HBD Vairamuthu - முதல் பாடல் எழுதும்போது இத்தனை சோதனைகளா?.. பிறந்தநாள் வாழ்த்துகள் கவிப்பேரரசு வைரமுத்து
சென்னை: Vairamuthu Birthday (வைரமுத்து பிறந்தநாள்) கோலிவுட்டில் தவிர்க்கவே முடியாத பாடலாசிரியர்களில் ஒருவரான வைரமுத்துவின் 70ஆவது பிறந்தநாள் இன்று.
தமிழ் சினிமாவின் பாடலாசிரியர்களில் வைரமுத்து முக்கியமானவர். கண்ணதாசன்,பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், வாலி ஆகியோர் வரிசையில் வைரமுத்துவும் ஒரு மிகப்பெரிய லெஜண்ட். பாரதிராஜா இயக்கிய நிழல்கள் படத்தின் மூலம் அறிமுகமானவர் வைரமுத்து. இளையராஜா இசையில் இது ஒரு பொன்மாலை பொழுது என்ற பாடலை முதல்முதலாக எழுதினார் வைரமுத்து. முதல் பாடலிலேயே வானம் எனக்கொரு போதி மரம் என புதுமையாக எழுதி இளையராஜாவின் மனதிலும், ரசிகர்களின் மனதிலும் தனது தடத்தை பதித்துவிட்டார்.

ராஜா - வைரமுத்து கூட்டணி: அந்தப் பாடலுக்கு பிறகு இளையராஜாவின் ஆஸ்தான பாடலாசிரியராகிவிட்டார் வைரமுத்து. அதிலும் பாரதிராஜா - இளையராஜா - வைரமுத்து கூட்டணி கோலிவுட்டில் மிகப்பெரிய மேஜிக்கை நிகழ்த்தின. அவர்கள் இணைந்த முதல் மரியாதை, மண் வாசனை, கடலோரக் கவிதைகள், அலைகள் ஓய்வதில்லை, சிந்து பைரவி உள்ளிட்ட படங்களின் பாடல்கள் அனைத்துமே க்ளாசிக் ரகத்தை சேர்ந்தவை.
உடைந்த கூட்டணி: ஆனால் இளையராஜா - வைரமுத்து கூட்டணி உடைந்துபோனது. அதற்கான காரணம் தெளிவாக தெரியாவிட்டாலும் இருவரையும் மீண்டும் இணைத்துவிட வேண்டுமென பலர் முயன்றனர். ஆனால் இன்றுவரை இருவரும் இணைந்து பணியாற்றவில்லை. இதுகுறித்து சில வருடங்களுக்கு முன்னர் பேசியிருந்த வைரமுத்து, "நாங்கள் இருவரும் இணைந்து பழையபடி பாடல்களை கொடுத்தால் ரசிகர்களை புதுமையை எதிர்பார்ப்பார்கள்; தற்போதைய வழக்கப்படி பாடல்களை கொடுத்தால் இவர்களுடைய பழைய ஸ்டைல் எங்கே போயிற்று என கேட்பார்கள். எனவே இந்த சிக்கல் வராமல் இருப்பதற்கு நாங்கள் இணைந்து பணியாற்றாமல் விலகி இருப்பதுதான் நல்லது"என கூறியிருந்தார்.
ரசிகர்களின் விருப்பம்: இருப்பினும் இளையராஜாவும் வைரமுத்துவும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதுதான் இசை ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. இந்நிலையில் வைரமுத்து இன்று தனது 70ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
பயன்படுத்திக்கொள்ளுங்கள்: வைரமுத்து திரைப்படங்களில் பாடல்கள் எழுதுவதற்கு முன்பு அரசு பணியில் இருந்தவர். ஒருமுறை தனது கவிதை தொகுப்பை பாரதிராஜாவிடம் கொடுத்து வேண்டுமென்றால் என்னை பயன்படுத்திக்கொள்ளுங்கள் என கூறினார். அதை படித்துப்பார்த்துவிட்டு நிழல்கள் படத்தை தொடங்கும்போது வைரமுத்துவை எழுத வைக்கலாம் என இளையராஜாவிடம் கூறியிருக்கிறார்.
சோதனை: கவிதையை படித்த இளையராஜாவும் வைரமுத்துவையே எழுத வைக்க ஒத்துக்கொண்டிருக்கிறார். இதனையடுத்து வைரமுத்துவுக்கு அழைப்பு செல்ல; அந்த நேரத்தில் அவரது மனைவி பொன்மணிக்கோ பிரசவ வலி வந்திருக்கிறது. ஒரு பக்கம் மனைவியின் பிரசவ வலி மறுபக்கம் தேடி வந்திருக்கும் வாய்ப்பு என நெருக்கடியான சூழலில் இருந்திருக்கிறார் வைரமுத்து. இருப்பினும் எதை பற்றியும் யோசிக்காத அவர் மனைவியை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு அட்லாண்டா ஹோட்டலுக்கு விரைந்தார்.

ஃபோன் நம்பர வாங்கிக்கோ: அங்கு சென்றவருக்கு மெட்டை இளையராஜா வாசித்து காண்பித்தார். உடனே, 'இது ஒரு பொன்மாலை பொழுது' என முதல் வரியை சொல்ல அது இளையராஜாவுக்கும் பிடித்துப்போக அடுத்தடுத்த வரிகளை கொஞ்ச நேரத்திலேயே எழுதி முடித்துவிட்டார். இது இளையராஜாவை கவர்ந்துவிட தன்னுடைய உதவியாளரிடம் இவருடைய நம்பரை வாங்கி வைத்துக்கொள் என சொல்லிவிட்டார்.
வைரமுத்து பாடல் எழுதி மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது அவருக்கு மகன் பிறந்திருந்தான். அந்த மகன் மதன் கார்க்கி. அவரும் இப்போது முன்னணி பாடலாசிரியர்களில் ஒருவர். ஒரேநேரத்தில் முதல் பாடலையும், முதல் குழந்தையையும் பெற்றெடுத்த வைரமுத்து பல சோதனைகளை கடந்து பேரரசாக சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார். அந்த கவிப்பேரரசுக்கு தமிழ் ஃபில்மிபீட் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள்.


Click it and Unblock the Notifications











