Ilaiyaraaja: இளையராஜா கூட சண்டை போட்டுதான் ஏஆர் ரஹ்மான் கிட்ட போனேன்... ரகசியத்தை உடைத்த பிரபலம்
சென்னை: திரையுலகில் இளையராஜாவும் இயக்குநர் பாரதிராஜாவும் நெருங்கிய நண்பர்களாக வலம் வருகின்றனர்.
இருவருமே தேனி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், சிறு வயது முதலே அவர்களுக்குள் நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது.
பாரதிராஜா இயக்கிய படங்களுக்கு இளையராஜா இசையமைத்து வந்த நிலையில், கிழக்குச் சீமையிலே படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்தார்.
கிழக்குச் சீமையிலே படத்திற்கு இளையராஜா ஏன் இசையமைக்கவில்லை என இயக்குநர் பாரதிராஜா மனம் திறந்துள்ளார்.

இளையராஜாவுடன் சண்டை போட்ட பாரதிராஜா: 16 வயதினிலே படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாரதிராஜா. 1977ம் ஆண்டு வெளியான இந்தப் படம் தமிழ்த் திரையுலகில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பாரதிராஜாவின் இயக்கம், கமல், ஸ்ரீதேவி ஆகியோரின் நடிப்புடன் இளையராஜாவின் இசையும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
இளையராஜாவும் பாரதிராஜாவும் தங்களது சிறுவயது முதலே நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திரையுலகில் உச்சம் தொட்டபோதும் இருவருமே பொதுவெளியில் "வாடா போடா" என அழைத்துக்கொள்ளும் படியான நண்பர்கள். பாரதிராஜாவின் படங்களுக்கும் இளையராஜாவின் பாடல்களுக்கும் இருக்கும் ரசிகர்களைவிட, அவர்களது நட்பிற்கு பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.
பாரதிராஜா இயக்கிய கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், நிறம் மாறாத பூக்கள், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, கடலோர கவிதைகள், நாடோடி தென்றல் படங்கள் வரை எல்லாமே இளையராஜா இசையமைத்தது தான். தமிழ் திரையுலகின் நட்சத்திரக் கூட்டணியாக வலம் வந்த பாரதிராஜாவும் இளையராஜாவும் கேப்டன் மகள் படத்தில் முதன்முறையாக பிரிந்தனர்.
ஆனால், அதனைத் தொடர்ந்து பாரதிராஜா இயக்கிய கிழக்குச் சீமையிலே படத்தில் இளையராஜா இசையமைக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாரதிராஜாவோ ஏஆர் ரஹ்மானிடம் சென்றுவிட்டார். 1992ம் ஆண்டு ரோஜா படம் மூலம் அறிமுகமான ஏஆர் ரஹ்மான், முதன்முறையாக கிராமத்துப் பின்னணியில் உருவான கிழக்குச் சீமையிலே படத்திற்கு இசையமைத்தார்.

ஏஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு சரிவர மாட்டார், இளையராஜா தான் பெஸ்ட் என கிழக்குச் சீமையிலே படத்தில் நடித்த பலரும் கூறியுள்ளனர். ஆனால், பாரதிராஜாவோ இளையராஜாவிடம் செல்லமாட்டேன் என உறுதியாக கூறிவிட்டாராம். அதுகுறித்து தற்போது மனம் திறந்துள்ள பாரதிராஜா, "இளையராஜாவுடன் சண்டை போட்டு தான் ஏஆர் ரஹ்மானிடம் சென்றேன்" எனக் கூறியுள்ளார்.
மேலும், "பலரும் தன்னை கிழக்குச் சீமையிலே படத்தில் இளையராஜாவுடன் இணைய வற்புறுத்தினார்கள். ஆனால் நான் தான் முடியாது என மறுத்துவிட்டேன்" என்றுள்ளார். அதேநேரம் எல்லோருமே ஏஆர் ரஹ்மான் இசை எப்படி செட்டாகும் என நினைத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், ஏஆர் ரஹ்மான் தனது இசையால் அப்போது பதிலடி கொடுத்தார் என பாரதிராஜா கூறியுள்ளார். கிழக்குச் சீமையிலே படத்திற்குப் பின்னர், கருத்தம்மா, தாஜ்மஹால், கண்களால் கைது செய் படங்களிலும் பாரதிராஜா - ஏஆர் ரஹ்மான் கூட்டணி இணைந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











