கண்ணதாசன், வைரமுத்து வரிகள் மீது நா. முத்துக்குமாரின் கண்கள்..எந்த பாட்டுல யூஸ் செஞ்சார் தெரியுமா?
சென்னை: தமிழ் சினிமா பாடலாசிரியர்களில் நா. முத்துக்குமாருக்கு எப்போதும் தனியிடம் உண்டு. அவர் எழுதிய பாடல்களில் பெரும்பாலும் எளிய வரிகளை பயன்படுத்தி ரசிகர்களை கவர்ந்தவர். 2000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய தொடர்ந்து இரண்டு முறை தேசிய விருதை பெற்ற அவர் உடல்நல குறைவால் தனது 41 வயதில் மரணமடைந்தார். அவரது மரணம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களுக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில் அவர் செய்த சம்பவம் குறித்து இதில் பார்க்கலாம்.
தமிழர்களுக்கு பாடல்கள் எப்போதும் இன்றியமையாத ஒன்று. சந்தோஷமோ, துக்கமோ அதனை பாடல்கள் வழி வெளிப்படுத்துவது தமிழர்களின் மரபு என்பது யாராலும் மறுக்க முடியாதது. அதன் நீட்சியாக வந்ததுதான் சினிமா பாடல்களும். மூன்று மணி நேர படம் சொல்லாத விஷயங்களைக்கூட 5 நிமிட பாடல் வரிகள் சொல்லிவிடும். எம்ஜிஆர், ரஜினிகாந்த் போன்ற பெரிய ஹீரோக்களுக்கே பாடல் வரிகள் ரொம்பவே உதவியிருக்கின்றன. அப்படி பாடல் எழுதுபவர்கள் காலத்தால் அழிக்க முடியாதவர்கள்.

நா.முத்துக்குமார்: அப்படி காலத்தால் அழிக்க முடியாத பாடலாசிரியர்களில் நா.முத்துக்குமாரும் ஒருவர். வீரநடை படத்தில் தனது முதல் பாடலை எழுதிய அவர் தொடர்ந்து செல்வராகவன், ராம், பாலாஜி சக்திவேல், வசந்தபாலன், ஷங்கர், பாலா என பல இயக்குநர்களின் படங்களில் பாடல்கள் எழுதியிருக்கிறார். அவர் பணியாற்றாத இசையமைப்பாளர்களே தமிழ் சினிமாவில் இல்லை. ஒரு வருடத்துக்கு அதிக பாடல்கள் எழுதியவர் என்ற பெருமையை பல ஆண்டுகள் தக்க வைத்திருந்தவர் அவர்.
எளிய வரிகள்: நா. முத்துக்குமாரின் பலமே தனது பாடல்களில் எளிமையான வரிகளை பயன்படுத்துவதுதான். அப்படி அவர் பயன்படுத்திய வரிகள் பல காதலர்களுக்கு, நண்பர்களுக்கு, சோகங்களுக்கு, ஏக்கங்களுக்கு என அனைத்துக்கும், அனைவருக்கும் பக்கபலமாக இருந்திருக்கின்றன. அவர் உவமைகளை வானத்திலிருந்தோ, நட்சத்திரத்திலிருந்தோ எடுக்காமல் மனிதர்களிடமும், அனுபவங்களிலிருந்தும் எடுத்ததுதான் அவரது தனி சிறப்பு. அப்படி அவர் எழுதியதால்தான் அவரால் இரண்டு முறை தொடர்ந்து தேசிய விருதுகளை பெற முடிந்தது.
வைரமுத்து வரிகள் மீது கண்கள்: பொதுவாக ஒரு படைப்பு என்பது இன்னொரு படைப்பின் ஈர்ப்பிலிருந்து உருவாவதுதான். அதுதான் கலையின் சூத்திரமும்கூட. நா. முத்துக்குமாரும் அதற்கு விதி விலக்கல்ல. வைரமுத்து ஒரு வரி எழுதியிருப்பார், 'இதயம் ஒரு கண்ணாடி உனது பிம்பம் ஊஞ்சல் ஆடுதடி’ என்ற வரியை எழுதியிருப்பார் கவிப்பேரரசு வைரமுத்து. அந்த வரிகள் மீது நா.முத்துக்குமாருக்கு நீண்ட நாட்கள் கண்களும், கவனமும் இருந்திருக்கிறது.
நா.முத்துக்குமாரின் செய்கை: அந்த வரிகளை எப்படி எழுதியிருப்பார் என்று ஆச்சரியத்தோடு இருந்த நா.முத்துக்குமார் அந்த வரிகளின் நீட்சியாக, 7ஜி ரெயின்போ காலனி படத்தில் இடம்பெற்ற 'கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை’ என்ற பாடலில், 'ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய கண்ணாடி இதயமில்லை’ என்று எழுதியிருப்பார். இப்படி சில பாடல்களின் வரிகளை மற்ற பாடலாசிரியர்களின் வரிகளின் தாக்கத்தால் எழுதியிருக்கிறார் முத்துக்குமார்.
'கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை.. காத்திருந்தால் பெண் கனிவதில்லை’என்ற வரிகள்கூட, கவியரசர் கண்ணதாசன் ஒரு பாடலில், 'கண்களின் வார்த்தைகள் புரியாதா காத்திருப்பேன் என்று தெரியாதா’ என்ற வரிகளின் தாக்கத்திலிருந்துதான் நா.முத்துக்குமார் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தவரின் தாக்கத்திலிருந்து சில வரிகளை முத்துக்குமார் எழுதியிருந்தாலும் பெரும்பாலான பாடல்களின் வரிகளை தனது சொந்த கற்பனையிலிருந்தும், அனுபவங்களிலிருந்தும் கொடுத்திருக்கிறார் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.


Click it and Unblock the Notifications











