அய்யய்யோ இப்படி ஆகிடுச்சே.. நள்ளிரவில் ஹோட்டலிலிருந்து தலை தெறிக்க ஓடிய ரஜினிகாந்த்.. சுவாரஸ்ய சம்பவம்
சென்னை: ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். படமானது அக்டோபர் மாதம் ரிலீஸாகிறது. அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தையும் முடித்துவிட்டு அநேகமாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கலாம் என்று திரைத்துறையில் பேச்சு எழுந்திருக்கிறது. இந்தச் சூழலில் ரஜினிகாந்த் படிக்காதவன் படத்தில் நடித்தபோது நடந்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்று தெரியவந்திருக்கிறது.
'சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்' என்ற பாடல் வரிக்கு ஏற்ப ரஜினிகாந்த்தை அறியாதவர்களே இல்லை. ஹீரோவுக்கான முக லட்சணம் இல்லை, கலர் இல்லை, கண்கள் சிறிது, நடனம் தெரியவில்லை, தமிழ் ஒழுங்காக பேசவரவில்லை என்று ரஜினி சினிமாவில் நடிக்க ஆரம்பித்தபோது ஏகப்பட்ட விமர்சனங்கள் அவர் மீது வைக்கப்பட்டன. ஆனால் தன் மீது எறியப்பட்ட விமர்சன கற்களை தனியாளாக செதுக்கி இன்று தமிழ் சினிமாவின் அடையாள சிலைகளில் ஒருவராக நிற்கிறார் அவர்.

பெரும் இன்ஸ்பிரேஷன்: ரஜினிகாந்த்தை பலரும் இன்ஸ்பிரேஷனாக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் அவர் சந்தித்த விமர்சனங்களையும், கஷ்டங்களையும் வேறு யாராவது சந்தித்திருந்தால் இந்நேரம் சினிமாவில் அவர்கள் நிலைத்திருக்கமாட்டார்கள். ஆனால் அவரோ சாமானியர் முதல் செலிபிரிட்டி வரை தன்னை ரசிக்கும்படி செய்திருக்கிறார் என்றால் அதற்கு ஒரே காரணம் அவரது உழைப்பு மட்டும்தான்.
பழசை மறக்காத ரஜினிகாந்த்: ஒருவர் எவ்வளவு உயரத்துக்கு சென்றாலும் தான் வந்த வழியையும், இருந்த இடத்தையும் மறக்கக்கூடாது என்பார்கள். அதற்கு மிகச்சிறந்த உதாரணம் என்றால் ரஜினிகாந்த்தான். தன்னுடைய கரியர் ஆரம்பித்தபோது அவர் எப்படி எல்லோரிடமும் பழகினாரோ; அதேபோல்தான் தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய பிறகும் பழகிக்கொண்டிருக்கிறார். அதுவே அவரது வெற்றிக்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று அவருடன் நெருங்கி பழகியவர்கள் கூறுவார்கள்.
வெளிவந்த சுவாரஸ்யம்: இந்தச் சூழலில் படிக்காதவன் படப்பிடிப்புபோது நடந்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்று தெரியவந்திருக்கிறது. அதாவது அந்தப் படத்தில் வரும் 'ஊரை தெரிஞ்சிக்கிட்டேன்' பாடல் ஏவிஎம் ஸ்டூடியோவில் நைட் ஷூட்டிங்காக நடந்ததாம். அடுத்த நாள் ஊட்டியில் ஷூட்டிங்காம். ரஜினி கிளம்புவதற்கு முன்பாகவே அவரது லக்கேஜுகளை எடுத்துக்கொண்டு அவரது உதவியாளர் ஊட்டிக்கு முன்னமே சென்றுவிட்டாராம்.
ஹோட்டலில் ரஜினி: பிறகு ரஜினிகாந்த் விமானத்தில் கோவை வந்து இறங்கினாராம். அப்போது மணி அதிகாலை 3. அந்த சமயத்தில் ரஜினிகாந்த்துக்கு பசி எடுக்கிறது என்று அவரது உதவியாளரிடம் சொல்லியிருக்கிறார். ஆனால் ஹோட்டல் எதுவும் இல்லை. அதேநேரம் கோவை விமான நிலையத்துக்கு அருகே ஒரு சின்ன சாலைக்குள் சிறிய அளவிலான ஹோட்டல் ஒன்று இருந்திருக்கிறது. அதை தெரிந்துகொண்ட ரஜினி பசி ஆற்றிக்கொள்ள அந்த ஹோட்டலுக்கு சென்று தோசை சாப்பிட்டுக்கொண்டிருந்தாராம்.
முதலில் அங்கு இருந்தவர்களுக்கு வந்திருப்பவர் ரஜினிகாந்த் என்று தெரியாமல் இருந்திருக்கிறது. ஒருகட்டத்தில் அவர்கள் ரஜினியை கண்டுபிடித்துவிட ஆச்சரியத்துடன் 'ரஜினி, ரஜினி' என்று பேசியிருக்கிறார்கள். விஷயம் மெல்ல வெளியே கசிய கூட்டம் கூட ஆரம்பித்துவிட்டதாம். இதனை எதிர்பார்க்காத ரஜினிகாந்த் அய்யயோ இதென்னா வம்பா போச்சு என்று நினைத்துக்கொண்டு அந்த ஹோட்டல்காரரிடம் 1000 ரூபாயை கொடுத்துவிட்டு அங்கிருந்து தலைதெறிக்க ஓடிவிட்டாராம். இதனை ரஜினிகாந்த்திடம் பல வருடங்கள் உதவியாளராக இருந்த ஜெயராம் என்பவர் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











