Sivaji Ganesan - பாடகிக்கு சீர் அனுப்பிய சிவாஜி கணேசன்.. ரியல் பாசமலர் கதை தெரியுமா?.. செம விஷயமா இருக்கே
சென்னை: சிவாஜி கணேசன் இந்திய திரைத்துறையில் தவிர்க்க முடியாத ஆளுமை. எந்தவிதமான கதாபாத்திரம் கொடுத்தாலும் அதுவாகவே மாறிவிடும் அவர்தான் எக்கால நடிகர்களுக்கும் வழிகாட்டியாக இருந்துகொண்டிருக்கிறார். இந்தச் சூழலில் பாடகி லதா மங்கேஷ்கருக்கும், சிவாஜி கணேசனுக்கும் இருந்த உன்னதமான உறவு குறித்து தெரியவந்திருக்கிறது. அதுகுறித்து இதில் பார்க்கலாம்.
இந்திய சினிமாவின் நடிப்பு பல்கலைக்கழகம் என போற்றப்படுபவர் சிவாஜி கணேசன். நடிகர் திலகம், செவாலியே என ரசிகர்களால் போற்றப்படுபவர். எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிடும் சிறப்புடையவர் சிவாஜி கணேசன். அப்போதும் சரி இப்போதும் சரி எப்போதும் சரி யார் நடிக்க வந்தாலும் அவர்களின் ஆதர்ச ஹீரோவாக இருப்பவர் சிவாஜி கணேசன் மட்டுமே.

பராசக்தி ஹீரோ: கோலிவுட்டின் முகத்தை மாற்றிய படம் பராசக்தி. கருணாநிதி கதை, திரைக்கதை, வசனம் எழுதிய அந்தப் படத்தின் மூலம்தான் சிவாஜி கணேசன் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். அந்தப் படத்தின் சிவாஜியை தவிர வேறு யார் அறிமுகமாகியிருந்தாலும் அதில் உள்ள வெயிட்டேஜை தாங்கியிருப்பார்களா என்பது சந்தேகமே. ஏனெனில் அனல் பறந்த கருணாநிதியின் வசனத்தை அடுத்தக்கட்டத்துக்கு சிவாஜி மட்டுமே எடுத்து சென்றார். முதல் படத்திலேயே அப்படி காட்சிகளும், வசனங்களும் அமைவது வரம். அது சிவாஜிக்கு கைகூடியது.
சிவாஜிதான் அடையாளம்: மன்னர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்பதை தெரிந்துகொள்ள பலருக்கும் ஆர்வம் இருப்பது உண்டு. ஆனால் யாரும் நேரில் பார்த்ததில்லை. சினிமாதான் அவர்களை அடையாளப்படுத்தியிருக்கிறது. அப்படி பலர் மன்னர்களாக நடித்தாலும் சிவாஜிதான் மன்னர்களுக்கு அடையாளமாக இருக்கிறார். வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன் என யாரை நினைத்தாலும் சிவாஜிதான் ரசிகர்கள் கண் முன்பு வந்து செல்வார்.
கட்டுப்படுத்திய மகேந்திரன்: சிவாஜி போல் ஒரு நடிகர் இனி எங்குமே கிடைக்கமாட்டார். அது பெரும்பாலும் அனைவராலும் ஒத்துக்கொள்ளப்பட்டுவிட்டது. ஆனால் சிவாஜி கணேசன் ஓவர் ஆக்டிங் செய்வார் என்ற விமர்சனமும் எழுந்தது உண்டு. அதற்கு இயக்குநர் மகேந்திரன் இப்படி பதில் சொன்னார், ""சிவாஜியை ஓவர் ஆக்டிங் என்று சொல்கிறார்கள். நான் அப்படி சொல்லமாட்டேன் சிவாஜி கணேசனின் நடிப்புக்கு ஏற்ற கதையை இதுவரை யாருமே எழுதியதில்லை. "".
கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்: அதற்கு உதாரணமாக சிவாஜி கணேசன் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக மாறிய பின்பு அவரது நடிப்பை பார்த்தால் புரியும். படையப்பா, தேவர் மகன், ஒன்ஸ்மோர், பூப்பறிக்க வருகிறோம் என அவர் குணச்சித்திர நடிகராக தோன்றிய படங்களில் ஒரு சீனில்கூட மிகை நடிப்பு இருக்காது. அதுதான் ஒரிஜினல் சிவாஜி கணேசன். அவர் விரும்பியதையும் அதைத்தான் என்பதை எளிதாக உணர்ந்துகொள்ளலாம்.
பாசமலர்: சிவாஜி கணேசன் ஹீரோவாக நடித்து வெளியான பாசமலர் திரைப்படம் இன்றுவரை பலரது ஃபேவரைட். அண்ணனுக்கும், தங்கைக்கும் இடையே இருக்கும் பாசத்தை வைத்து படம் உருவாகியிருக்கும். இந்தச் சூழலில் சிவாஜி கணேசன் ரியலாகவே பாசமலர் அண்ணனாக வாழ்ந்திருக்கிறார். அதாவது மும்பையை சேர்ந்த பாடகி லதா மங்கேஷ்கர் பாடல்கள் பாடுவதற்கு சென்னைக்கு வருவது உண்டு. அப்போதெல்லாம் தங்குவதற்கு சரியான இடம் இல்லாமல் திண்டாடுவாராம்.
ஒருமுறை சிவாஜி கணேசனை பார்த்த அவர்: சென்னைக்கு வந்தால் தங்குவதற்கு ஒரு இடம் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். உடனடியாக சிவாஜி கணேசனோ தனது அன்னை இல்லத்திலேயே ஒரு அறையை நல்ல வசதிகளுடன் லதா மங்கேஷ்கருக்கு ஏற்பாடு செய்துகொடுத்தாராம். அதனைத் தொடர்ந்து எப்போது லதா சென்னைக்கு வந்தாலும் சிவாஜி வீட்டில்தான் தங்குவார். மேலும் தீபாவளி, பொங்கல் பண்டிகை வந்தால் அண்ணன் என்கிற முறையில் லதா மங்கேஷ்கருக்கு சீர் அனுப்புவாராம் சிவாஜி கணேசன். அதேபோல் லதாவும் சென்னைக்கு வந்தால் சிவாஜியின் குழந்தைகளுக்கு ஏராளமான கிஃப்ட்கள், சாக்லேட்டுகளை வாங்கிவருவாராம்.


Click it and Unblock the Notifications











