ஜெமினி கணேசன் வந்தால்தான் நடிப்பேன்.. ஷூட்டிங் ஸ்பாட்டில் அடம்பிடித்த சாவித்திரி
சென்னை: புதுக்கோட்டையில் பிறந்தவர் ஜெமினி கணேசன். கணபதி சுப்ரமணியன் சர்மா என்ற இயற்பெயரை கொண்ட அவர் பின் நாட்களில் ராமசாமி கணேசன் என தன்னுடைய பெயரை மாற்றிக்கொண்டார். அடிப்படையில் வேதியியல் படித்த அவர் சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றினார். ஆசிரியராக இருந்தாலும் அவருக்கு கலை மீது தீராத ஆர்வம் இருந்து வந்தது.
கலை மீது ஆர்வம் கொண்டாலும் எப்படி திரையுலகில் நுழைவது என்று தெரியாமல் இருந்தவர் ஆரம்பத்தில் ஜெமினி ஸ்டூடியோவில் பணிக்கு சேர்ந்தார். பிறகு மிஸ் மாலினி என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். கணேசன் என்ற பெயரில் அவர் அறிமுகமானாலும் பராசக்தி மூலம் பிரபலமான சிவாஜியும் கணேசன் என்று அழைக்கப்பட்டதால் தான் பணியாற்றிய ஜெமினி ஸ்டூடியோவின் பெயரை தன்னுடைய பெயருக்கு முன்னர் சேர்த்து ஜெமினி கணேசனாக மாறினார்.

ஹீரோ ஜெமினி: கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக அறிமுகமான ஜெமினி கணேசன் பெண் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன்படி மனம்போல மாங்கல்யம், வஞ்சிக்கோட்டை வாலிபன் நான் அவனில்லை உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்தவர்; நான் அவனில்லை படத்தில் மட்டும் ஒன்பது ரோல்களில் நடித்து அனைவரையும் அசத்தினார்.
அந்தக் கால விஜய் சேதுபதி: தற்போது விஜய் சேதுபதி எப்படி ஹீரோவாக இருந்தாலும் இன்னொரு நடிகருடன் சேர்ந்து நடிப்பது, வில்லனாக நடிப்பது என கலக்கிவருகிறாரோ அதேபோல்தான் ஜெமினி கணேசனும். தன்னுடைய கரியர் பீக்கில் இருந்தபோதே எம்ஜிஆர், சிவாஜி கணேசன் உள்ளிட்டோருடன் இணைந்து நடித்தார். அது ஒருபக்கம் அவருக்கு பலமாக இருந்தாலும் மற்றொரு பக்கம் பலவீனமாக இருந்தது.
காதல் மன்னன்: சிவாஜியை நடிகர் திலகம், எம்ஜிஆரை புரட்சி தலைவர் என்று பலரும் அழைக்க கோலிவுட்டில் முதல் காதல் மன்னனாக ஜெமினி கணேசன் மாறினார். அவரது உருவம், ஹேர் ஸ்டைல் என அனைத்துமே பெண்களை கவர்ந்தன. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் தமிழ் சினிமாவின் முதல் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் ஜெமினி கணேசன் என்பது குறிப்பிடத்தக்கது.
சாவித்திரியுடன் திருமணம்: ஜெமினி கணேசனுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து குழந்தைகள் இருந்தனர். அந்த சமயத்தில்தான் மனம் போல மாங்கல்யம் படத்தில் சாவித்திரியுடன் நடித்தார். முதல் படத்திலேயே இருவருக்குமான பழக்கம் காதலாக மாறியது. அதுமட்டுமின்றி திருமணமும் செய்துகொண்டனர். அவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையானவற்றை ஜெமினி கணேசன் செய்து வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அடம் பிடித்த சாவித்திரி: இந்நிலையில் ஜெமினி கணேசன் மீது சாவித்திரிக்கு இருந்த தீவிரமான காதலை ரசிகர்கள் உணரும்படி ஒரு சம்பவம் தெரியவந்திருக்கிறது. அதாவது ஜெமினியும், சாவித்திரியும் இணைந்து நடித்த படங்களில் ஒன்று மனம் போல மாங்கல்யம். அந்த படத்தின் ஷூட்டிங்கிற்கு ஒருமுறை ஜெமினி கணேசனால் வரமுடியவில்லையாம். இதனை தெரிந்துகொண்ட சாவித்திரி அவர் வரவில்லை என்றால் என்னால் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டாராம்.
அன்றைய தினம் இருவருக்கும் கம்பைன் காட்சிகள்கூட இல்லையாம். சாவித்திரியை வைத்து தனியாகத்தான் காட்சிகள் எடுக்கப்படவிருந்ததாம். அதுவரை ஜெமினியும், சாவித்திரியும் காதலிப்பது தெரியாமல் இருந்த சூழலில் சாவித்திரி ஜெமினி மீது காதலில் இருக்கிறார் என்பதை அப்போதுதான் படக்குழு தெரிந்துகொண்டதாம்.


Click it and Unblock the Notifications











