யாரும் இல்லைன்னா என்ன?.. வீட்டு பணியாட்களை வைத்து பாடல் பதிவு செய்த ஏ.ஆர்.ரஹ்மான்.. என்ன நடந்தது?
சென்னை: இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உலக அளவில் புகழ் பெற்றவர். 90களில் சினிமா துறைக்கு வந்தவர் இன்றளவும் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்துகொண்டிருக்கிறார். கடைசியாக அவரது இசையமைப்பில் ஆடுஜீவிதம் திரைப்படம் வெளியானது. அடுத்ததாக தக் லைஃப், ராயன் உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருக்கின்றன. இந்தச் சூழலில் ஏ.ஆர்.ரஹ்மான் செய்த தரமான சம்பவம் குறித்து தெரியவந்திருக்கிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் ஆச்சரியமடைந்திருக்கின்றனர்.
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் ரசிகர்களாக இருக்கின்றனர். அவரது இசையை கேட்டுவிட மாட்டோமா, அவரை நேரில் சந்தித்துவிடமாட்டோமா, அவருடன் ஓரிரு வார்த்தைகள் பேசிவிடமாட்டோமா என பலர் தவம் இருக்கின்றனர். அந்த அளவுக்கு தனது இசையாலும் தனது நடவடிக்கையாலும் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான்.

ஈகோ இல்லாத இசைப்புயல்: இசையமைத்த முதல் படத்திலேயே தேசிய விருது, அதேபோல் கோல்டன் குளோப் விருது, ஆஸ்கர் விருதுகள் என உலகத்தின் புகழுடைய உச்சிக்கு சென்றவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஆனால் அவரது நடவடிக்கையும், பேச்சும் மிக மிக இயல்பாகவே இருக்கும். அதேபோல் எந்த ஈகோவும் காட்டாமல் பழகும் அவர் தனது மனதில் பட்டதை யார் மனதையும் புண்படுத்தாமல் சொல்லும் வித்தையை தெரிந்தவர் என்பதை அவர் பல முறை நிரூபித்திருக்கிறார்.
பிஸி ஏ.ஆர்.ரஹ்மான்: கடந்த வருடம் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் சிம்பு நடித்த பத்து தல படம், மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்கள், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு நடித்த மாமன்னன் படங்கள் கடந்த வருடம் வெளியாகின. படத்தில் அவரது இசையமைப்பில் உருவான அத்தனை பாடல்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. பின்னணி இசையும் உயர் தரத்தில் இருந்ததாக ரசிகர்கள் கூறினர்.
மாமன்னன் ரஹ்மான்: இந்த வருடத்தில் அவரது இசையமைப்பில் அயலான் திரைப்படமும், லால் சலாம் திரைப்படமும் வெளியாகின. இரண்டு படங்களில் அயலான் திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. ஆனால் லால் சலாம் படுதோல்வியை சந்தித்தது. குறிப்பாக லால் சலாம் படத்தின் இசையும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்று ரசிகர்கள் ஓபனாகவே பேச ஆரம்பித்தனர். இருந்தாலும் அடுத்தடுத்த படங்களில் கண்டிப்பாக ஏ.ஆர்.ரஹ்மான் இசை பேசுபொருளாக மாறும் என்று அவரது ரசிகர்கள் இருந்தனர். கடைசியாக அவரது இசையமைப்பில் ஆடுஜீவிதம் படம் வெளியானது. அதில் ரஹ்மானின் இசை கொண்டாடப்பட்டது. அடுத்ததாக தக் லைஃப், ராயன் உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருக்கின்றன.
இசை புயலின் சம்பவம்: இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் செய்த தரமான சம்பவம் குறித்த தெரியவந்திருக்கிறது. அதாவது விக்ரமன் இயக்கிய புதிய மன்னர்கள் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை. அந்தப் படத்தில் இடம்பெற்ற வானிலே ஏணி போட்டு பாடல் ட்யூனை விக்ரமனுக்கு போட்டுக்காட்டினாராம் ரஹ்மான். அப்போது அதில் கோரஸ் இருந்தால் நன்றாக இருக்கும் என்று விக்ரமன் சொன்னாராம்.
ரஹ்மான் செய்தது என்ன?: அதற்கு ஏ.ஆர்.ரஹ்மானோ இல்லை சார் இதில் கோரஸ் வேண்டாமே என்று சொல்ல; இல்லை கோரஸ் வேண்டும் என்று விக்ரமன் கூறினாராம். உடனே தனது உதவியாளரை அழைத்து கோரஸ் பாடுபவர்களை கூப்பிட்டு வரச்சொன்னாராம். ஆனால் அந்த நேரம் பார்த்து கோரஸ் பாடகர்கள் பிஸியாக இருந்தார்களாம். உடனே யோசித்த ரஹ்மான், தனது வீட்டில் பணிபுரியும் தோட்டக்காரர்கள், சமையல்காரர்களை அழைத்து வந்து எப்படி பாட வேண்டும் என சொல்லிக்கொடுத்து அந்தப் பாடலுக்கான கோரஸை ரெக்கார்ட் செய்தாராம். இதனை நடிகர் பாவா லட்சுமணன் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











