திரையில் மட்டும் இல்லை நிஜத்திலும் ஹீரோ.. தி.நகரில் கொலையை தடுத்து நிறுத்திய விஜயகாந்த்
சென்னை: தி.நகரில் நிஜத்தில் நடக்கவிருந்த கொலை ஒன்றை விஜயகாந்த் தடுத்திருக்கும் விஷயம் தெரியவந்திருக்கிறது.
மதுரையில் பிறந்த விஜயகாந்த்துக்கு சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற ஆசை வர சென்னைக்கு வந்துவிட்டார். எல்லோருக்கும் போல் எடுத்ததும் விஜயகாந்த்துக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்ட விஜயகாந்த் இனிக்கும் இளமை படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார்.

விஜயராஜ் டூ விஜயகாந்த்
வில்லனாக அறிமுகமானாலும் தான் ஹீரோவாக நடிக்க வேண்டுமென்பதில் தீவிர முனைப்போடு இருந்தார் விஜயகாந்த். தொடர்ந்து ஹீரோவாக நடிக்க முயன்று கொண்டிருந்தவருக்கு ஒரு சில படங்களில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் அவர் ஹீரோவாக நடித்த படம் எதுவும் ஓடவில்லை. இப்படிப்பட்ட சூழலில் தூரத்து இடி முழக்கம் படத்தில் ஹீரோவாக நடிக்க அந்தப் படம் அதிரிபுதிரி ஹிட்டடித்தது. இதனையடுத்து தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. இதற்கிடையே விஜயராஜ் என்ற பெயரை விஜயகாந்த் என்று மாற்றிக்கொண்டார்.

டாப் ஹீரோவான விஜயகாந்த்
தூரத்து இடி முழக்கம் கொடுத்த வெற்றியை தக்கவைத்துக்கொண்ட விஜயகாந்த் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார். ரஜினி, கமலின் கொடி உயர பறந்துகொண்டிருந்தபோது உள்ளே நுழைந்த விஜயகாந்த் அவர்களுக்கு இணையாக வளர்ந்தார். மேலும் பல இயக்குநர்களுக்கு முதல் படத்தை இயக்குவதற்கு வாய்ப்பும் வழங்கினார். அவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள் சினிமா கல்லூரியில் இருந்து வந்த ஆபாவாணன், அரவிந்த்ராஜ். இவர்கள் இயக்கத்தில் ஊமை விழிகள் படத்தில் நடித்து படம் பெரும் ஹிட்டாக ஒரு காரணமாக இருந்தார்.

பலரின் பசியை போக்கிய விஜயகாந்த்
விஜயகாந்த் சினிமாவில் வளர்ந்த பிறகு தான் வளர்ந்துவிட்டோம் அதோடு போதும் என நினைக்கவில்லை. மாறாக தான் பட்ட கஷ்டத்தை வேறு யாரும் படக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். அவரைப்போலவே அவருடைய நண்பர் இப்ராஹிம் ராவுத்தரும் இருந்தார். இருவரும் இணைந்துதான் சென்னைக்கு வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சூழல் இப்படி இருக்க தாங்கள் வளர்ந்துவிட்ட பிறகு தங்களது அலுவலகத்தில் எந்நேரமும் பலருக்கு சாப்பாடு கொடுத்து அவர்களின் பசியாற்றியவர்கள் இருவரும்.

வளர்த்துவிட்டவரை எப்போதும் மறக்காத விஜயகாந்த்
அதேபோல் விஜயகாந்த்திற்கு பல வெற்றி படங்களை கொடுத்தவர் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். அவர் விஜய்யை வைத்து செந்தூர பாண்டி படத்தை இயக்க திட்டமிட்டபோது விஜயகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்தால் நன்றாக இருக்கும் என முடிவெடுத்த எஸ்.ஏ.சி, விஜயகாந்த்திடம் கதை சொல்ல நேரம் கேட்டார். அப்போது கதையெல்லாம் சொல்ல வேண்டாம் என கூறி நேரடியாக எஸ்.ஏ.சி வீட்டுக்கே வந்து தம்பி விஜய்க்காக நான் நடிக்கிறேன் என கூறியவர். இப்படி தன்னை வளர்த்துவிட்டவர்களிடம் நன்றி மறக்காத சிறந்த மனிதனாகவும் விளங்கினார் விஜயகாந்த்.

திரையில் மட்டும் இல்லை நிஜத்திலும் ஹீரோ
சினிமா ஹீரோக்கள் பெரும்பாலும் திரையில் மட்டுமே ஹீரோக்களாக இருப்பார்கள். ஆனால் விஜயகாந்த் அப்படி அல்ல. அவர் நிஜத்திலும் ஹீரோ என்பதை நிரூபிக்கும்வகையில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. 1986ஆம் வருடம் விஜயகாந்த் இரவு நேர ஷூட்டிங்கை முடித்துவிட்டு அலுவலகத்துக்கு திரும்பியிருக்கிறார். அப்போது தி.நகரில் ஒருவர் கையில் கத்தியுடன் இன்னொருவரை கொல்வதற்கு விரட்டியிருக்கிறார்.
இதனைக் கண்ட விஜயகாந்த் உடனடியாக காரிலிருந்து இறங்கி கொல்லப்போனவரை விரட்டி பிடித்து அவரை அடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார். இதுபோல் நிஜத்தில் பல விஷயங்களை செய்திருக்கும் விஜயகாந்த் குறித்து பலரும் இப்போது உருக்கமாக பேசிவருகிறார்கள். அவர் விரைவில் பழையபடி உடல்நலம் தேறி ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications











