: உடனே மறுநாள் காலை கந்தசாமியை வரசொல்லி ஒரு வெற்று பத்திரத்தில் இந்தப் படம் மூலம் உங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டால் இனி வரும் காலங்களில் நான் சம்பாதிப்பதை உங்களுக்கே கொடுத்து விடுகிறேன் என எழுதி கையெழுத்திட்டு கொடுத்திருக்கிறார். அதன் பிறகு கந்தசாமி அமைதியாகியிருக்கிறார். பட ரிலீஸுக்கு முன்னதாகவே கிட்டத்தட்ட நூறு நாட்களுக்கும் மேலாக சேது படத்தை விநியோகஸ்தர்கள் பார்ப்பதும், தவிர்ப்பதுமாக இருந்தது. ஒருவழியாக படம் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியானது.
குறிஞ்சி பூ: ஆரம்பத்தில் படம் சரியாக பிக்கப் ஆகவில்லை. ஆனால் படத்தை பற்றிய விமர்சனங்கள் நல்ல விதமாக அமைய படம் அதிரிபுதிரி ஹிட்டடித்தது. ஷோவுக்கு கூட்டம் இல்லை என்று எந்த உதயம் தியேட்டரிலிருந்து சில நாட்களில் சேது படம் தூக்கப்பட்டதோ அதே உதயம் தியேட்டரில் மீண்டும் போடப்பட்டு நூறு நாட்கள் ஓடியது அந்தப் படம். இவ்வளவு சோதனைகளை கடந்து பாலா சேது படத்தை உருவாக்கினார்.
அதனையடுத்து அவர் இயக்கிய படங்களின் மூலம் இந்தியாவின் முக்கிய இயக்குநர் என்ற அடையாளத்தை பெற்றிருப்பது அனைவரும் அறிந்ததுதான். இப்போது சமீபகாலமாக அவர் சோதனைக்காலத்தில் இருக்கிறார். நிச்சயம் வனங்கான் மூலம் அந்த சோதனையை உடைத்து நொறுக்கி மீண்டும் ஃபார்முக்கு வருவார் என்ற நம்பலாம்.. பாலாவுக்கு தமிழ் பில்மிபீட் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள்..


Click it and Unblock the Notifications











