இப்போ கோடி கணக்கில் சம்பளம்.. அப்போ 6 ரூபாய் இல்லாமல் கடைக்காரரிடம் கூச்சப்பட்ட சூர்யாவை தெரியுமா?
மும்பை: சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். தமிழில் மட்டும் கவனம் செலுத்தி வந்த சூர்யா தற்போது ஹிந்தி சினிமா பக்கமும் கவனத்தை திருப்பியிருக்கிறார். விரைவில் அவர் ஒரு ஹிந்தி படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனையொட்டிதான் தனது மனைவி ஜோதிகாவுடன் அவர் மும்பையிலேயே செட்டில் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் சூர்யா 6 ரூபாய் இல்லாமல் இருந்த சம்பவம் தெரியவந்திருக்கிறது.
சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தோல்வியையே சந்தித்தது. அதனையடுத்து வணங்கான், கங்குவா, வாடிவாசல், புறநானூறு ஆகிய படங்களில் கமிட்டானார். இவற்றில் வணங்கானிலிருந்து வெளியேறிய அவர் வாடிவாசலில் நடிக்கிறாரா இல்லையா என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. அதேசமயம் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஞானவேல் ராஜா இந்தப் படத்தை தயாரிக்கிறார். திஷா பதானி ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

பல மொழிகளில்: சூர்யாவின் கரியரிலேயே கங்குவா படம்தான் ஹை பட்ஜெட் படம். 10க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகவிருக்கும் இப்படம் 3டி தொழில்நுட்பத்திலும் உருவாக்கப்பட்டிருக்கிறது. சிவா கடைசியாக இயக்கிய அண்ணாத்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. எனவே இந்தப் படத்தின் மூலம் கம்பேக் கொடுப்பதற்காக அவரும் காத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முடிந்த ஷூட்டிங்: படத்தின் ஷூட்டிங் சென்னை, கோவா, தாய்லாந்து, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்தது. மேலும் இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்றும்; இரண்டு பாகங்களுக்கான ஷூட்டிங்கையும் சிவா முடித்துவிட்டார் என்றும் ஒரு தகவல் அரசல் புரசலாக ஓடிக்கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது.
என்ன கதை: இந்தப் படமானது பீரியட் ஜானரில் வெளியாகும் என்று முதலில் சொல்லப்பட்டது. ஆனால் முழுக்க முழுக்க பீரியட் ஜானரில் கங்குவா வராது என்றும்; கதையின் பெரும்பாலான பகுதிகள் இந்தக் காலகட்டத்தில் நடப்பது மாதிரிதான் கதை அமைக்கப்பட்டிருப்பதாகவும்; குறிப்பிட்ட சில நிமிடங்கள்தான் பீரியட் ஜானரில் படம் நகரும் என்றும் படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிகிறது.
அடுத்தது பாலிவுட்: கங்குவா படத்தை முடித்த கையோடு அவர் பாலிவுட் பக்கம் கவனத்தை செலுத்த ஆரம்பித்திருக்கிறார். அதனால்தான் ஜோதிகா மற்றும் தனது குழந்தைகளுடன் மும்பையில் வீடு எடுத்து செட்டில் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது. இப்போது சூர்யா ஒரு படத்துக்கு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார். ஆனால் ஒருகாலத்தில் 6 ரூபாய் இல்லாமல் அவர் கஷ்டப்பட்டது தெரியவந்திருக்கிறது.
என்ன நடந்தது: அதாவது சூர்யா டிகிரி முடித்ததும் ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார். அவருக்கு அப்போது மாதம் 1200 ரூபாய் சம்பளம் ஃபிக்ஸ் செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி முதல் மாத சம்பளத்தையும் அவர் வாங்கியிருக்கிறார். வாங்கிய கையோடு தனது அம்மாவுக்கு ஒரு புடவை எடுத்துக்கொடுக்க முடிவு செய்து ஒரு துணிக்கடைக்கு சென்று புடவையையும் எடுத்துவிட்டாராம். ஆனால் அந்த புடவையின் விலை 1256 ரூபாயாம். கையில் இருந்த எக்ஸ்ட்ரா காசை போட்டாலும் 1250 ரூபாய்தான் இருந்ததாம். என்ன செய்வதென்று குழம்பிய சூர்யா; கடைக்காரரிடம் சென்று கையில் 6 ரூபாய் கம்மியாக இருக்கிறது என்று கூச்சத்தோடு சொல்லியிருக்கிறார். அதனையடுத்து அந்தக் கடைக்காரரும் 6 ரூபாயை குறைத்துக்கொண்டு புடவையை சூர்யாவுக்கு கொடுத்தாராம்.


Click it and Unblock the Notifications











