எம்ஜிஆர் காலத்து ஆளை தேடிப்பிடித்த வெற்றிமாறன்.. யப்பா வடசென்னை படத்துக்கு இவ்வளவு உழைச்சாரா?
சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் அடுத்ததாக சிம்பு நடிக்கவிருக்கும் திரைப்படம், வடசென்னை 2 ஆகிய படங்கள் வரவிருக்கின்றன. சூர்யாவை வைத்து அவர் இயக்குவதாக இருந்த வாடிவாசல் திரைப்படம் கிட்டத்தட்ட ட்ராப்பாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி சிம்புவுடன் இணையும் படத்துக்கும் ஏதோ ஒரு சிக்கல் வந்திருப்பதாகவும் திரைத்துறையில் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன.
தமிழ் சினிமாவிலிருந்து இந்திய அளவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். அவர் இயக்கும் ஒவ்வொரு படமும் இச்சமூகத்தில் ஏதேனும் ஒரு விவாதத்தை தொடங்கி வைக்கும். அசுரன் படம் வந்தபோது பஞ்சமி நிலம் பற்றிய பேச்சுக்களும், விசாரணை படத்தின்போது காவல் துறையின் கோர பக்கங்கள் பற்றிய பேச்சுக்களும் அதிகம் எழுந்தன. இதன் காரணமாகவே அவர் முக்கியமான இயக்குநர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.
அடுத்த படங்கள்: அவர் இப்போது சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். அப்படம்தான் வடசென்னை 2 என்று முதலில் தகவல் வெளியானது. ஆனால் அதனை மறுத்த வெற்றி; இது வடசென்னை உலகத்தில்தான் நடக்கும்; ஆனால் வடசென்னை 2 இல்லை என்று தெளிவுப்படுத்தினார். அதனால் தனுஷின் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியடைந்தார்கள். சிம்புவுடன் இணைந்திருக்கும் படத்தின் ப்ரோமோ ஷூட் ஒன்று சமீபத்தில்தான் எடுக்கப்பட்டது. அதேசமயம் இப்போது இப்படத்துக்கு சிக்கல் எழுந்திருப்பதாகவும் ஒரு பேச்சு ஓடுகிறது.

ட்ராப்பான வாடிவாசல்: அதேபோல் சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்கவிருந்தார் வெற்றிமாறன். தாணு தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகும் என அறிவிக்கப்பட்ட அப்படம்; இப்போது ட்ராப்பாகிவிட்டதாக கூறப்படுகிறது. ஷூட்டிங்கை முடிக்க நாட்கள் ஆகும், இரண்டு பாகங்கள்வரை படத்தை எடுக்க வெற்றிமாறனுக்கு யோசனை வந்தது; எனவேதான் சூர்யா படத்திலிருந்து வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது.
வடசென்னை 2: இதற்கிடையே வடசென்னை 2 ஷூட்டிங்கை எப்போது தொடங்குவார் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. இப்படி ஒரு இயக்குநரின் படங்களுக்கு பெரிய எதிர்பார்ப்பும், பல கேள்விகள் எழுவதும் வெற்றிமாறனுக்குத்தான் கோலிவுட்டில் நடக்கிறது. அந்த அளவுக்கு அவரது படைப்புக்களை ஆவலோடு எதிர்நோக்குகிறார்கள் ரசிகர்கள். இந்நிலையில் வெற்றிமாறன் கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
எம்ஜிஆர் காலத்து ஆள்: தனியார் வானொலி ஒன்றுக்கு சில வருடங்கள் முன்பு அவர் கொடுத்த பேட்டியில், "வடசென்னை படத்தில் எம்ஜிஆர் இறந்ததை ரேடியோவில் சொல்லும் சீன் வரும். அந்தப் படத்தில் அச்செய்தியை வாசித்தார் அல்லவா? அவர்தான் உண்மையிலேயே எம்ஜிஆர் இறப்பை ரேடியோவில் அறிவித்தவர். அவர்தான் வேண்டுமென்று அவரை தேடி கண்டுபிடித்து அழைத்து வந்து அதேபோல் வாசிக்க சொன்னோம்" என்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அடேங்கப்பா சில நொடிகள் வரப்போகும் குரலுக்கு இவ்வளவு உழைத்திருக்கிறாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











