Rajini - நீச்சலும் தெரியாது.. ஒரு மணி நேரத்தில் கற்றுக்கொண்டு அதிவேகத்தில் படகு ஓட்டிய ரஜினி
சென்னை: ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். அதனை ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கிவருகிறார். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினிகாந்த். 70 வயதை தாண்டியும் ரஜினிகாந்த் பிஸியாகவும், சுறுசுறுப்பாகவும் இருந்துவருவதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமடைந்திருக்கின்றனர். இந்தச் சூழலில் தன்னுடைய இளம் வயதில் ரஜினிகாந்த் செய்த ஒரு சம்பவம் குறித்து தெரிய வந்திருக்கிறது. அதனை கேள்விப்பட்டு ரசிகர்களோ, தலைவர் அப்போ எப்படி இருந்திருக்கார் என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.
இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவரான ரஜினிகாந்த் கடைசியாக ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. கடந்த சில வருடங்களாகவே ஹிட்டுக்கு ஏங்கிக்கொண்டிருந்த ரஜினிக்கு ஜெயிலர் நிவாரண மருந்தாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 700 கோடி ரூபாய்வரை படம் உலகம் முழுவதும் வசூலித்தது.

வேட்டையன்: ஜெயிலர் படத்துக்கு பிறகு அவர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். ஜெய்பீம் படத்தை இயக்கிய இயக்குநர் என்பதால் ஞானவேல் இந்தப் படத்தில் ரஜினியை வைத்து எந்த மாதிரியான விஷயத்தை பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதேசமயம் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான டைட்டில் டீசரை பார்க்கையில் ஒருவேளை படம் கமர்ஷியல் பாதையில் பயணிக்குமோ என்ற சந்தேகத்தை ரசிகர்கள் எழுப்பிவருகின்றனர்.
நட்சத்திர பட்டாளம்: இந்தப் படத்தில் ரஜினிகாந்த்துடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ரித்திகா சிங், துஷாரா விஜயன், மஞ்ச் வாரியர், ராணா டகுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஃபகத் பாசில் ரஜினிக்கு மகனாகவும், ராணா டகுபதிதான் படத்துக்கு வில்லன் என்றும் கூறப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.
தலைவர் 171: இந்தப் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171ஆவது படத்தில் நடிக்கிறார். இப்படி ரஜினிகாந்த் இப்போதும் படுபிஸியாக இருப்பதை பார்த்து ஒட்டுமொத்த திரையுலகும் ஆச்சரியம்தான் படுகிறது. இதற்கிடையே கெஸ்ட் ரோலில் ரஜினிகாந்த் நடித்த லால் சலாம் திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி தோல்வியை சந்தித்தது. லோகேஷ் கனகராஜ் படத்தை முடித்துவிட்டு சௌந்தர்யா இயக்கத்தில் அவர் நடிக்கலாம் என்றும் ஒரு பேச்சு ஓடுகிறது. கவிஞர் வைரமுத்து ரஜினிக்கு, 'மீசை வைத்த குழந்தையப்பா' என்று ஒரு பாடலில் எழுதியிருப்பார். அதற்கேற்றபடி குழந்தைபோல் படு சுறுசுறுப்பாக இருக்கிறார் ரஜினி.
ஒரு மணி நேரம்தான்: வயதான காலத்திலேயே இப்படி சுறுசுறுப்பாக இருக்கும் ரஜினி தனது இளம் வயதில் எப்படி இருந்திருப்பார் என்று ரசிகர்கள் பேசிவரும் சூழலில் அவர் செய்த தரமான சம்பவம் குறித்து தெரியவந்திருக்கிறது. அதாவது எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் பிரியா. முதன்முதலில் ஒரு தமிழ் சினிமாவின் ஷூட்டிங் வெளிநாட்டில் நடந்தது என்றால் அது பிரியா படத்துக்குத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தப் படத்தின் ஷூட்டிங் காலை 7 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை நடக்குமாம். ரஜினிகாந்த்தும் எந்த சலிப்பும் இல்லாமல் தொடர்ந்து நடித்துக்கொண்டே இருப்பாராம். படகு சேஸிங் காட்சி படத்துக்காக எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ரஜினிகாந்த்துக்கு நீச்சலும் தெரியாது, படகு ஓட்டவும் தெரியாது. இதனால் ரஜினிக்கு பதிலாக டூப் போட்டு அந்தக் காட்சியை எடுத்துவிடலாம் என்று முத்துராமன் முடிவு செய்திருக்கிறார். ஆனால் ரஜினிகாந்த்தோ, டூப் எல்லாம் வேண்டாம். நானே நடிக்கிறேன் என்று சொல்லி ஒரே ஒரு மணி நேரத்தில் படகு ஓட்ட கற்றுக்கொண்டாராம்.அதனயடுத்து டேக்கின்போது அதிவேகமாக படகு ஓட்டி பலத்த ஆச்சரியமடைந்தனராம்.


Click it and Unblock the Notifications











