Vadivelu - என்னது வடிவேலுவுக்கு பாட்டு எழுதணுமா?.. நோ சொன்ன வைரமுத்து.. சம்பவம் செய்த தயாரிப்பாளர்
சென்னை: வைகைப்புயல் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் வடிவேலு. ராஜ்கிரணால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்ட அவர் தொடர்ந்து தனது திறமையை வளர்த்துக்கொண்டு தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார். சில பிரச்னைகளால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து மாமன்னன், சந்திரமுகி 2, மாரீசன் என்று பிஸியாக நடித்துவருகிறார் வடிவேலு.
தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் வடிவேலு. ராஜ்கிரணால் அறிமுகப்படுத்தப்பட்ட அவர் கவுண்டமணி, செந்தில் உச்சத்தில் இருந்தபோது அவர்களுடன் சேர்ந்து சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார். அந்தக் காலகட்டத்தில் விவேக்கும் வளர்ந்துவந்தார். எனவே வடிவேலு வளர்வதற்கு கடுமையான போட்டி சூழலே இருந்தது. ஆனால் எதற்கும் அஞ்சவில்லை வடிவேலு. தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டு உழைத்துக்கொண்டே இருந்தார் அவர்.

ஆரோக்கியமான வளர்ச்சி: குறிப்பாக, தன்னுடைய காமெடிகளில் தன்னை தானே தாழ்த்திக்கொண்டு மக்களை சிரிக்க வைத்தார் வடிவேலு. அதேபோல் எந்த ஈகோவும் இல்லாமல் விவேக்குடனும் சேர்ந்து நடித்தார். இதனால் அவரது வளர்ச்சி ஆரோக்கியமாகவே இருந்தது. ஒருகட்டத்தில் வயது மூப்பு காரணமாகவும்; காலம் மாறியதன் காரணமாகவும் கவுண்டமணியும் செந்திலும் சினிமாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்க ஆரம்பித்தனர்.
வைகை புயல்: அந்த வெற்றிடத்தை சரியாக பயன்படுத்திக்கொண்டார் வடிவேலு. தனக்கென தனி டீமை செய்து காமெடி செய்து ரகளைகட்டி அடித்தார். இதனால் அவரது வளர்ச்சி 2000களின் தொடக்கத்தில் புயல் வேகத்தில் இருந்தது. அவர் இல்லாத படங்களே இல்லை என்ற நிலைதான் அப்போது இருந்தது. பல படங்களில் நடித்தாலும் ஒவ்வொரு காமெடி காட்சியையும் வித்தியாசமான முறையிலும் புதிய பாணியிலும் நடித்து அப்ளாஸை அள்ளினார் வைகை புயல் வடிவேலு. சூழல் இப்படி இருக்க அவருக்கு ஏற்பட்ட சில நெருக்கடிகளாலும், பஞ்சாயத்துக்களாலும் சினிமாவிலிருந்து ஒதுங்கினார்.
இரண்டாவது இன்னிங்ஸ்: கிட்டத்தட்ட பத்து வருடங்கள் வனவாசம் இருந்த வடிவேலு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்குள் வந்தார். அந்தப் படம் தோல்வியடைந்தாலும் அடுத்ததாக வெளியான மாமன்னன் மாபெரும் வெற்றி பெற்றது.அடுத்ததாக ஃபகத் பாசிலுடன் இணைந்து மாரீசன் படத்தில் நடிக்கிறார். அதனை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படமும் வடிவேலுவின் பெயர் சொல்லும் படமாக அமையும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.
நோ சொன்ன வைரமுத்து: இந்நிலையில் வடிவேலுவுக்கு வைரமுத்து பாடல் எழுத மாட்டேன் என்று சொன்ன சம்பவம் தெரியவந்திருக்கிறது. அதாவது சேரன் இயக்கத்தில் உருவான பாரதி கண்ணம்மா திரைப்படம் கடந்த 1997ஆம் ஆண்டு வெளியானது. இதில் பார்த்திபன், மீனா, வடிவேலு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. ஹென்றி என்பவர் படத்தை தயாரித்திருந்தார்.
படத்தில் ஒரு பாடலை வடிவேலுவை பாட வைக்க தயாரிப்பாளர் திட்டமிட்டிருக்கிறார். ஆனால் அதற்கு சேரன் மறுத்துவிட்டாராம். அதனையடுத்து நேராக வைரமுத்துவிடம் சென்ற ஹென்றி வடிவேலு பாடுவதற்கு ஒரு பாடல் எழுத வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அதற்கு வைரமுத்துவோ, சேரன் சொல்லாமல் நான் எழுதமாட்டேன் என்று மறுத்துவிட்டாராம். அதனையடுத்து நேராக பாடலாசிரியர் வாலியிடம் சென்ற தயாரிப்பாளர் அவரை வைத்து அந்தப் பாடலை எழுதி வடிவேலுவை பாட வைத்தாராம். அந்தப் பாடல்தான் ரயிலு ரயிலு என்பதுகுறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications