Nambiyar - ரசிகரிடம் மறைமுகமாக மன்னிப்பு கேட்ட நம்பியார்.. திரையில்தான் வில்லன்.. நிஜத்தில் தங்கம்
சென்னை: நடிகர் எம்.என்.நம்பியார் தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாத வில்லன்களில் ஒருவர். எம்ஜிஆருக்கு எதிராக அவர் போடும் சண்டை காட்சிகளும், கொடுக்கும் எக்ஸ்பிரஷென்களும் இன்றுவரை பலரது ஃபேவரைட். கறுப்பு வெள்ளை சினிமா காலத்தில் வில்லனாக கோலோச்சிய அவர் கலர் திரை காலத்தில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து கலக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா எத்தனையோ வில்லன்களை கண்டிருக்கிறது. ஆனால் எம்.என்.நம்பியார் வில்லன்களில் தனித்துவமானவர். சாந்தமான முகத்தை வைத்துக்கொண்டு தனது முகபாவனைகளாலும், உடல் மொழியாலும் பார்ப்பவர்களை பதைபதைக்க வைப்பவர் அவர். எம்ஜிஆருக்கு நிரந்தர வில்லன் என்று பெயர் எடுத்த நம்பியாரை ரசிகர்கள் தங்களது தனிப்பட்ட வில்லனாகவே பார்த்தனர். அந்த அளவுக்கு திரையில் ஆளுமை செலுத்தியவர் நம்பியார்.

எம்.என்.நம்பியார்: மாஞ்சேரி நாராயண நம்பியார் கேரள மாநிலத்தில் கண்ணூர் மாவட்டத்தில் 1919ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி பிறந்தார். தனது எட்டாவது வயதில் தந்தையை இழந்த நம்பியார் ஊட்டியில் குடியேறினார். நம்பியாருடன் பிறந்தவர்கள் இரண்டு பேர். அவர்களில் அண்ணனும் உயிரிழந்துவிட்டார். ஊட்டியில் படிக்கும்போது நடிப்பு மீது ஆர்வம் ஏற்பட நாடக குழுவில் இணைந்தார் நம்பியார்.
சமையல் உதவியாளர்: நாடக குழுவில் இணைந்தாலும் எடுத்ததும் அவருக்கு நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனையடுத்து அதே குழுவில் சமையல் உதவியாளராக இருந்தார். பின்னர் நாடகக் கலையை கற்றுக்கொண்டு மூன்று ரூபாய் சம்பளத்துக்கு நடிக்க ஆரம்பித்தார். முதல் நாடக அரங்கேற்றத்திலேயே தனது நடிப்பு திறமையை காண்பித்த நம்பியாருக்கு பலரும் ரசிகர்களாகினர்.
சினிமாவில் நம்பியார்: வித்யாபதி படத்தின் மூலம் திரைத்துறைக்குள் நுழைந்த நம்பியாருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. குறிப்பாக ராஜகுமாரி படத்தில் எம்ஜிஆருடன் நடித்தபோது அவருக்கு ஈடு கொடுத்து நடித்து அசத்தினார் நம்பியார். இதனால் தொடர்ந்து எம்ஜிஆருடன் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. அதேபோல சிவாஜி கணேசனுக்கும் வில்லனாக நடிக்க ஆரம்பித்தார். இருந்தாலும் எம்ஜிஆருக்கு அவர் வில்லனாக நடித்த படங்கள் அனைத்தும் ஹிட்டாக எம்ஜிஆர் Vs நம்பியார் என்ற நிலை உருவானது.
குணச்சித்திர வேடம்: காலப்போக்கில் வில்லன் வாய்ப்புகள் குறைய உடனடியாக தனது ரூட்டை மாற்றிய நம்பியார் குணச்சித்திர வேடங்கள் ஏற்க ஆரம்பித்தார். வில்லன் கதாபாத்திரத்தில் எப்படி தனது முத்திரையை பதித்தாரோ குணச்சித்திர வேடங்களிலும் தனது முத்திரையை பதித்தார். அப்படி அவர் நடித்த எஜமான், தூறல் நின்னு போச்சு, சேதுபதி ஐபிஎஸ் போன்ற படங்களில் அவரது குறும்புத்தனமான நடிப்பு வெகுவாகவே ரசிக்கப்பட்டது. நம்பியார் குணச்சித்திர வேடம் ஏற்ற படங்களில் முக்கியமான படம் விஜய் நடித்த பூவே உனக்காக திரைப்படம். அதில் நாகேஷுடனான உரசலையும், பழைய நட்பின் பாசத்தையும் வெகு இயல்பாக தனது நடிப்பில் வெளிக்கொண்டு வந்தார்.
ரசிகருக்கு எழுதிய கடிதம்: இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் சித்ரா லட்சுமணன் நம்பியார் குறித்து ஒரு விஷயத்தை பகிர்ந்திருக்கிறார். அதாவது நம்பியாரின் நடிப்பையும், குணத்தையும் பார்த்த மூத்த பத்திரிகையாளர் மேஜர் தாசன் என்பவர் ஏராளமான கடிதங்களை எழுதிக்கொண்டே இருந்தாராம். அதற்கு நம்பியார் பதிலளிக்காமல் இருந்திருக்கிறார். ஒருகட்டத்தில் நம்பியாரும் பதில் எழுதியிருக்கிறார்.
தாமதம்: அந்த பதில் கடிதத்தில், 'தாமதமாக பதில் கடிதம் எழுதுகிறேன்.எனது படங்களை எவ்வளவு விருப்பமாக பார்த்திருக்கிறீர்கள் என்பது நீங்கள் எழுதிய கடிதத்தின் மூலம் தெரிகிறது. உங்களை போன்ற ரசிகர்களால்தான் சினிமா சீரும் சிறப்புமாக இருக்கிறது. ஆனால் ஒன்று எனக்கு தெரிந்தவரைக்கும் நான் சுமாரான நடிகர்தான். சிவாஜி போன்றவர்கள் இருக்கும்போது அவர்களை மீறி என்னால் எப்படி நடிக்க முடியும்’ என கூறியிருந்தாராம். இந்தச் சம்பவத்தை பகிர்ந்த சித்ரா லட்சுமணன், தாமதமாக பதில் அளித்ததற்கு இந்தக் கடிதத்தில் நம்பியார் மறைமுகமாக மன்னிப்பும் கேட்டுவிட்டார்; சிவாஜி கணேசனையும் பெருமைப்படுத்திவிட்டார் என்றார்.


Click it and Unblock the Notifications