இளையராஜா செம கில்லாடிதான் போங்க.. இஞ்சி இடுப்பழகி பாடல் உருவான கதை தெரியுமா?
சென்னை: இளையராஜா என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். பல வருடங்களாக தமிழ் சினிமா இசையில் தனக்கென தனி முத்திரையை தொடர்ந்து பதித்துவருபவர் அவர். இந்தக் கால இசையமைப்பாளர்களுடன் போட்டிப்போட்டு வேலை செய்துகொண்டிருக்கிறார் அவர். அவரது இசையமைப்பில் கடைசியாக விடுதலை 2 படம் வெளியானது. இந்தச் சூழலில் தேவர் மகன் படத்தில் இடம்பெற்றிருக்கும் இஞ்சி இடுப்பழகி பாடல் எப்படி உருவானது என்பதை பார்க்கலாம்.
இசைஞானி என்று அழைக்கப்படும் இளையராஜா தமிழ் சினிமாவின் இசையின் போக்கை மாற்றி வைத்தவர். அன்னக்கிளியில் ஆரம்பித்த அவரது பயணம் 50 வருடங்களை தொடவிருக்கிறது. இத்தனை வருடங்களில் அவர் 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இத்தனை படங்கள் அவர் பணியாற்றியிருந்தாலும் ஒரு படத்தின் இசை போல் இன்னொரு படத்தின் இசை இதுவரை இருந்ததில்லை என்பதிலேயே அவருடைய தனி சிறப்பை நாம் புரிந்துகொள்ளலாம்.

விடுதலை 2: தற்போதைய நவீன உலகத்தில் ரசிகர்களின் இசை ரசனை மாறிவிட்டாலும் அவர்கள் இளையராஜாவை விட்டு நகர்வதில்லை. எத்தனை இசையமைப்பாளர்கள் இப்போது இருந்தாலும் அவர்களுக்கெல்லாம் மணிமகுடமாக இருப்பது ராஜா மட்டும்தான். தற்கால தலைமுறையினர்கூட இளையராஜாவை வெகுவாக ரசித்து கொண்டாடிவருகின்றனர். வெற்றிமாறனும் அதற்காகத்தான் இளையராஜாவிடம் விடுதலை படத்தின் இரண்டு பாகங்களுக்காகவும் சென்றார். கடைசியாக அவரது இசையமைப்பில் விடுதலை 2 வெளியானது.
ராஜா மீது விமர்சனம்: இளையராஜாவை பலரும் புகழ்ந்தாலும் அவர் மீது விமர்சனங்களும் வைக்கப்படுகின்றன. அதாவது அவர் யாரையும் மதிக்க மறுக்கிறார்; அவருக்கு தலைக்கனம் அதிகம்; அவர் ஒரு வலதுசாரி சிந்தனையாளர் அதனால்தான் பாஜகவில் எம்பியாக இருக்கிறார் என்றெல்லாம் கூறுவார்கள். அதேசமயம் இளையராஜாவுக்கு தலைக்கனம் எல்லாம் இல்லை; ஒரு படைப்பாளிக்குரிய கர்வம்தான் இருக்கிறது என்று ஞானியின் ரசிகர்கள் தொடர்ந்து சொல்லிவருகிறார்கள்.
தேவர் மகன்: இதற்கிடையே இளையராஜா இசையமைத்த சிறந்த படங்கள் எத்தனையோ இருக்கின்றன. அவற்றில் முக்கியமான படம்தான் தேவர் மகன். கமல் ஹாசன், சிவாஜி கணேசன், கௌதமி, ரேவதி, நாசர், தலைவாசல் விஜய், வடிவேலு உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படத்தை பரதன் இயக்கியிருந்தார். படம் எப்படி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்ததோ அதேபோல் படத்தில் இடம்பெற்ற பாடல்களும் அதிரிபுதிரி ஹிட். இந்தச் சூழலில் அப்படத்தில் இடம்பெற்ற இஞ்சி இடுப்பழகி பாடல் எப்படி உருவானது என்பதை பார்க்கலாம்.
என்ன நடந்தது?: அதாவது இந்தப் பாடலின் கம்போஸிங்கிற்காக கமலும், இளையராஜாவும் அமர்ந்திருந்தார்களாம். அப்போது பாடலின் சூழ்நிலையை கமல் சொல்லிவிட்டு; ஹே தில்வானே என்ற ஹிந்தி பாடலை காண்பித்து; இதே மாதிரி வேண்டும் என்று கேட்டாராம். உடனே இளையராஜா இதே மாதிரியா என்று கேட்டுவிட்டு ஹார்மோனியத்தில் வைத்து மெதுவாக கமல் பாடிய பாடலை முணுமுணுத்தாராம் ராஜா. கொஞ்ச நேரத்திலேயே அந்த ட்யூனிலிருந்து இன்னொரு ட்யூனை உருவாக்கிவிட்டாராம். அந்த ட்யூனே இஞ்சி இடுப்பழகி பாடலின் ட்யூன். அதனை கேட்டு அசந்துவிட்டாராம் கமல் ஹாசன். இதனை கமலே ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்


Click it and Unblock the Notifications











