Nagesh - அம்மாவுக்கு கொள்ளி வைக்க முடியாமல் கதறிய நாகேஷ்.. முகத்தையும் பார்க்கல.. அவருக்கு இப்படி ஒரு சோகமா?
சென்னை: நடிகர் நாகேஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாதவர். உடல்மொழி, வாய் மொழி என அனைத்திலும் காமெடியை கலந்துகட்டி அடிப்பவர். இன்றுவரை எத்தனை காமெடி நடிகர்கள் வந்தாலும் அவரது இடத்தை நெருங்கவே முடியவில்லை என்பதுதான் உண்மை. இந்த சூழலில் அவரது வாழ்க்கையில் நடந்த உச்சக்கட்டமான சோக நிகழ்வு குறித்து தெரியவந்திருக்கிறது.
தாராபுரத்தில் கடந்த 1933ஆம் ஆண்டு பிறந்தவர் நாகேஷ். பள்ளி படிப்பை அங்கேயே முடித்துவிட்டு நாடகத்தின் மீது இருக்கும் ஆர்வத்தால் சென்னைக்கு வந்தவர் சென்னை தி.நகர் மேன்ஷனில் தங்கினார். அங்கிருந்தபடி நாடகத்தில் நடிப்பதற்கு முயன்று கொண்டிருந்தவருக்கு படிப்படியாக வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. இவருடைய ரூம் மேட்டுகளில் ஒருவர் பாடலாசிரியர் வாலி என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வர் சுந்தரம்: தொடர்ந்து நாடகங்களில் நடித்து வந்த அவர் மனமுள்ள மறுதாரம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் அந்தப் படம் தோல்வியடைந்தது. தொடர்ந்து நெஞ்சில் ஒரு ஆலயம் படத்தில் நடித்தார். அந்தப் படம் ஓரளவு பெயரை பெற்றுக்கொடுத்தது. அவரது திரை வாழ்க்கையில் திருப்புமுனையாக இருந்தது கே.பாலசந்தர் எழுதிய நாடகத்தை மையமாக வைத்து கிருஷ்ணன் -பஞ்சு இயக்கிய சர்வர் சுந்தரம் திரைப்படம்.அந்தத் திரைப்படத்தில் நாகேஷின் உடல்மொழியும், நடிப்பும் வேறு தளத்தில் இருந்தன. இதனால் அனைவராலும் கவனிக்கப்பட்டார் நாகேஷ்.
பிஸியான நடிகர்: சர்வர் சுந்தரம் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்தவருக்கு திருவிளையாடல் திரைப்படம் அடுத்த திருப்புமுனையாக அமைந்தது. அதில் சிவாஜி கணேசனுக்கு போட்டியாக நடித்து அப்ளாஸை அள்ளினார். அதேபோல் அவர் நடித்த நீர்க்குமிழி, காதலிக்க நேரமில்லை, பட்டினத்தில் பூதம், தில்லானா மோகனாம்பாள் உள்ளிட்ட பல படங்கள் மெகா ஹிட்டடித்தன. நாகேஷின் நடிப்பும் உச்சம் சென்றது.
1000 படங்கள்: நாகேஷ் கிட்டத்தட்ட 1000 படங்கள்வரை நடித்திருக்கிறார். காமெடியன், கேரக்டர் ரோல், வில்லன் என எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் புகுந்து விளையாடக்கூடியவர் நாகேஷ். இன்றுவரை யார் காமெடி செய்தாலும் அதில் நாகேஷின் உடல்மொழி கொஞ்சமேனும் வந்துவிடும். அந்த அளவு அவர் இந்த தமிழ் திரை உலகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி சென்றிருக்கிறார்.
சோகம்: இந்த சூழலில் நாகேஷின் வாழ்க்கையில் நடந்த சோகம் குறித்து தெரியவந்திருக்கிறது. அதாவது, நாகேஷ் சென்னைக்கு வந்து ரொம்பவே கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும்போது எப்படியாவது நிறைய சம்பாதித்துவிட்டு அம்மாவை சென்று சந்திக்க வேண்டும் என்பதுதான் அவரது கனவு. ஆரம்பத்தில் வாய்ப்புகள் கிடைக்காதபோது கடிதம் மூலம் அம்மாவிடம் சொல்லி பணம் வாங்கிக்கொள்வாராம்.
அப்படி அவரது அம்மா அனுப்பும் சிறிய தொகையை சேமித்து வைத்து அன்றாட செலவுகளை பார்த்துக்கொள்வாராம். ரயில்வே வேலையையும் விட்டுவிட்டதால் எப்படியாவது சினிமாவில் வென்று தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்திருக்கிறார் நாகேஷ். ஒருகட்டத்தில் வாய்ப்புகள் சரளமாக வர ஆரம்பித்து நன்றாக சம்பாதிக்கவும் ஆரம்பித்துவிட்டார் நாகேஷ்.
உச்சக்கட்ட கொடுமை: 50,000 ரூபாய் பணத்தை ஒரு சூட்கேஸில் வைத்துக்கொண்டு அம்மாவை நேரில் சந்திக்க முடிவு செய்திருக்கிறார். காரில் சென்று இறங்கினால் அம்மா இன்னும் பெருமைப்படுவார் என்று நினைத்து ஒரு காரையும் வாடகைக்கு எடுத்துக்கொண்டு சென்றாராம் அவர். ஆனால் அவர் ஊருக்கு செல்லும் வழியிலேயே அவரது அம்மா உயிரிழந்திருக்கிறார். அது நாகேஷுக்கு தெரியாது.
இவர் ஆர்வமாக ஊருக்கு சென்றவரிடம் அம்மா இறந்த செய்தியை சொல்லியிருக்கிறார்கள். உடனடியாக கதறிக்கொண்டு சுடுகாட்டுக்கு சென்றிருக்கிறார். ஆனால் நாகேஷ் ஊருக்கு வர தாமதமானதால் வேறு ஒருவர் நாகேஷின் அம்மாவுக்கு கொள்ளி வைத்துவிட்டாராம். தனது அம்மாவின் முகத்தை கடைசியில் பார்க்க முடியாமல் போய்விட்டதே என்று கதறி துடித்தாராம் நாகேஷ்.


Click it and Unblock the Notifications











