Dhanush - படத்துக்காக 15 பச்சை மிளகாய்களை சாப்பிட்ட தனுஷ்.. எப்படியெல்லாம் உழைச்சிருக்காரு.. அதான் செம ஹீரோ
சென்னை: துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தனுஷ். அவர் அறிமுகமாகும்போது பலரும் உருவ கேலி செய்தார்கள். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தனது திறமையை வளர்த்த அவர் இப்போது மிகச்சிறந்த நடிகர் என்ற பெயரை பெற்றிருக்கிறார். அவரிடம் ஒரு கதாபாத்திரத்தை கொடுத்தால் அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிடும் தன்மையில் இருக்கிறார் அவர்.
கஸ்தூரி ராஜாவின் மகனான தனுஷ் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அந்தப் படம் தோல்வியை சந்தித்தது. அதிலும் தனுஷின் உருவம் ரொம்பவே கிண்டல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து காதல் கொண்டேன் படத்தில் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தியதன் காரணமாக நல்ல நடிகர் என்ற பெயரை பெற்றார். காதல் கொண்டேன் படத்தைத் தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் இதுவரை 49 படங்களில் நடித்திருக்கிறார். பெரும்பாலான படங்கள் ஹிட் படங்களாகவும், தனுஷுக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்த படங்களாகவும் அமைந்தன.

கேப்டன் மில்லர்: அவர் இப்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருடன் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. கண்டிப்பாக இந்தப் படம் மெகா ஹிட்டாகும் என்று ட்ரெய்லரை பார்த்த தனுஷின் ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். மேலும் அருண் மாதேஸ்வரனும் நல்ல இயக்குநர் என்பதால் அந்த நம்பிக்கை ரசிகர்களிடையே அதிகரித்திருக்கிறது.
தனுஷ் 50: நடிகராக மட்டுமின்றி பாடலாசிரியர், பாடகர், இயக்குநர் என்ற பன்முகத்தன்மையை கொண்ட தனுஷ் பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் நல்ல வரவேற்பையே பெற்றது. தற்போது அவர் தனது 50ஆவது படத்தை தானே இயக்கிவருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தின் ஷூட்டிங் முடியும் தருவாயில் இருக்கிறது. படமானது வடசென்னையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
அடுத்தடுத்த படங்கள்: தனுஷ் அடுத்ததாக மாரி செல்வராஜுடன் ஒரு படம், சேகர் கம்முல்லாவுடன் ஒரு படம், வடசென்னை 2 உள்ளிட்ட படங்களில் நடிக்கவிருக்கிறார். இதனால் அவர் படு பிஸியாக இருக்கிறார். முக்கியமாக முதல் படத்தில் பல கிண்டலுக்கு ஆளான தனுஷ்; தன்னை கிண்டல் செய்தவர்களையே பாராட்ட வைத்ததன் மூலம் உண்மையான வெற்றி என்றால் என்னவென்று நிரூபித்திருக்கிறார்.
பச்சை மிளகாய் சாப்பிட்ட தனுஷ்: அவரது இந்த வெற்றிக்கு காரணம் அவருடைய அர்ப்பணிப்பும், உழைப்பும்தான். இந்த சூழலில் ஒரு படத்துக்காக 15 பச்சை மிளகாய்களை தனுஷ் சாப்பிட்ட விஷயம் தெரியவந்திருக்கிறது. அதாவது கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான படம் தேவதையை கண்டேன். பூபதி பாண்டியன் இயக்கியிருந்த அந்தப் படம் தனுஷின் கரியரில் வெற்றி படமாகவே அமைந்திருந்தது. காதலர் கோர்ட்டில் கேஸ் போடுவது போன்று திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும்.
நடிகர் விஜயகுமாரின் மகள் ஸ்ரீதேவி ஹீரோயினாக நடித்திருப்பார். அந்தப் படத்தின் ஒரு காட்சியில் ஸ்ரீதேவிக்காக பச்சை மிளகாய் சாப்பிடும்படியாக காட்சி இடம்பெற்றிருக்கும். அந்தக் காட்சி ஒரிஜினலாக வரவேண்டும் என்பதற்காக தனுஷ் உண்மையிலேயே 15 பச்சை மிளகாய்களை சாப்பிட்டாராம். அதை பார்த்த ஒட்டுமொத்த படக்குழுவும் அசந்துவிட்டதாம். இதனை அப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார். இதனை பார்த்த தனுஷ் ரசிகர்கள் எவ்வளவு அர்ப்பணிப்பு இருந்தால் இப்படி செய்திருக்க முடியும் என சிலாகித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











