Kamal Haasan - ரூமில் நடந்த விஷயம்.. உடனடியாக காலி செய்த கமல் ஹாசன்.. என்ன நடந்தது தெரியுமா?
சென்னை: நடிகர் கமல் ஹாசன் இந்தியாவில் அனைவராலும் அறியப்பட்டவர். சிவாஜிக்கு அடுத்ததாக நடிப்பு பல்கலைக்கழகம் என்று புகழப்படுபவர் அவர். நடிப்பு, நடனம், கதை, திரைக்கதை, பாடல்கள் என அனைத்திலும் புகுந்து விளையாடக்கூடிய அவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் என்ற படத்தில் நடித்துவருகிறார். அவர் நடிப்பில் இந்தியன் 2 படமும் வெளியாகவிருக்கிறது. இந்தச் சூழலில் அவர் குறித்த ஒரு சுவாரசியமான விஷயத்தை இதில் பார்க்கலாம்.
கமல் ஹாசன் என்றால் குழந்தை முதல் பெரியவர்கள் வரை தெரியும். தனது 8ஆவது வயதிலேயே கேமரா முன்பு நின்று, அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என கொஞ்சம் மழலை முகத்துடன் எந்தவித பதற்றமுமின்றி நடித்தவர். தொடர்ந்து சினிமாவில் பயணப்பட்ட அவர் முதலில் தங்கப்பன் மாஸ்டரிடம் உதவி நடன இயக்குநராக பணியாற்றினார். பிறகு கே.பாலசந்தர் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான அவர் இதுவரை 233 படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழகம்: தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை அனைவரும் நடிப்பு பல்கலைக்கழகம் என்று சொல்வார்கள். அவருக்கு அடுத்ததாக கமல் ஹாசன் அந்த இடத்தில் இருக்கிறார். ஆனால் ஒரு வித்தியாசம் சிவாஜியை நடிப்பு பல்கலைக்கழகம் என்று சொல்லலாம்; கமல் ஹாசனை சினிமா பல்கலைக்கழகம் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அவர் சினிமாவில் பல்துறைகளில் வித்தகராக ஜொலித்துக்கொண்டிருக்கிறார். டெக்னாலஜி பெரிதாக வளராத காலகட்டத்திலேயே பல டெக்னாலஜிகளை முயன்று பார்த்து கோலிவுட்டுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் அவர்.
ரீ என்ட்ரி: அப்படிப்பட்ட கமல் ஹாசன் சில வருடங்களுக்கு முன்பு சினிமாவிலிருந்து ஒதுங்கி அரசியலுக்கு சென்றார். ஆனால் அங்கு அவர் எதிர்பார்த்தபடி சூழல் சாதகமாக அமையவில்லை. அதனையடுத்து மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்த அவர் விக்ரம் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். படம் மெகா ஹிட்டானது. அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார். அன்பறிவு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். ஷங்கர் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் இந்தியன் 2 படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.
கமல் ஹாசன் செய்தது: சினிமா என்றாலே கமல் ஹாசன் எதை இழக்க வேண்டுமானாலும் தயாராக இருப்பார் என்று அனைவருமே அறிந்தது. அப்படிப்பட்ட ஒரு விஷயம்தான் தெரியவந்திருக்கிறது. அதாவது பாரதிராஜா இயக்கத்தில் 1980ஆம் ஆண்டு வெளியான நிழல்கள் பட ஷூட்டிங் கமல் ஹாசன் வீட்டில் இருக்கும் அவரது பெர்சனல் அறையில் நடத்திக்கொள்ள அனுமதி கேட்டார்களாம்.
காலி செய்த கமல்: பாரதிராஜாவுடன் நல்ல புரிதலில் இருக்கும் கமல் உடனடியாக ஒத்துக்கொண்டு அந்த அறையை காலி செய்துவிட்டு பக்கத்து அறைக்கு ஷிஃப்ட் ஆகிவிட்டாராம். அந்த அறையில் படுக்கையோ, மெத்தையோ எதுவுமே இருக்காதாம். ஆனால் அதையெல்லாம் பெரிதாக காட்டிக்கொள்ளாமல் படத்தின் ஷூட்டிங் முடியும் வரை அந்த அறையிலேயே தங்கி தான் நடிக்கும் இன்னொரு படத்தின் ஷூட்டிங்கிற்காக கிளம்பி செல்வாராம். கிளம்பி செல்லும்போதெல்லாம் பாரதிராஜாவிடம் பேசிவிட்டுத்தான் செல்வாராம்.
திணறிய நிழல்கள் ரவி: அப்படி ஒருமுறை கிளம்பி பாரதிராஜாவை சந்திக்க வந்தவர் கொஞ்ச நேரம் படத்தின் ஷூட்டிங்கை பார்த்தாராம். ஆனால் கமல் ஹாசன் நிற்பதால் நிழல்கள் ரவிக்கு பதற்றம் அதிகமாகி நடிப்பில் சொதப்பிவிட்டாராம். அவர் சென்ற பிறகு நிழல்கள் ரவி நன்றாக நடித்தாராம். இதனை நடிகர் நிழல்கள் ரவி சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











