Rajini - கையில் ஒரு கிளாஸ் விஸ்கி இருந்தால் போதும்.. என்ன ரஜினி இவ்வளவு ஓபனா பேசிருக்காரு?
சென்னை: ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். அவரது நடிப்பில் கடைசியாக ஜெயிலர் திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது. அடுத்ததாக பிப்ரவரி 9ஆம் தேதி லால் சலாம் படம் வெளியாகவுள்ளது. மேலும் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்திலும் நடித்துவருகிறார் ரஜினிகாந்த். இந்த சூழலில் ரஜினிகாந்த் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய விஷயம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவரான ரஜினிகாந்த் கடைசியாக ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. கடந்த சில வருடங்களாகவே ஹிட்டுக்கு ஏங்கிக்கொண்டிருந்த ரஜினிக்கு ஜெயிலர் நிவாரண மருந்தாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 700 கோடி ரூபாய்வரை படம் உலகம் முழுவதும் வசூலித்தது.

வேட்டையன்: ஜெயிலர் படத்துக்கு பிறகு அவர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். ஜெய்பீம் படத்தை இயக்கிய இயக்குநர் என்பதால் ஞானவேல் இந்தப் படத்தில் ரஜினியை வைத்து எந்த மாதிரியான விஷயத்தை பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதேசமயம் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான டைட்டில் டீசரை பார்க்கையில் ஒருவேளை படம் கமர்ஷியல் பாதையில் பயணிக்குமோ என்ற சந்தேகத்தை ரசிகர்கள் எழுப்பிவருகின்றனர்.
நட்சத்திர பட்டாளம்: இந்தப் படத்தில் ரஜினிகாந்த்துடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ரித்திகா சிங், துஷாரா விஜயன், மஞ்ச் வாரியர், ராணா டகுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஃபகத் பாசில் ரஜினிக்கு மகனாகவும், ராணா டகுபதிதான் படத்துக்கு வில்லன் என்றும் கூறப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. அடுத்ததாக அவர் நடித்திருக்கும் லால் சலாம் திரைப்படம் பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
தலைவர் 171: இந்தப் படத்தை முடித்துவிட்டு அடுத்தாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171ஆவது படத்தில் நடிக்கிறார். இப்படி ரஜினிகாந்த் இப்போதும் படுபிஸியாக இருப்பதை பார்த்து ஒட்டுமொத்த திரையுலகும் ஆச்சரியம்தான் படுகிறது. கவிஞர் வைரமுத்து ரஜினிக்கு, 'மீசை வைத்த குழந்தையப்பா' என்று ஒரு பாடலில் எழுதியிருப்பார். அதற்கேற்றபடி குழந்தைபோல் படு சுறுசுறுப்பாக இருக்கிறார் ரஜினி.
தைரிய ரஜினிகாந்த்: ரஜினிகாந்த் இப்போது ரொம்பவே பக்குவப்பட்டு நடந்துகொள்கிறார். ஆனால் அவர் வளர்ந்த காலத்தில் அப்படி இல்லை. மனதில் பட்டதை பட்டென்று பேசிவிடும் வழக்கம் உடையவர். அதனாலேயே அவர் சில பிரச்னைகளை சந்திக்கவும் செய்திருக்கிறார். அதில் ஒன்றுதான் தனது திருமணத்தையொட்டி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு.
என்ன நடந்தது?: லதாவை காதலித்து திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து திருப்பதியில் திருமணத்தை ஃபிக்ஸ் செய்துவிட்டார் ரஜினி. அதனை சொல்வதற்காக பத்திரிகையாளர்களை அழைத்த அவர் தனக்கு திருப்பதியில் திருமணம் நடக்கவிருக்கிறது. தயவு செய்து யாரும் வந்துவிட வேண்டாம். திருமண வரவேற்பு சென்னையில் நடக்கும். அப்போது வாருங்கள் என்று சொன்னார்.
அதற்கு ஒரு நிருபர், 'மீறி உங்களது திருமணத்துக்கு வந்தால்' என்று கேட்க; எதையும் யோசிக்காத ரஜினி, 'உதைப்பேன்' என்று பேசினார். அது பெரும் விவாதத்தை கிளப்ப தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார். பிறகு அவரிடம் ஒரு நிருபர், 'திருமணம் முடிந்து எங்கே தேனிலவு செல்லப்போகிறீர்கள்' என கேட்டதற்கு, ரஜினிகாந்த்தோ 'தேனிலவா?.. கையில் ஒரு கிளாஸ் விஸ்கி இருந்தால் எங்கும் எப்போதும் தேனிலவுதான்' என்று ஒரே போடாக போட்டார். இந்தத் தகவல்தான் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











