Nagesh - தயாரிப்பாளர் வீட்டு சுவர் ஏறி குதித்த நாகேஷ்.. அடேங்கப்பா எவ்வளவு கஷ்டப்பட்ருக்காரு பாருங்க
சென்னை: நடிகர் நாகேஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாதவர். உடல்மொழி, வாய் மொழி என அனைத்திலும் காமெடியை கலந்துகட்டி அடிப்பவர். இன்றுவரை எத்தனை காமெடி நடிகர்கள் வந்தாலும் அவரது இடத்தை நெருங்கவே முடியவில்லை என்பதுதான் உண்மை. இந்தச் சூழலில் அவர் தனது சம்பளத்தை பெறுவதற்காக தயாரிப்பாளரின் வீட்டு சுவர் ஏறி குதித்த சம்பவம் தெரியவந்திருக்கிறது.
அரசாங்க வேலை பார்த்துக்கொண்டிருந்த நாகேஷுக்கு கலை மீது ஆர்வம் இருந்ததால் வேலையை உதறிவிட்டு சென்னை வந்தார். தொடர்ந்து நாடகங்களில் நடித்து வந்த அவர் மனமுள்ள மறுதாரம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் அந்தப் படம் தோல்வியடைந்தது. தொடர்ந்து நெஞ்சில் ஒரு ஆலயம் படத்தில் நடித்தார். அந்தப் படம் ஓரளவு பெயரை பெற்றுக்கொடுத்தது. அவரது திரை வாழ்க்கையில் திருப்புமுனையாக இருந்தது கே.பாலசந்தர் எழுதிய நாடகத்தை மையமாக வைத்து கிருஷ்ணன் -பஞ்சு இயக்கிய சர்வர் சுந்தரம் திரைப்படம்.அந்தத் திரைப்படத்தில் நாகேஷின் உடல்மொழியும், நடிப்பும் வேறு தளத்தில் இருந்தன. இதனால் அனைவராலும் கவனிக்கப்பட்டார் நாகேஷ்.

பிஸியான நடிகர்: சர்வர் சுந்தரம் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்தவருக்கு திருவிளையாடல் திரைப்படம் அடுத்த திருப்புமுனையாக அமைந்தது. அதில் சிவாஜி கணேசனுக்கு போட்டியாக நடித்து அப்ளாஸை அள்ளினார். அதேபோல் அவர் நடித்த நீர்க்குமிழி, காதலிக்க நேரமில்லை, பட்டினத்தில் பூதம், தில்லானா மோகனாம்பாள் உள்ளிட்ட பல படங்கள் மெகா ஹிட்டடித்தன. நாகேஷின் நடிப்பும் உச்சம் சென்றது.
1000 படங்கள்: நாகேஷ் கிட்டத்தட்ட 1000 படங்கள்வரை நடித்திருக்கிறார். காமெடியன், கேரக்டர் ரோல், வில்லன் என எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் புகுந்து விளையாடக்கூடியவர் நாகேஷ். இன்றுவரை யார் காமெடி செய்தாலும் அதில் நாகேஷின் உடல்மொழி கொஞ்சமேனும் வந்துவிடும். அந்த அளவு அவர் இந்த தமிழ் திரை உலகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி சென்றிருக்கிறார்.
சுவர் ஏறி குதித்த நாகேஷ்: இந்தச் சூழலில் நாகேஷ் பற்றி புதிய தகவல் ஒன்று தெரியவந்திருக்கிறது. அதாவது அவர் தாமரைக்குளம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். ஆனால் அந்த படத்தில் நடித்ததற்கான சம்பளத்தை தயாரிப்பாளர் கொடுக்கவில்லையாம். அதற்கு காரணம் நாகேஷின் நடிப்பு சரியில்லை என்பது அந்தத் தயாரிப்பாளரின் எண்ணமாக இருந்ததாம். எனவே சம்பளமும் கொடுக்காமல் இழுத்தடித்துவந்தராம்.
இருந்த வேலையையும் விட்டுவிட்டதால் நடித்த படத்திலும் சம்பளம் வராததாலும் ரொம்பவே கஷ்டப்பட்டாராம் நாகேஷ். அந்தச் சமயத்தில் அவரின் நண்பர்களும் உதவவே இல்லையாம். அதனையடுத்து படத்தின் தயாரிப்பாளரை பார்த்து சம்பளத்தை கேட்போம் என்று நினைத்து வீட்டுக்கு சென்றிருக்கிறார் நாகேஷ். ஆனால் அந்த வீட்டின் செக்யூரிட்டியோ நாகேஷின் தோற்றத்தை பார்த்து அவரை வீட்டுக்குள் விடவில்லையாம்.
நாகேஷ் எவ்வளவு சொல்லிப்பார்த்தியும் செக்யூரிட்டி தனது முடிவில் உறுதியாக இருந்தாராம். இதனையடுத்து நாகேஷோ, சரி இனி பயனில்லை என்று நினைத்துக்கொண்டு வீட்டுக்கு பின்புறம் சென்று ஏறி குதித்துவிட்டாராம். வீட்டுக்குள் சென்று தயாரிப்பாளரை பார்த்த நாகேஷ் சம்பளம் கேட்டிருக்கிறார். அப்போதும் அந்தத் தயாரிப்பாளர் பணம் இல்லை என்று சொல்லி மறுத்துவிட்டாராம்.


Click it and Unblock the Notifications











