Vijayakanth - நடுராத்திரியில் தவித்த நடிகர்கள் நடிகைகள்.. ரயிலை நிறுத்தி விஜயகாந்த் செய்த மாஸ் சம்பவம்
சென்னை: விஜயகாந்த் உடல்நலக்குறைவால் நேற்று முன் தினம் உயிரிழந்தார். அவருக்கு மக்கள் தங்களது பிரியா விடையை கண்ணீருடன் கொடுத்தனர். இந்த சூழலில் அவர் உயிரிழந்ததை அடுத்து அவர் செய்த நல்ல விஷயங்கள் குறித்த தகவல் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டுவருகின்றன. அப்படி ஒரு விஷயத்தை இதில் பார்க்கலாம்.
விஜயகாந்த் தமிழ்நாட்டில் தவிர்க்கவோ, மறக்கவோ முடியாத ஒருவர். டாப் ஹீரோவாக வலம் வந்தாலும் அவர் எளிமையாக இருந்தார். மக்களிடம் எளிமையாக பழகினார். இதன் காரணமாகவே அவரை தமிழக மக்கள் தங்களில் ஒருவராக பார்த்தார்கள். இதன் காரணமாகத்தான் அவர் கிராமத்து பக்கம் அசைக்க முடியாத சக்தியாக பல வருடங்கள் திகழ்ந்தார். அரசியலிலும் தைரியமாக களமிறங்கி ஒரு கை பார்த்தார்.

யாருக்கும் கிடைக்காத பெருமை: விஜயகாந்த்துக்கு முதல் படம் வேண்டுமானால் சரியாக போகாமல் இருந்திருக்கலாம். ஆனால் அடுத்தடுத்த படங்களில் தனது திறமையை காண்பித்து ரஜினி, கமல் ஹாசனுக்கு டஃப் கொடுத்தார். முக்கியமாக ரஜினிகாந்த், கமல் ஹாசன், பிரபு உள்ளிட்ட ஹீரோக்களுக்கு எல்லாம் கிடைக்காத பெருமை விஜயகாந்த்துக்கு கிடைத்ததை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.
என்ன பெருமை?: அதாவது ரஜினிகாந்த்துக்கு 100ஆவது படம் ராகவேந்திரா, கமல் ஹாசனுக்கு 100ஆவது படம் ராஜபார்வை, பிரபுவுக்கு 100ஆவது படம் ராஜகுமாரன். இவர்களுக்கு எல்லாம் அந்த படங்கள் அட்டர் ஃப்ளாப் ஆகின. ஆனால் விஜயகாந்த்தின் 100ஆவது படமான கேப்டன் பிரபாகரன் படம் பட்டித்தொட்டியெங்கும் கலக்கியது. அந்தப் படத்தை ஆர்.கே.செல்வமணி இயக்க ராவுத்தர் தயாரித்திருந்தார்.
அதுமட்டுமில்லை: 100ஆவது படம் வெற்றி என்ற பெருமை மட்டும் அவருக்கு சொந்தமில்லை. நடிகர் சங்க தலைவராக இருந்து ஏகப்பட்ட விஷயங்களை சங்கத்துக்காக செய்தவர் விஜயகாந்த். முக்கியமாக வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சி நடத்தி சூப்பர் ஸ்டார் முதல் வளர்ந்து வரும் நடிகர் வரை அனைவரையும் அழைத்து சென்றார். அதனால் வந்த வருமானத்தின் மூலம்தான் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கடன் அடைக்கப்பட்டது. மேலும் கூடுதல் ரூபாயை இருப்பு வைத்துவிட்டுத்தான் சென்றார்.
போராட்டம்: ஒரு விஷயம் என்றால் துணிந்து இறங்கக்கூடிய பழக்கம் உடையவர் விஜயகாந்த். நடிகர் சங்க தலைவராக இருந்தபோது விஜயகாந்த் செய்திருக்கும் ஏகப்பட்ட விஷயங்களில் ஒன்று நடிகர், நடிகைகளை திரட்டி கார்கில் போருக்காக நிதி திரட்டியது. அப்போது ஒட்டுமொத்த இந்திய திரையுலகும் தமிழ் திரையுலகின் ஒற்றுமையை பார்த்து வியந்தது. அதற்கு அச்சாரம் போட்டது விஜயகாந்த்தான். தற்போது அதுகுறித்து ஒரு விஷயத்தை பார்க்கலாம்.
என்ன நடந்தது?: அதாவது மதுரையில் ஒரு நிகழ்ச்சியை முடித்துவிட்டு அத்தனை நடிகர், நடிகைகளும் ரயிலில் சென்றிருக்கிறார்கள். இரவு 11.30 மணிக்கு ஏறிய பிறகுதான் விஜயகாந்த்துக்கு தெரியவந்திருக்கிறது யாருமே சாப்பிடவில்லை என்று. இதனை அறிந்து துடித்துபோன விஜயகாந்த் என்ன செய்வதென்று யோசித்திருக்கிறார். ஏனெனில் அடுத்ததாக கொடை ரோடு என்ற பகுதியில் மட்டும்தான் ரயில் நிற்கும் என்பது தெரியவந்திருக்கிறது.
செம மாஸ்:அதனையடுத்து நெப்போலியனை அழைத்த விஜயகாந்த் கொடை ரோட்டில் நிற்கும்போது எப்படியாவது நீங்கள் ரயில் என்ஜினுக்கு சென்று ரயிலை நிறுத்திவிடுங்கள் நான் சாப்பாட்டை ரெடி பண்ணிடுறேன் என சொல்லியிருக்கிறார். ஆனால் ரயில் அங்கு ஒரு நிமிடம்தான் நிற்குமாம். அப்படி ரயில் நின்றதும் நெப்போலியன் படு வேகமாக என்ஜினுக்கு ஓடி யாரும் சாப்பிடவில்லை 10 நிமிடங்கள் ட்ரெய்னை இங்கு நிறுத்துங்கள் என ரயில் ஓட்டுநரிடம் சொல்லி எப்படியோ சம்மதிக்க வைத்துவிட்டாராம்.
விஜயகாந்த்தோ ரயில் நின்றவுடன் ஸ்டேஷனுக்கு வெளியே ஓடி புரோட்டா, இட்லி, தோசை என அத்தனை வகை சாப்பாடுகளையும் வாங்கி வந்து பசியோடு இருந்த நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் பசியை ஆற்றினாராம். அந்த அளவுக்கு அவர் தன்னுடன் பயணப்படுபவர்களுக்காக ஓடி ஓடி உழைத்திருக்கிறார். மிஸ் யூ விஜயகாந்த்..


Click it and Unblock the Notifications











