ஆட்டமா தேரோட்டமா பாடல் உருவான கதை தெரியுமா? கேப்டனுக்கே தெரியாமல் நடந்த நச் சம்பவம்!
சென்னை: கேப்டன் விஜயகாந்த்தின் புலன் விசாரணை படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் இயக்குநர் ஆர்.கே. செல்வமணி. இன்றைக்கு தென்னிந்திய சினிமாவில் மூத்த இயக்குநராக மட்டுமல்லாமல், திரைத்துறையின் மிகவும் முக்கியமான அமைப்பான பெப்ஸி அமைப்பின் தலைவராகவும் உள்ளார்.
புலன் விசாரணை படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற பின்னர், விஜயகாந்த்தின் நண்பர் ராவுத்தர் ஆள் உயர மாலை வாங்கிக் கொண்டு வந்து, ஆர்.கே. செல்வமணிக்கு அணிவித்து விஜயகாந்த்தின் 100வது படத்தை இயக்கச் சொல்லி உள்ளார். இந்த வாய்ப்பை கொஞ்சமும் எதிர்பார்க்காத ஆர்.கே. செல்வமணி, விஜயகாந்த்தை வைத்து இயக்கிய 100வது படம் தான் கேப்டன் பிரபாகரன். இந்த படத்திற்குப் பின்னர்தான் கேப்டன் என்று ரசிகர்களாலும் திரையுலகத்தினாரலும் கேப்டன் விஜயகாந்த் என்று அழைக்கப்பட்டார்.
இந்த படத்தின் இரண்டாம் பாதியில் ப்ரீ கிளைமாக்ஸ்க்கு முன்னர் வரும் பாடல் ஆட்டமா தேரோட்டமா பாடல். இந்த பாடல் முதலில் இசைஞானி இளையராஜாவால் உருவாக்கப்படவில்லை. இந்த பாடலுக்கு முன்னர் அவர் உருவாக்கி கொடுத்த பாடல் வேறு. ஆனால் அந்த பாடல் இயக்குநர் ஆர்.கே. செலவமணிக்கு பிடிக்கவில்லை. இதனால் பாடலை மாற்றி தரச் சொல்லி படத்தின் தயாரிப்பாளரான ராவுத்தரிடம் கூறியுள்ளார்.

ஆட்டமா தேரோட்டமா?: ராவுத்தரோ, இசைஞானி இளையராஜா இருக்கும் பிஸிக்கு அவரிடத்தில் என்னால் எல்லாம் சென்று லைனில் நின்று பாடலை மாற்றி வாங்கி வர முடியாது. உன்னால் முடிந்தால் செய்து கொள் என்று கூறிவிட்டாராம். உடனே ஆர்.கே. செல்வமணியோ படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் இருந்து, இசைஞானி இளையராஜாவுக்கு போன் செய்து, " சார், இந்த பாட்டுக்கு பதிலாக வேறு பாட்டு போட்டு கொடுத்தால் நன்றாக இருக்கும். எனக்கு பீட் அனுப்பினால் கூட போதும், நான் மேட்ச் செய்து கொள்கிறேன். நீங்கள் ஏற்பாடு செய்து கொடுத்தால் தான் இங்கு பாடல் காட்சியை படமாக்க முடியும், இல்லை என்றால் படப்பிடிப்பே ரத்தாகி விடும் என்று கூறி உள்ளார். இசைஞானி இளையராஜாவோ, என்னய்யா இப்படி நெருக்கடியில கொண்டு வந்து நிறுத்தறீங்க என்று தெரிவித்துவிட்டு, ஏற்பாடு செய்வதாகவும் கூறி உள்ளார்.

ஹிட்டோ ஹிட்: மறுநாளுக்குள் பாடல் வேண்டும், அப்படி இருக்கையில் பாடல் வர வாய்ப்பு இல்லை, எப்படியும் சவுண்ட் டிராக் மட்டும் தான் வரப்போகிறது என்று அனைவரும் நினைத்துக் கொண்டு இருந்துள்ளனர். இசைஞானி சொன்னது போல பாடலை தயார் செய்து, கொடுத்துள்ளார். பாடலை படப்பிடிப்புத் தளத்தில் ஒலிபரப்பியதும், பாடலின் முதல் மெட்டு ஒலித்ததுமே பாடல் ஹிட் என்று அனைவரும் கூறியுள்ளனர். இது மட்டும் இல்லாமல், பாடலை படத்தின் கதைக்கு ஏற்றவாறு வரிகளை அமைத்து பாடலை உருவாக்கி கொடுத்துள்ளார். இந்த பாடலை கங்கை அமரன் எழுத, எஸ். ஜானகி பாடி உள்ளார். இப்படித்தான் இந்த பாடல் கேப்டனின் 100வது படத்தில் இணைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











