என் ரூமுக்குள்ள அவங்களுக்கு மட்டும் அனுமதி கிடையாது.. இளையராஜா இப்படி பட்டுனு சொல்லிட்டாரே
சென்னை: இளையராஜா என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். பல வருடங்களாக தமிழ் சினிமா இசையில் தனக்கென தனி முத்திரையை தொடர்ந்து பதித்துவருபவர் அவர். இந்தக் கால இசையமைப்பாளர்களுடன் போட்டிப்போட்டு வேலை செய்துகொண்டிருக்கிறார் அவர். அவரது இசையமைப்பில் அடுத்ததாக விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் நாளை வெளியாகிறது. பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே வரவேற்பை பெற்ற சூழலில் படத்தின் பின்னணி இசை எப்படி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது.
இசைஞானி என்று அழைக்கப்படும் இளையராஜா தமிழ் சினிமாவின் இசையின் போக்கை மாற்றி வைத்தவர். அன்னக்கிளியில் ஆரம்பித்த அவரது பயணம் 50 வருடங்களை தொடவிருக்கிறது. இத்தனை வருடங்களில் அவர் 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இத்தனை படங்கள் அவர் பணியாற்றியிருந்தாலும் ஒரு படத்தின் இசை போல் இன்னொரு படத்தின் இசை இதுவரை இருந்ததில்லை என்பதிலேயே அவருடைய தனி சிறப்பை நாம் புரிந்துகொள்ளலாம்.

விடுதலை 2:
தற்போதைய நவீன உலகத்தில் ரசிகர்களின் இசை ரசனை மாறிவிட்டாலும் அவர்கள் இளையராஜாவை விட்டு நகர்வதில்லை. எத்தனை இசையமைப்பாளர்கள் இப்போது இருந்தாலும் அவர்களுக்கெல்லாம் மணிமகுடமாக இருப்பது ராஜா மட்டும்தான். தற்கால தலைமுறையினர்கூட இளையராஜாவை வெகுவாக ரசித்து கொண்டாடிவருகின்றனர். வெற்றிமாறனும் அதற்காகத்தான் இளையராஜாவிடம் விடுதலை படத்தின் இரண்டு பாகங்களுக்காகவும் சென்றார்.
பெரும் எதிர்பார்ப்பு:
விடுதலை 2 நாளை வெளியாகவிருக்கிறது. இளையராஜாவின் இசையமைப்பில் உருவாகியிருக்கும் விடுதலை 2 பாடல்களுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. படத்தின் பின்னணி இசையை அவர் எப்படி அமைத்திருப்பார் என்பதை கேட்பதற்கும் ரசிகர்கள் உச்சக்கட்ட ஆவலோடு இருக்கிறார்கள். இதற்கிடையே அவர் சமீபத்தில் ஒரு சிம்பொனி இசையையும் எழுதி முடித்திருக்கிறார். அதனைப் பார்த்தும், கேட்டும் பலரும் ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள்.
ராஜா மீது விமர்சனம்:
இளையராஜாவை பலரும் புகழ்ந்தாலும் அவர் மீது விமர்சனங்களும் வைக்கப்படுகின்றன. அதாவது அவர் யாரையும் மதிக்க மறுக்கிறார்; அவருக்கு தலைக்கனம் அதிகம்; அவர் ஒரு வலதுசாரி சிந்தனையாளர் அதனால்தான் பாஜகவில் எம்பியாக இருக்கிறார் என்றெல்லாம் கூறுவார்கள். அதேசமயம் இளையராஜாவுக்கு தலைக்கனம் எல்லாம் இல்லை; ஒரு படைப்பாளிக்குரிய கர்வம்தான் இருக்கிறது என்று ஞானியின் ரசிகர்கள் தொடர்ந்து சொல்லிவருகிறார்கள்.
இளையராஜாவின் பேட்டி:
இந்நிலையில் இளையராஜாவின் பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், "எந்தப் பாடலுக்குமே நான் ஐந்து நிமிடங்களுக்கு மேல் கம்போஸ் செய்வதற்கு நேரம் எடுத்துக்கொண்டதில்லை. இயக்குநர்கள் சிச்சுவேஷனை சொல்ல ஆரம்பித்ததுமே நான் ட்யூனை பாட ஆரம்பித்துவிடுவேன். என்னுடைய கம்போஸிங் அறையில் இயக்குநர் மட்டும்தான் இருப்பார். தயாரிப்பாளர் இருக்கமாட்டார். அவருக்கு அனுமதி கிடையாது. பணம் கொடுப்பதற்கு மட்டும்தான் வர வேண்டும் (சிரித்துக்கொண்டே சொல்கிறார்). அவர்களை வரக்கூடாது என்று நான் சொல்லவில்லை. அவர்களால் வர முடியவில்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











