Ilaiyaraaja: AR ரஹ்மானின் முதல் தேசிய விருது... இளையராஜா சொன்ன வார்த்தை... உண்மையை சொன்ன பிரபலம்!
சென்னை: ரோஜா மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஏஆர் ரஹ்மான், முதல் படத்திலேயே தேசிய விருது வென்று அசத்தினார். அப்போது இளையராஜா என்ன ரியாக்ஷன் செய்தார் என பிரபல இயக்குநர் மறைந்த பாலுமகேந்திரா பேசிய பேட்டி வைரலாகி வருகிறது.
இளையராஜாவின் பெருந்தன்மை
1992ல் ரோஜா திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏஆர் ரஹ்மான். முதல் படத்திலேயே தேசிய விருது வென்று திரையுலகையும் ரசிகர்களையும் மிரளச் செய்தார். அப்போது தொடங்கிய ஏஆர் ரஹ்மானின் இசைப் பயணம், இப்போது வரையும் ரசிகர்களின் மனதை சூறையாடி வருகிறது. தற்போது வரை கோல்டன் குளோப், கிராமி, ஆஸ்கர் என சர்வதேச விருதுகளையும் வென்று மாஸ் காட்டிவிட்டார்.

1992 தேசிய விருது இறுதிச்சுற்றில் தேவர் மகன் படத்துக்காக இளையராஜாவும் தேர்வாகியிருந்தாராம். ஒருபக்கம் ரோஜா படத்துக்காக ஏஆர் ரஹ்மானும், இன்னொரு பக்கம் தேவர் மகன் படத்துக்காக இளையராஜாவும் சரிக்கு சமமாக களத்தில் இருந்துள்ளனர். அப்போது இருவருக்குமே சமமான ஓட்டுகள் கிடைத்துள்ளன. இறுதியாக தேசிய விருது கமிட்டியின் தலைவராக இருந்த இயக்குநர் பாலுமகேந்திரா, தனக்குரிய இரண்டு ஓட்டுகளையும் ஏஆர் ரஹ்மானுக்கு கொடுத்துள்ளார்.
அப்படித்தான் ஏஆர் ரஹ்மான் தேசிய விருது வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மறைந்த இயக்குநர் பாலுமகேந்திரா ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதாவது முதல் படத்திலேயே ஒரு லெஜெண்ட்டுக்கு நிகராக களத்தில் நிற்கிறான் 22 வயது இளைஞன். அதுவும் அவனும் தமிழன் என்பதால் எனக்கு அது ஆச்சரியமாக இருந்தது. அதேநேரம் இளையராஜா தனக்கு நெருங்கிய நண்பன். இதனால் சில நிமிடங்கள் கண்களை மூடி யோசித்து ஏஆர் ரஹ்மானுக்கு ஓட்டு போட்டதாக கூறியிருந்தார்.
இதனை அவர் சென்னை திரும்பியதும் நேராக சென்று இளையராஜாவிடம் கூறியுள்ளார். "நீ என் நண்பனாக இருந்தாலும் ஒரு இளைஞனின் திறமைக்கு சரியான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என நினைத்தேன். அதனால் தான் ஏஆர் ரஹ்மானுக்கு தேசிய விருது கொடுத்தேன், உனக்கு கொடுக்காதது குறித்து வருத்தப்பட வேண்டாம்" எனக் கூறினாராம்.
அதனைக் கேட்ட இளையராஜா உடனே பாலுமகேந்திராவிடம், "நீ செஞ்சது தான் ரொம்ப சரியானது... ஏஆர் ரஹ்மானுக்கு விருது கொடுத்ததில் எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. அவன் வளர வேண்டிய இளைஞன்" என பெருந்தன்மையாக கூறியுள்ளார். இதனை குறிப்பிட்டுள்ள பாலுமகேந்திரா இளையராஜா மீது பலரும் விமர்சனம் வைக்கின்றனர். ஆனால் அவன் சிறந்த மனிதநேயம் மிக்கவன் என்பது என்னைப் போன்ற நெருங்கிய நண்பர்களுக்குத் தான் தெரியும் என அவர் குறித்து நெகிழ்ந்து பேசியுள்ளார். பாலுமகேந்திரா கொடுத்த இந்த பேட்டியின் வீடியோவை இளையராஜா, ஏஆர் ரஹ்மான் ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் ஷேர் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











