Seenu Ramasamy - 300 ரூபாய் இல்லை.. நடுரோட்டில் நின்றேன்.. சீனு ராமசாமியின் எமோஷனல் ப்ளாஷ்பேக்
சென்னை: இயக்குநர் சீனு ராமசாமி தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர். மனிதர்களுக்கிடையேயான உறவுகளை மையமாக வைத்தும்; மனிதத்தை மையமாக வைத்தும்தான் இவரது படங்கள் வெளியாகும். தற்போது அவரது இயக்கத்தில் இடி முழக்கம் படம் உருவாகியிருக்கிறது. மேலும் கோழிப்பண்ணை செல்லத்துரை படத்தையும் அவர் இயக்கிவருகிறார். இரண்டு படங்கள் மீதும் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது.
பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து கூடல்நகர் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சீனுராமசாமி. முதல் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த சீனுராமசாமி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இயக்குநராக வருவார் என கணிக்கப்பட்டார். இந்தப் படத்துக்கு பிறகு தென்மேற்கு பருவக்காற்று படத்தை இயக்கினார் சீனுராமசாமி. இந்தப் படம்தான் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஹீரோவாக முதல் படம் ஆகும். படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், இந்தப் படத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது. இதனால் மேலும் கவனிக்கப்படும் இயக்குநர் ஆனார் சீனு ராமசாமி.

கவனம் ஈர்த்த சீனு: தென்மேற்கு பருவக்காற்று படத்துக்கு பிறகு சீனுராமசாமி நீர்ப்பறவை படத்தை இயக்கினார். படத்தின் காட்சிகளும், வசனங்களும் பெரிதும் ரசிகர்களை ஈர்த்தன. ஆனால் வசூல் ரீதியாக படம் சரியாக போகவில்லை. இருப்பினும் நீர்ப்பறவைக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கவே செய்கின்றனர். சீனு ராமசாமியின் கேரியரில் மிக முக்கியமான படமாக கருதப்படுவது தர்மதுரை.
தர்மதுரை: தர்மதுரை படத்தில் விஜய் சேதுபதி, ராதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், தமன்னா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதற்கு முன்னதாக சீனுராமசாமி இயக்கிய படங்கள் கொண்டாடப்படாலும் தர்மதுரை படத்தை அனைவரும் கொண்டாடினார்கள். வீட்டில் இருக்கும் அனைவரும் ஒதுக்கும் மகன் மீது தாய் வைத்திருக்கும் பாசம், காதலியை இழந்த பிறகு ஒருவன் தத்தளிப்பது என சீனுராமசாமி இயக்கத்தில் பின்னியிருப்பார். இந்தப் படத்தில் பாடல் எழுதியதற்காக வைரமுத்துவுக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே அவர் இயக்கிய இடம் பொருள் ஏவல் படம் இன்றுவரை ரிலீஸாகாமல் இருக்கிறது.
மாமனிதன்: சீனு ராமசாமி இயக்கத்தில் கடைசியாக மாமனிதன் திரைப்படம் வெளியானது. அந்தப் படம் வணிக ரீதியாக சரியாக போகாவிட்டாலும் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. பல்வேறு திரைப்பட விழாக்களில் போட்டியிட்டு பரிசையும் பெற்றது. தற்போது அவர் ஜிவி பிரகாஷை வைத்து இடிமுழக்கம் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். மேலும் புதுமுகங்களை வைத்து கோழிப்பண்ணை செல்லத்துரை என்ற படத்தையும் அவர் இயக்கிவருகிறார்.
ரோட்டில் நின்ற சீனு: இந்த சூழலில் சீனு ராமசாமி பற்றி ஒரு விஷயத்தை பார்க்கலாம். அதாவது சீனு ராமசாமி சினிமாவில் உதவி இயக்குநராக இருந்த சமயம் அது. அப்போது அவரது அறை வாடகை 300 ரூபாயாம். ஒருமுறை அவரது பிறந்தநாள் வந்திருக்கிறது. அப்போது வாடகை கொடுக்கவில்லை என்றால் ரூமை காலி செய்ய சொல்லிவிட்டாராம் அறை ஓனர்.
அந்தச் சமயம் பார்த்து அவரது நண்பர்கள் கேக் வெட்ட வேண்டும் என்று தொலைபேசியில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இவருக்கோ வாடகை கொடுக்க வேண்டிய நெருக்கடி; கையில் ஒரு ரூபாய்கூட இல்லையாம். உடனடியாக பாலுமகேந்திராவிடம் சென்று தனக்கு பிறந்தநாள் என்று சொல்லியிருக்கிறார். அவரும் தனது சிஷ்யனை வாழ்த்திவிட்டு 500 ரூபாய் பணம் கொடுத்தாராம்.
இதை பார்த்து மகிழ்ச்சியடைந்த சீனு ராமசாமி முதலில் அதை வைத்து வாடகை கொடுத்துவிடலாம் என்று நினைத்தாராம். ஆனால் நண்பர்கள் வேறு கேக் வெட்ட வேண்டும் என்று சொன்னார்களே என உள்ளுக்குள் நினைத்துக்கொண்டு அவர்களை அழைத்து 500 ரூபாயையும் அவர்களுக்கே செலவு செய்துவிட்டாராம். நடு ரோட்டில் இருந்தவாறு கேக்கும் வெட்டியிருக்கிறார்கள்.
பிறந்தநாள் கொண்டாட்டம் முடிய இரவு ஆகிவிட்டதாம். நள்ளிரவு போல அறைக்கு சென்று பார்த்தால் அவரது பொட்டி படுக்கைகளை எல்லாம் வீதியில் வைத்துவிட்டு அறையை பூட்டிவிட்டாராம் ஓனர். அதன் பிறகு அவைகளை எடுத்துக்கொண்டு அன்றைய இரவு பிளாட்பாரத்தில் படுத்து தூங்கினாராம். பிறகு எப்படியோ வேறு அறையை பார்த்து அங்கு குடியேறிவிட்டாராம். இதனை அவரே ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











