Rajini - எனக்கு மட்டும் என்ன ஸ்பெஷல்?.. நானும் அப்படித்தான் பண்ணுவேன்.. ரஜினி செய்த தரமான சம்பவம்
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவர். அவர் தற்போது த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தச் சூழலில் அவர் பற்றிய விஷயம் ஒன்று தெரியவந்திருக்கிறது. அதனை சமூக வலைதளங்களில் பார்த்த ரசிகர்கள் தலைவர் எவ்வளவு எளிமையா இருந்திருக்கிறார் என்று நெகிழ்ச்சியோடு கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.
பெங்களூருவில் பேருந்து நடத்துநராக இருந்து தற்போது இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக மாறி நிற்கிறார் ரஜினிகாந்த். அவரது நடிப்பில் கடைசியாக லால் சலாம் திரைப்படம் வெளியானது. அதில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். படம் படுதோல்வியை சந்தித்திருக்கிறது. அதற்கு முன்னதாக நடித்த ஜெயிலர் படம் மெகா ஹிட்டானது. கடந்த சில வருடங்களாகவே ஹிட்டுக்கு ஏங்கிக்கொண்டிருந்த ரஜினிக்கு ஜெயிலர் நிவாரண மருந்தாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 700 கோடி ரூபாய்வரை படம் உலகம் முழுவதும் வசூலித்தது.

வேட்டையன்: தற்போது அவர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். ஜெய்பீம் படத்தை இயக்கிய இயக்குநர் என்பதால் ஞானவேல் இந்தப் படத்தில் ரஜினியை வைத்து எந்த மாதிரியான விஷயத்தை பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதேசமயம் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான டைட்டில் டீசரை பார்க்கையில் ஒருவேளை படம் கமர்ஷியல் பாதையில் பயணிக்குமோ என்ற சந்தேகத்தை ரசிகர்கள் எழுப்பிவருகின்றனர்.
நட்சத்திர பட்டாளம்: இந்தப் படத்தில் ரஜினிகாந்த்துடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ரித்திகா சிங், துஷாரா விஜயன், மஞ்ச் வாரியர், ராணா டகுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஃபகத் பாசில் ரஜினிக்கு மகனாகவும், ராணா டகுபதிதான் படத்துக்கு வில்லன் என்றும் கூறப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.
தலைவர் 171: இந்தப் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171ஆவது படத்தில் நடிக்கிறார். இப்படி ரஜினிகாந்த் இப்போதும் படுபிஸியாக இருப்பதை பார்த்து ஒட்டுமொத்த திரையுலகும் ஆச்சரியம்தான் படுகிறது. கவிஞர் வைரமுத்து ரஜினிக்கு, 'மீசை வைத்த குழந்தையப்பா' என்று ஒரு பாடலில் எழுதியிருப்பார். அதற்கேற்றபடி குழந்தைபோல் படு சுறுசுறுப்பாக இருக்கிறார் ரஜினி. அந்தப் படத்தை முடித்துவிட்டு ஒன்று மாரி செல்வராஜ் இயக்கத்திலோ அல்லது தனது இரண்டாவது மகள் இயக்கத்திலோ நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.
எளிமை: ரஜினிகாந்த் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் தான் கடந்து வந்த பாதையை மறக்காமல் எளிமையாக இருப்பார் என்று பலர் சொல்வார்கள். ஜெயிலர் ஷூட்டிங்கின்போதுகூட தன்னை பார்த்தால் ரஜினிகாந்த் எழுந்துவிடுவார். இயக்குநருக்கு அவ்வளவு மரியாதை கொடுக்கிறார் என்று அப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் புவனா ஒரு கேள்விக்குறி படத்தின்போது நடந்த சம்பவம் ஒன்றை இதில் பார்க்கலாம்.
என்ன நடந்தது: அதாவது புவனா ஒரு கேள்விக்குறி படத்தில் ஒரு பாடல் காட்சியை எடுக்க திட்டமிட்டிருக்கிறார் அதன் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன். இதற்காக நடன கலைஞர்கள், ரஜினிகாந்த், முத்துராமன் உள்ளிட்டோர் தடா அருகே சென்றிருக்கிறார்கள். எப்போது வேகமாக ஷூட்டிங் செய்யும் எஸ்.பி.முத்துராமன் பாடலை ஒரே நாளில் எடுத்து முடிக்க திட்டமிட்டிருக்கிறார். ஆனால் சில காரணங்களால் அவ்வாறு ஷூட் செய்ய முடியாமல் தாமதம் ஆகியிருக்கிறது. அதனால் எல்லோரும் சென்னைக்கு சென்றுவிட்டு மறுநாள் சென்னை வருவது செலவும் வைக்கும், அலைச்சலையும் கொடுக்கும் என்று முத்துராமன் முடிவு எடுத்திருக்கிறார்.
நீங்க போங்க: அதனால் அருகில் இருந்த டீக்கடையில் கிடைப்பதை சாப்பிட்டுவிட்டு ஒரு வீட்டின் மொட்டை மாடியில் படுத்துவிட்டு அனைவரும் ஷூட்டிங்கை முடித்து மறுநாள் கிளம்பலாம் என்று சொல்லிவிட்டு; ரஜினியிடம் சென்று, 'நீங்கள் மட்டும் சென்னைக்கு போய்விட்டு நாளை வாருங்கள்' என சொல்லியிருக்கிறார். ஆனால் அதற்கு ரஜினிகாந்த்தோ மறுத்துவிட்டாராம்.
நான் மட்டும் ஸ்பெஷலா?: மேலும், நான் மட்டும் என்ன ஸ்பெஷலா?.. உங்களுடன் நானும் இன்று இங்கு தங்குகிறேன். அந்த மொட்டை மாடியில் ஒரு மூலையில் இடம் கொடுத்தால் போதும் என்று சொல்லிவிட்டு அங்கேயே தூங்கி எழுந்து மறுநாள் படப்பிடிப்பில் கலந்துகொண்டாராம்.


Click it and Unblock the Notifications











