Kamal Haasan - பாலிவுட் நடிகரிடம் கையை பிடித்து கெஞ்சிய கமல் ஹாசன்?.. என்ன நடந்தது தெரியுமா?
சென்னை: Kamal Haasan (கமல் ஹாசன்) பாலிவுட் நடிகர் திலீப்குமாரின் கையை பிடித்து கமல் ஹாசன் கெஞ்சிய சம்பவம் தெரியவந்திருக்கிறது.
விக்ரம் படத்தின் மூலம் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார் கமல் ஹாசன். இரண்டாவது இன்னிங்ஸின் முதல் படமே பெரும் வெற்றி பெற்று 500 கோடி ரூபாயை வசூலித்தது. படத்தை பார்த்த அனைவருமே ஆண்டவரின் நடிப்பு இன்னமும் அப்படியேத்தான் இருக்கிறது. அவர் சினிமாவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதுமட்டுமின்றி விக்ரம் ரிலீஸுக்கு முன்னதாக ரிலீஸான பல தமிழ் படங்கள் தோல்வியடைந்திருந்தன. விக்ரம் வந்த பிறகுதான் அந்த நிலைமை மாறியது குறிப்பிடத்தக்கது.

பெரும் உற்சாகம்: விக்ரம் கொடுத்த வெற்றியால் பெரும் உற்சாகம் கமலுக்கு தொற்றிக்கொண்டது. இதன் காரணமாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்தியன் 2 மீண்டும் தூசு தட்டப்பட்டது. அதேபோல் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப், ஹெச்.வினொத் இயக்கத்தில் ஒரு படம் என வரிசையாக நடிப்பதற்கு கமிட்டும் ஆகியுள்ளார். இதில் தக் லைஃப் படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் கமல் ஹாசனின் ரசிகர்கள் ரொம்பவே மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
தயாரிப்பிலும் பிஸி: அதேபோல் நடிப்பு மட்டுமின்றி பட தயாரிப்பிலும் கமல் ஹாசன் பிஸி. அதன்படி சிம்பு நடிப்பில் ஒரு படம், சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு படம் தயாரிப்பில் இருக்கிறது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்கவும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் பிரபாஸ் நடிக்கும் கல்கி 2898 ஏடி படத்தில் வில்லனாக நடிக்கவும் கமிட்டாகியிருக்கிறார்.
தேவர் மகன்: கமல் ஹாசனின் கரியரில் தேவர் மகன் படம் முக்கியமானது. இன்றுவரை அந்தப் படம் பாராட்டையும், விமர்சனத்தையும் ஒருசேர பெற்றிருக்கிறது. அண்மையில் வெளியான மாமன்னன் படத்தின்போதுகூட மாரி செல்வராஜ் அந்தப் படம் பற்றி பேசியது விவாதப்பொருளானது நினைவுகூரத்தக்கது. இந்த சூழலில் அந்தப் படத்துக்காக பாலிவுட் நடிகரிடம் கமல் ஹாசன் கெஞ்சினாராம்.
என்ன நடந்தது?: அதாவது தேவர் மகன் தமிழில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்தது. அதனையடுத்து அந்தப் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யும் வேலைகள் தொடங்கின. ஆனால் கமலுக்கு அப்போது ஒரு ஆசையாம். அந்தப் படத்தில் சிவாஜி கேரக்டரில் திலீப் குமாரை நடிக்க வேண்டும் என்பதுதான் அது. ஆனால் திலீப்குமாரோ ஒத்துக்கொள்ளவில்லையாம். ஒருகட்டத்தில் திலீப்குமாரை நேரில் சந்தித்து கையை பிடித்தெல்லாம் கெஞ்சியிருக்கிறார் கமல்.
இருந்தாலும் தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்த திலீப்குமார் கடைசி வரை நடிக்கவில்லை. அதன் பிறகு விராசட் என்ற பெயரில் உருவான அந்தப் படத்தில் அனில் கபூர், அம்ரீஷ், தபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அந்தப் படம் ஹிந்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.


Click it and Unblock the Notifications











