சொந்த வீடு கூட இல்லாமல் தவித்த பிரபல இயக்குநர்.. ஏவிஎம் கூட கை விரித்த கதை தெரியுமா?
சென்னை: 80களில் பிரபலமான இயக்குநராக இருந்தவர் ஆர்.சுந்தரராஜன். பல படங்களை வெற்றி படங்களாக கொடுத்திருக்கிறார் அவர். நக்கலும், நையாண்டியும் அவரது பேச்சிலும், நடிப்பிலும் அவ்வளவு இருக்கும். அப்படிப்பட்ட சுந்தரராஜன் சொந்த வீடு இல்லாமல் தவித்த கதை குறித்து இதில் பார்க்கலாம்.
பயணங்கள் முடிவதில்லை என்ற படத்தின் மூலம் 1982ஆம் ஆண்டு இயக்குநராக அறிமுகமானார் ஆர்.சுந்தர்ராஜன். அந்தப் படம் மெகா ஹிட்டடித்தது. குறிப்பாக இளையராஜாவின் பாடல்களும்; சுந்தர்ராஜனின் மேக்கிங்கும் அவ்வளவு அட்டகாசமாக அமைந்திருந்தன.முதல் படமே மெகா ஹிட் என்பதால் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன.

தொடர் ஹிட்டுகள்: அந்தவகையில் அவர் இயக்கிய அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை, சரணாலயம், தூங்காத கண்ணின்று ஒன்று, நான் பாடும் பாடல், வைதேகி காத்திருந்தாள், சுகமான ராகங்கள், குங்கும சிமிழ், அம்மன் கோயில் கிழக்காலே, மெல்ல திறந்தது கதவு, என் ஜீவன் பாடுது, ராஜாதிராஜா என பல படங்களை இயக்கினார். அந்தப் படங்களில் பெரும்பாலானவை ஹிட்டடித்தன என்பது குறிப்பிடத்தக்கது
செம இயக்கம்: சுந்தர்ராஜனின் படங்களில் எப்போதுமே ஒரு மெல்லிய தூறல் போன்ற ரம்யம் இருந்துகொண்டே இருக்கும் என்பதுதான் அப்போதைய ரசிகர்களின் பலமான கருத்து. இசையில் உச்சத்தில் இளையராஜாவையும், எம்.எஸ்.விஸ்வநாதனையும் தன்னுடைய மெல்ல திறந்தது கதவு படத்துக்கு சேர்த்து இசையமைக்க வைத்தார். அது அப்போது அவ்வளவு பெரிய ஆச்சரியமாக பார்க்கப்பட்டது. அதேபோல் இளையராஜாவின் இசைக்கு சரியான மேக்கிங் கொடுக்கும் சில இயக்குநர்களில் சுந்தர்ராஜனும் ஒருவர்.
வைதேகி காத்திருந்தாள்: சுந்தர்ராஜனின் வாழ்க்கையில் வைதேகி காத்திருந்தாள் திரைப்படம் முக்கியமான படம். அவருக்கு மட்டுமின்றி விஜயகாந்த்தின் திரை வாழ்க்கையிலும் அந்தப் படம் ஒரு மைல் கல்தான். காதல் தோல்வி, திருமண தோல்வி என்ற இரண்டு லைன்களை ஒரே புள்ளியில் இணைத்து அவர் அமைத்திருந்த திரைக்கதை அவ்வளவு அட்டகாசமாக இருக்கும்.
செம பாடல்கள்: அதேபோல் இளையராஜாவின் பாடல்கள் அனைத்துமே க்ளாசிக் ரகம். காக்கி சட்டை படத்தின் ரெக்கார்டிங்குக்காக கொடைக்கானல் சென்றபோது அங்கு வைத்து எதார்த்தமாக போட்ட ட்யூன்கள்தான் இப்போது வைதேகி காத்திருந்தாள் படத்தில் நாம் கேட்டுக்கொண்டிருக்கும் பாடல்கள் என்பது ஆச்சரியப்பட வைக்கும் தகவல். இதனை இளையராஜாவே ஒரு நிகழ்ச்சியில் சொல்லியிருந்தார்.
சொந்த வீடு: இந்த சூழலில் அந்தப் படம் குறித்து புதிய விஷயத்தை பார்க்கலாம். அதாவது சுந்தர்ராஜன் இயக்கிய நான் பாடும் பாடல் படம் மெகா ஹிட்டாகிவிட்டது. அதனையடுத்து அவரை தேடி தயாரிப்பாளர்களும் வர தொடங்கிவிட்டனர். அந்த சமயத்தில் சுந்தர்ராஜனுக்கு சொந்த வீடு இல்லை. எனவே வரும் தயாரிப்பாளர்களிடம், எனக்கு யார் சொந்த வீடு வாங்கி தருகிறீர்களோ அவர்களுக்கு அடுத்த படம் செய்கிறேன் என்று சொல்லியிருக்கிறார் சுந்தர்ராஜன்.
ஏவிஎம் என்ட்ரி: இதனை கேள்விப்பட்ட ஏவி எம் நிறுவனம் சுந்தர்ராஜனை அழைத்து இரண்டு லட்சம் ரூபாய் அட்வான்ஸை கொடுத்துவிட்டது. அவரும் அந்த அட்வான்ஸை சொந்த வீடு வாங்குவதற்கான முன் பணமாக கொடுத்துவிட்டார். பிறகு வைதேகி காத்திருந்தாள் படத்தின் கதையை எழுதி ஏவிஎம் நிறுவனத்திடம் சொல்லிவிட்டு விஜயகாந்த்தை ஹீரோவாக போடலாம் என சொல்லியிருக்கிறார்.
விஜயகாந்த்துக்கு நோ: ஆனால் அந்த நிறுவனமோ விஜயகாந்த் எல்லாம் வேண்டாம் நான் பாடும் பாடல் ஹீரோ சிவகுமாரையே போடுங்கள் என சொல்லியிருக்கிறது. சுந்தர்ராஜனோ அதை ஏற்க மறுத்துவிட்டார். இதனால் அப்செட்டான அந்த நிறுவனம் சரி நீங்கள் எங்களுக்கு படம் செய்ய வேண்டாம் வாங்கிய அட்வான்ஸை திருப்பி கொடுத்துவிடுங்கள் என சொல்லிவிட்டது.
ஷாக்: ஆனால் அந்தப் பணத்தைத்தான் வீடு வாங்க கொடுத்துவிட்டதால் என்ன செய்வதென்று தெரியாமல் அதிர்ச்சியில் இருந்திருக்கிறார். அப்போது கதையாசிரியர் தூயவன் என்பவர் சுந்தர்ராஜனின் முகம் சரியில்லாததை பார்த்து; என்ன ஆனது என கேட்க; நடந்த விஷயங்களை சொல்லியிருக்கிறார் சுந்தர்ராஜன்.
அதற்கு தூயவனோ ம்ம் இவ்வளவுதானே விஷயம் என்று சொல்லி பஞ்சு அருணாச்சலத்திடம் சென்று கதையை சொல்ல வைக்க கதை அவருக்கு ரொம்பவே பிடித்துவிட்டது. அதற்கு பிறகு அவரிடமிருந்து 2 லட்சம் ரூபாயை வாங்கி சுந்தர்ராஜனிடம் கொடுத்து பின்னர் வைதேகி காத்திருந்தாள் படத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். இதன் மூலம் சுந்தர்ராஜனுக்கும் சொந்த வீடு கிடைத்துவிட்டது; தூயவனும் தயாரிப்பாளர் ஆகிவிட்டார்.


Click it and Unblock the Notifications











