விஜயகாந்த்தின் அட்வைஸ்..முரளியின் சப்போர்ட்.. திருமணம் செய்யாத கௌசல்யா.. இவ்வளவு வலியா?
சென்னை: கோலிவுட்டில் 90களில் பிரபலமான ஹீரோயினாக வலம் வந்தவர் கௌசல்யா. விஜய், விஜயகாந்த், முரளி, பிரபுதேவா, சத்யராஜ் என ஏகப்பட்ட ஹீரோக்களோடு ஜோடி போட்டு ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். அழகு மட்டுமின்றி திறமை வாய்ந்த நடிகையும்கூட என்று பெயர் எடுத்தவர் அவர். ஒருகட்டத்தில் சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர் திருமலை படத்தில் கேரக்டர் ரோல் செய்து மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். இந்தச் சூழலில் அவர் குறித்து பலரும் அறியாத தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்டவர் கௌசல்யா. இவரது இயற்பெயர் கவிதா. மாடலிங்கில் அதீத ஆர்வம் கொண்டிருந்த இவர் முதன்முதலாக மலையாளத்தில்தான் ஹீரோயினாக அறிமுகமானார். ஏப்ரல் 19 என்ற படத்தில் நந்தினி என்ற பெயரில் ஹீரோயினாக நடித்தபோது இவருக்கு வயது வெறும் 17 என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு அந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து தமிழில் காலமெல்லாம் காதல் வாழ்க என்ற படத்தில் கௌசல்யா என்கிற பெயரில் முரளிக்கு ஜோடியாக அறிமுகமானார்.

முதல் படமே சூப்பர் ஹிட்: மலையாளம் போலவே தமிழிலும் கௌசல்யா அறிமுகமான முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. படத்தில் இடம்பெற்ற வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா, ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம் போன்ற பாடல்களும் பலரையும் கவர; கௌசல்யா தமிழ்நாடு முழுவதும் அறியப்படும் நடிகையாக மாறிவிட்டார். அதனையடுத்து அவருக்கு வரிசையாக வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன.
தொடர் வாய்ப்புகள்: அதன்படி விஜய்க்கு ஜோடியாக ப்ரியமுடன், நேருக்கு நேர் படங்களில் நடித்தார். இரண்டு படங்களுமே கௌசல்யாவுக்கு மேலும் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தன. அதனையடுத்து சத்யராஜ், அப்பாஸ், முரளி, பிரபுதேவா என பெரிய ரவுண்டு வந்தார். முக்கியமாக பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்த வானத்தைப் போல, மனதை திருடிவிட்டாய் படங்களில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தினார். அதிலும் மனதை திருடிவிட்டாய் சிடு சிடுவென நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
செம நடனம்: பொதுவாக பிரபுதேவாவுடன் நடனம் ஆட வேண்டும் என்றால் யாராக இருந்தாலும் கொஞ்சம் பதறுவார்கள்தான். அந்த பதற்றத்தாலேயே பாடலில் நடனமாடும்போது பெரிதாக மற்றவர்களின் கவனத்தை தங்கள் பக்கம் ஈர்ப்பதற்கு தவறுவார்கள். ஆனால் கௌசல்யாவோ, வானத்தைப் போல படத்தில் இடம்பெற்ற நதியே நைல் நதியே பாடலில் ரொம்பவே அசால்ட்டாக ஆடி அபாரமாக ஸ்கோர் செய்திருப்பார். இப்போது பார்த்தாலும் கௌசல்யா எப்படி அப்படி ஆடினார் என்று பிரமிப்பே தோன்றும்.
விஜயகாந்த் அட்வைஸ், முரளி சப்போர்ட்: தமிழ் சினிமாவில் கௌசல்யா அறிமுகமாகும்போது அவருக்கு தமிழ் மொழியே தெரியாதாம். முரளிதான் தமிழ் வசனங்களை கன்னடத்தில் மொழிபெயர்த்து சொல்லிக்கொடுப்பாராம். அதேபோல் வானத்தைப் போல படப்பிடிப்பில் தனியாகத்தான் அமர்ந்திருப்பாராம் கௌசல்யா. அதனை கவனித்த விஜயகாந்த்தோ இப்படியெல்லாம் தனியாகவே அமர்ந்திருந்தால் நட்பு வட்டம் பெருகாது. சினிமாவில் வளர முடியாது. எல்லோருடனும் பழக வேண்டும் என்று அட்வைஸ் செய்தாராம். இதனை கௌசல்யா நன்றியுடன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
வந்த நோய்: மிகப்பெரிய ரவுண்டு வந்துகொண்டிருந்த கௌசல்யாவுக்கு திடீரென நரம்பியல் தொடர்பான நோய் வந்தது. இதனால் சிகிச்சையும், மருந்துகளும் எடுத்துக்கொண்டார். அதன் விளைவாக உடல் எடை கூடிவிட்டது. எனவே சினிமாவிலிருந்து ஒதுங்கினார். பிறகு உடல் எடையை குறைத்து திருமலை படத்தில் கேரக்டர் ரோல் செய்து ரீ என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து சந்தோஷ் சுப்ரமணியம், பூஜை உள்ளிட்ட படங்களிலும் தனது இரண்டாவது இன்னிங்ஸை சிறப்பாக தொடங்கினார்.
நோ திருமணம்: 46 வயதாகும் கௌசல்யா இன்றுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. அதற்கு காரணம் அவர் சினிமாவில் பீக்கில் இருந்தபோது ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருந்தாராம். அந்த ரிலேஷன்ஷிப் திருமணத்தில் முடியவில்லையாம். இதனால் கொஞ்சம் அப்செட்டான அவர் குடும்பம், குழந்தை என்கிற பெரிய பொறுப்புகளை சுமக்க வேண்டாம் என்று முடிவெடுத்தாராம். அதனால் திருமணமே செய்துகொள்ளவில்லையாம். இதனை அவரே ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.


Click it and Unblock the Notifications











