A.R.Rahman - பாலு மகேந்திரா இல்லைனா ஏ.ஆர்.ரஹ்மானுக்கு முதல் தேசிய விருது இல்லை.. இளையராஜா சொன்னது தெரியுமா?
சென்னை: ஏ.ஆர்.ரஹ்மான் உலக அளவில் புகழ் பெற்ற இசையமைப்பாளர்களில் ஒருவர். இரண்டு ஆஸ்கர் விருதுகள், கிராமி விருதுகள், கோல்டன் குளோப் விருதுகள் என சர்வதேச அளவில் விருதுகளை அள்ளியவர். அவர் இசையமைத்த முதல் படமான ரோஜாவிலேயே தேசிய விருதை வென்று பலரையும் ஆச்சரியப்பட வைத்தவர். இந்தச் சூழலில் அவருக்கு முதல் தேசிய விருது எப்படி, யாரால் கிடைத்தது என்பது குறித்து இதில் பார்க்கலாம்.
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இந்தியா முழுவதும் கோடிக்கணக்கானோர் ரசிகர்களாக இருக்கின்றனர். அவரது இசையை கேட்டுவிட மாட்டோமா, அவரை நேரில் சந்தித்துவிடமாட்டோமா, அவருடன் ஓரிரு வார்த்தைகள் பேசிவிடமாட்டோமா என பலர் தவம் இருக்கின்றனர். அந்த அளவுக்கு தனது இசையாலும் தனது நடவடிக்கையாலும் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான்.

ஈகோ இல்லாத இசைப்புயல்: இசையமைத்த முதல் படத்திலேயே தேசிய விருது, அதேபோல் கோல்டன் குளோப் விருது, ஆஸ்கர் விருதுகள் என உலகத்தின் புகழுடைய உச்சிக்கு சென்றவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஆனால் அவரது நடவடிக்கையும், பேச்சும் மிக மிக இயல்பாகவே இருக்கும். அதேபோல் எந்த ஈகோவும் காட்டாமல் பழகும் அவர் தனது மனதில் பட்டதை யார் மனதையும் புண்படுத்தாமல் சொல்லும் வித்தையை தெரிந்தவர்.
பிஸி ஏ.ஆர்.ரஹ்மான்: ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் சிம்பு நடித்த பத்து தல படம், மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்கள், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு நடித்த மாமன்னன் படங்கள் கடந்த வருடம் வெளியாகின. படத்தில் அவரது இசையமைப்பில் உருவான அத்தனை பாடல்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.
மாமன்னன் ரஹ்மான்: பொதுவாக ஏ.ஆர்.ரஹ்மான் மீது ஒரு அடையாளம் இருக்கிறது. ஷங்கர், மணிரத்னம் போன்ற பெரிய இயக்குநர்களின் படங்களுக்குத்தான் இசையமைப்பார் என்பதுதான் அது. ஆனால் மாமன்னன் படத்துக்கு இசையமைத்ததன் மூலம் தனக்குள் அப்படி எந்த பாகுபாடும் இல்லை என்பதை உணர்த்தியிருக்கிறார். கடைசியாக அவரது இசையமைப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் திரைப்படம் வெளியானது. படமும் சூப்பர் ஹிட்; ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் சூப்பர் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் தேசிய விருது: இந்தச் சூழலில் ஏ.ஆர்.ரஹ்மான் முதல் படத்திலேயே தேசிய விருது வென்றதற்கு யார் காரணம் என்பது குறித்து பார்க்கலாம். அதாவது ரோஜா படம் தேசிய விருது போட்டிக்கு சென்றபோது ஜூரிக்களில் ஒருவராக இருந்தவர் இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான பாலு மகேந்திரா. ஏ.ஆர்.ரஹ்மான் மட்டுமின்றி இளையராஜாவும் அந்தப் போட்டியில் இருந்திருக்கிறார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இளையராஜாவும், பாலுமகேந்திராவும் மிக மிக நெருங்கிய நண்பர்கள்.
பாலு மகேந்திராவுக்கு இரண்டு ஓட்டுக்கள்: அந்தப் போட்டியில் இளையராஜாவுக்கும், ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் சமமான வாக்குகள் கிடைத்திருக்கின்றன. இதனால் ஜூரி குழு என்ன செய்வதென்று குழம்பி நின்றிருக்கிறது. அந்த சமயத்தில் பாலு மகேந்திராவுக்கு ஜூரி என்கிற் அடிப்படையில் இரண்டு வாக்குகள் இருந்திருக்கின்றன. பாலு மகேந்திராவின் வாக்குகள்தான் யார் வெற்றியாளர் என்பதை தீர்மானிக்கும் நிலையில் இருந்தன.
வேண்டிக்கொண்ட பாலு: என்ன செய்வதென்று பாலு மகேந்திராவுக்கு தெரியவில்லை. அப்போது கண்களை மூடிக்கொண்டு அவர் நல்ல முடிவை எடுக்கும் ஞானத்தை கொடு இறைவனே என்று வேண்டிக்கொண்டாராம். பிறகு கண் விழித்தவர் தனது இரண்டு வாக்குகளையும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு செலுத்திவிட்டாராம். அதன் மூலம் ரஹ்மானுக்கு முதல் தேசிய விருது கிடைத்திருக்கிறது.
இளையராஜா ரியாக்ஷன்: இவை எல்லாம் முடிந்த பிறகு இளையராஜாவை சந்தித்த பாலு மகேந்திரா நடந்தவற்றை சொல்லி, நான் ஏன் அப்படி செய்தேன் தெரியுமா ராஜா.. 22 வயது தமிழ் பையன் ஒருவன் முதல் படத்திலேயே பெரும் திறமைகளோடு வந்து நிற்கிறான். அவன் இனி வரும் காலங்களில் ஆஸ்கர்கள்கூட வாங்கலாம். ஆனால் முதல் விருது முக்கியம் அல்லவா. அதனால்தான் அப்படி செய்தேன் என்றாராம். அதற்கு உடனே இளையராஜா பாலு மகேந்திராவின் கைகளை பிடித்து, 'சரியான முடிவு எடுத்தீர்கள் பாலு மகேந்திரா. இதுதான் சரி' என்று மனதார சொன்னாராம். இதனை இயக்குநர் பாலு மகேந்திரா ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











