Kamal Haasan - என்னது அவங்க அம்மா இல்லையா?.. அய்யய்யோ.. 4 வயதில் கதறி அழுத கமல் ஹாசன்
சென்னை: கமல் ஹாசன் 50 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் இருக்கிறார். அவரது ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒரு புதுமையை புகுத்தி தனது நடிப்பில் வித்தியாசத்தை காண்பிக்கும் அவர்தான் பல நடிகர்களுக்கு இன்ஸ்பிரேஷன், ரோல் மாடல். இடையில் சில காலம் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் விக்ரம் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து; இப்போது படு பிஸியாக நடித்துவருகிறார். இந்தியன் 2வில் நடித்து முடித்திருக்கும் அவர் இப்போது தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார்.
கமல் ஹாசன் இந்திய சினிமாவில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் நீக்க முடியாதது. அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்று மழலை வயதிலேயே கேமராவுக்கு முன்பு தோன்றிய அவர் பிறகு நடன உதவியாளராக தங்கப்பன் மாஸ்டரிடம் சேர்ந்தார். அதன் பின்னர் நடிகராகவும் அறிமுகமான அவர் கே.பாலசந்தரின் ஆஸ்தான மாணவராக விளங்கினார். தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் வித்தியாசத்தை காண்பிக்கும் அவரை பலரும் ஃபாலோ செய்துவருகின்றனர். இதனாலேயே சிவாஜிக்கு அடுத்து சினிமா பல்கலைக்கழகம் கமல் ஹாசனே என்று போற்றப்படுகிறார்.

ஆல் ஏரியாவிலும் கமல் கில்லி: நடிப்பு, நடனம் மட்டுமின்றி இயக்கம், தயாரிப்பு, பாடல்கள் எழுதுவது, பாடுவது என அத்தனை ஏரியாவிலும் தன்னை பலமாகவே நிரூபித்திருக்கிறார். நடிப்பில் எப்படி புதுமையை புகுத்துவாரோ அதேபோல் இயக்கத்திலும் அவர் பல புதுமைகளை புகுத்தியிருக்கிறார். முக்கியமாக விருமாண்டி படத்துக்கு அவர் அமைத்த திரைக்கதை இன்றுவரை பிரமிக்க செய்வது. அதேபோல் எந்தத் தொழில்நுட்பம் வந்தாலும் அதை முதலில் சோதனை செய்துபார்ப்பவரும் கமலே. அதனால்தான் வைரமுத்து, "சோதனை உன்னை சூழ்ந்து நின்றாலும் சோதனை முயற்சி சோர்வுறவில்லை" என்று தசாவதாரம் படத்தில் எழுதினார்.
கமல் ஹாசனின் குடும்பம்: கமல் ஹாசன் பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர். படிப்பை நிறுத்திவிட்டு நடிப்பை அவர் தேர்ந்தெடுத்தபோது அவரது குடும்பம் முழுக்க முழுக்க சப்போர்ட்டாக இருந்தது. அதனால்தான் அவரால் இவ்வளவு தூரம் வந்திருக்க முடிந்தது. நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில்கூட தன்னுடைய குடும்பம் குறித்து ரொம்பவே பெருமையாக பேசியிருந்தார் கமல் ஹாசன். அவருக்கு பக்க பலமாக இருந்தவர்களில் இருவர் முக்கியமானவர்கள் ஒருவர் சந்திரஹாசன், இன்னொருவர் சாருஹாசன்.
சகோதரர் பேட்டி: கமலின் மூத்த சகோதரர் சந்திரஹாசன் சினிமாவில் தலைகாட்டவில்லை என்றாலும்; இன்னொரு சகோதரர் சாருஹாசன் ஜெய்ஹிந்த், தளபதி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். சாருஹாசனின் மனைவி கோமளவள்ளிதான் கமல் ஹாசனை வளர்த்திருக்கிறார். இந்தச் சூழலில் தனது தாய் குறித்த விஷயம் தெரியவந்ததும் கமல் ஹாசன் தன்னுடைய நான்கு வயதில் அழுத சம்பவம் ஒன்று தெரியவந்திருக்கிறது.
என்ன நடந்தது?: அதாவது சாருஹாசன் திருமணம் செய்துகொள்ளவேகூடாது என்ற முடிவில்தான் இருந்தாராம். ஆனால் அப்போது கமல் ஹாசனின் தாய் ராஜலட்சுமி கமலை வயிற்றில் சுமக்க தொடங்கினாராம். அப்போது சாருஹாசனிடம், எனக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால் இந்தப் பிள்ளையை (கமல்) யார் வளர்ப்பார். எனவே நீ திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கூறினாராம். அதனையடுத்து கோமளவள்ளியுடன் சாருஹாசனுக்கு திருமணம் நடந்திருக்கிறது.
தாயாக மாறிய அண்ணி: 19 வயதில் சாருஹாசனை திருமணம் செய்துகொண்ட கோமளவள்ளி; கமல் ஹாசன் பிறந்ததும் அவரை வளர்க்க தொடங்கினாராம். அதன் காரணமாக தன்னுடைய தாய் கோமளவள்ளிதான் என்று கமல் நினைத்துக்கொண்டே இருந்தாராம். ராஜலட்சுமியும் கோமளவள்ளியிடம்; கமல் உன்னையே தாயாக நினைக்கட்டும் உண்மையை சொல்ல வேண்டாம் என்று அன்பு கட்டளை இட்டிருக்கிறார். கோமளவள்ளியும் அதற்கேற்றபடியே நடந்திருக்கிறார்.
அழுத கமல் ஹாசன்: இருந்தாலும் வீட்டில் வேலை செய்பவர்கள் மூலம் கோமளவள்ளி தன்னுடைய தாய் இல்லை; ராஜலட்சுமிதான் தாய் என்று கமல் ஹாசனுக்கு தெரியவந்ததாம். இந்த விஷயத்தை அறிந்துகொண்ட போது கமலுக்கு நான்கு வயதாம். அதனையடுத்து நாள் முழுவதும் கமல் ஹாசன் அழுதுகொண்டே இருந்தாராம். யாராலும் உடனடியாக அவரை சமாதானம் செய்ய முடியவில்லையாம். பிறகு ஒருவழியாக சமாதானம் ஆனாராம். இதனை கமல் ஹாசனின் அண்ணியும், சாருஹாசனின் மனைவியுமான கோமளவள்ளி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











