சிம்பொனி என்றால் என்ன? ராஜா ராஜா தான்.. இளையராஜாவே கொடுக்கும் உலகத்தரமான விளக்கம்!
சென்னை: இசைஞானி இளையராஜா சிம்பொனியை லண்டனில் அரங்கேற்றம் செய்துவிட்டு வந்த பின்னர் இணையத்திற்குள் நுழைந்தாலே இளையராஜாவின் சிம்பொனி குறித்த தகவல்கள் தான் வந்து குவிகிறது. இப்படி இருக்கும் போது சிம்பொனி என்றால் என்ன என்று தேடிப் படித்த அல்லது தெரிந்து கொண்ட இசை ரசிகர்கள் ஏராளம். இப்படியான நிலையில் இசைஞானி இளையராஜா தனது இசைக் கச்சேரி ஒன்றில் சிம்பொனி என்றால் என்ன என விளக்கியுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இசைஞானி இளையராஜா கடந்த 8ஆம் தேதி லண்டனில் தனது சிம்பொனியை அரங்கேற்றம் செய்தார். அப்போது தனது சினிமா பட பாடல்களையும் சிம்பொனி முடிந்து இசைத்துக் காட்டினார். இது மட்டும் இல்லாமல் இதயம் போகுதே பாடலை பாடவும் செய்தார். சிம்பொனி, தனது இசைக் கச்சேரி ஆகியவை முடிந்த பின்னர் ரசிகர்களின் கரகோஷத்தில் இசைஞானி இளையராஜா நெகிழ்ச்சி அடைந்தார். மேலும் இவரது சிம்பொனி தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வேகமாக பரவியது. சிம்பொனியை முடித்துவிட்டு தமிழ்நாடு திரும்பிய இசைஞானிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்காக அவருக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இளையராஜாவின் ஒரே சிஷ்யன் என்றால் அது இசைக் கலைஞர் லிடியன் நாதஸ்வரம் தான். இவரும் சிம்பொனி அமைத்துள்ளதாக சில தினங்களுக்கு முன்னர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இளையராஜா சிம்பொனி அமைத்ததற்கு லிடியன் நாதஸ்வரம் உதவியதாக சிலர் புகைச்சலை கிளப்பினார்கள்.

இளையராஜா: ஆனால் அந்த புகைச்சலுக்கு இளையராஜா பதில் அளித்தார். அதில் லிடியன் என்னுடைய சிஷ்யன். அவர் சிம்பொனி அமைத்துள்ளதாக என்னிடம் கொண்டு வந்து போட்டுக் காட்டினார். கொஞ்ச நேரம் கேட்ட நான் அதனை நிறுத்தச் சொல்லிவிட்டு, இது சிம்பொனி இல்லை, சினிமாவின் பின்னணி இசை போல உள்ளது. சிம்பொனி என்றால் என்னவென முதலில் தெரிந்து கொண்டு, அதன் பின்னர் சிம்பொனி உருவாக்கு எனக் கூறினேன். அவரை நான் வழிப்படுத்தி உள்ளேன் என பதில் அளித்திருந்தார்.

விமர்சனம்: இந்த விஷயம் தொடர்பாக பலரும் இளையராஜாவை கடுமையாக விமர்சித்தார்கள். அதிலும் குறிப்பாக இளையராஜாவுக்கு பொறாமை என்றெல்லாம் கூறினார்கள். இளையராஜா மீது வைக்கப்படும் விமர்சனங்கள் இன்னும் அதிகமாகிக் கொண்டே உள்ளது இப்படியான நிலையில் இளையராஜா அவரது இசைக் கச்சேரி ஒன்றில் சிம்பொனி என்றால் என்ன என்பது குறித்து விளக்கமாக கூறியுள்ளார். அதாவது, இது தொடர்பாக முதலில் நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி எழுப்பினார்.

சிம்பொனி: அதற்கு பதில் அளித்த இசைஞானி இளையராஜா, " இப்போது நான்கு கவிஞர்கள் நான்கு விதமான கவிதைகளை ஒரே நேரத்தில் கூறினால் அதனைக் கேட்க முடியுமா? ஆனால் சிம்பொனி என்பது, அப்படி இல்லை எனக் கூறிவிட்டு, மேடையில் இருக்கும் இசைக் கலைஞர்களை வாசிக்கச் சொல்கிறார். அதன் பின்னர் மற்றொரு குழு இசைக் கலைஞர்களை வேறு ஒரு மெட்டில் வாசிக்கச் சொல்கிறார். அதன் பின்னர் இரு குழுவினரையும் ஒரு சேர வாசிக்கச் சொல்கிறார். அதனைக் கவிதை எனவும் கூறுகிறார். இதுதான் சிம்பொனி எல்லா கவிதைகளும் ஒரே நேரத்தில் படிக்கப்படுகிறது. இதுதான் சிம்பொனி என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்" என கூறியுள்ளார். இது தொடர்பான பழைய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











