டேய் நான் சிவாஜிடா.. எதுக்குடா நடக்க சொல்ற.. பாரதிராஜாவிடம் கடிந்துகொண்ட நடிகர் திலகம்
சென்னை: இந்திய சினிமாவின் நடிப்பு பல்கலைக்கழகம் என போற்றப்படுபவர் சிவாஜி கணேசன். நடிகர் திலகம், செவாலியே என ரசிகர்களால் போற்றப்படுபவர். எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிடும் சிறப்புடையவர் சிவாஜி கணேசன். அப்போதும் சரி இப்போதும் சரி எப்போதும் சரி யார் நடிக்க வந்தாலும் அவர்களின் ஆதர்ச ஹீரோவாக இருப்பவர் சிவாஜி கணேசன் மட்டுமே. இந்த சூழலில் முதல் மரியாதை ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம் குறித்து தெரியவந்திருக்கிறது.
கோலிவுட்டின் முகத்தை மாற்றிய படம் பராசக்தி. கருணாநிதி திரைக்கதை, வசனம் எழுதிய அந்தப் படத்தின் மூலம்தான் சிவாஜி கணேசன் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். அந்தப் படத்தில் சிவாஜியை தவிர வேறு யார் அறிமுகமாகியிருந்தாலும் அதில் உள்ள வெயிட்டேஜை தாங்கியிருப்பார்களா என்பது சந்தேகமே. ஏனெனில் அனல் பறந்த கருணாநிதியின் வசனத்தை அடுத்தக்கட்டத்துக்கு சிவாஜி மட்டுமே எடுத்து சென்றார். முதல் படத்திலேயே அப்படி காட்சிகளும், வசனங்களும் அமைவது வரம். அது சிவாஜிக்கு கைகூடியது.

சிவாஜிதான் அடையாளம்: மன்னர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்பதை தெரிந்துகொள்ள பலருக்கும் ஆர்வம் இருப்பது உண்டு. ஆனால் யாரும் நேரில் பார்த்ததில்லை. சினிமாதான் அவர்களை அடையாளப்படுத்தியிருக்கிறது. அப்படி பலர் மன்னர்களாக நடித்தாலும் சிவாஜிதான் மன்னர்களுக்கு அடையாளமாக இருக்கிறார். வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன் என யாரை நினைத்தாலும் சிவாஜிதான் ரசிகர்கள் கண் முன்பு வந்து செல்வார்கள்.
கட்டுப்படுத்திய மகேந்திரன்: சிவாஜி போல் ஒரு நடிகர் இனி எங்குமே கிடைக்கமாட்டார். அது பெரும்பாலும் அனைவராலும் ஒத்துக்கொள்ளப்பட்டுவிட்டது. ஆனால் சிவாஜி கணேசன் ஓவர் ஆக்டிங் செய்வார் என்ற விமர்சனமும் எழுந்தது உண்டு. அதற்கு இயக்குநர் மகேந்திரன் இப்படி பதில் சொன்னார், ""சிவாஜியை ஓவர் ஆக்டிங் என்று சொல்கிறார்கள். நான் அப்படி சொல்லமாட்டேன் சிவாஜி கணேசனின் நடிப்புக்கு ஏற்ற கதையை இதுவரை யாருமே எழுதியதில்லை.
தங்கப்பதக்கம் படத்தின் கதையும், வசனமும் மகேந்திரனுடையது. அதில் இறந்து கிடக்கும் தனது மனைவியை சிவாஜி கணேசன் பார்க்க செல்லும்போதும், பார்த்த பின்பு பேசும் வசனத்திலும் ஓவர் ஆக்டிங் சிவாஜி தெரியமாட்டார். எதார்த்தமான நடிப்பு கொண்ட சிவாஜியே தெரிவார். ஆக மகேந்திரன் சொன்னதுபோல், சிவாஜி வேண்டுமென்றே ஓவர் ஆக்டிங் செய்யவில்லை. சாதாரண சீனை தனது நடிப்பால் மெருகேற்ற நினைத்து செய்த நடிப்பைத்தான் இங்கு பலர் ஓவர் ஆக்டிங் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்: அதற்கு உதாரணமாக சிவாஜி கணேசன் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக மாறிய பின்பு அவரது நடிப்பை பார்த்தால் புரியும். படையப்பா, தேவர் மகன், ஒன்ஸ்மோர், பூப்பறிக்க வருகிறோம் என அவர் குணச்சித்திர நடிகராக தோன்றிய படங்களில் ஒரு சீனில்கூட மிகை நடிப்பு இருக்காது. அதுதான் ஒரிஜினல் சிவாஜி கணேசன். அவர் விரும்பியதையும் அதைத்தான் என்பதை எளிதாக உணர்ந்துகொள்ளலாம்.
நான் சிவாஜிடா: இந்நிலையில் முதல் பரியாதை படத்தில் நடித்தபோது நடந்த சம்பவம் குறித்து பார்க்கலாம். அதாவது ஒருநாள் சூரியன் அஸ்தமனாகிக்கொண்டிருந்ததை பார்த்த பாரதிராஜா, உடனே சிவாஜியிடம் சென்று,'அண்ணா ம்ம் நடந்து வாங்க.. வந்து அப்படியே இந்த சூரியனை பாருங்க' என்று சொல்லியிருக்கிறார். அதற்கு சிவாஜியோ, டேய் நான் சிவாஜிடா.. நான் எதுக்கு நடந்து வரணும்னு தெரிஞ்சிக்கக்கூடாதா? எதுக்குடா நான் நடக்கணும் என கேட்டிருக்கிறார்.
பாரதிராஜாவோ, அண்ணே நீங்க நடந்து வந்து அந்த சூரியனை பாருங்க போதும் என்று விடாப்பிடியாக நின்றதை அடுத்து சிவாஜியும் நடந்து வந்து சூரியனை பார்த்துவிட்டு சென்றாராம். பிறகு தனது உதவியாளரிடம், டேய் என்னடா இவன் படம் எடுக்குறான். எதுக்குனு காரணம்கூட சொல்லமாட்றானே என்று கூறினாராம். இதனை பாக்யராஜ் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











